Saturday, 26 February 2022
5. சிலுவைப்பாதை.
வாழ்க்கை என்னும் பயணத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். பாதையும் பயணமும் வேறு வேறு என்றாலும் செல்லும் இடம் என்னவோ ஒன்று தான் . நீ நடந்து போக பாதை இல்லை என்று எண்ணாதே, முன்னோக்கிச் செல் பாதை தானாகப் பிறக்கும் என்பதற்கேற்ப தனக்கென ஒரு பாதையை உருவாக்கி அதில் பயணிக்க நம்மையும் அழைக்கும் இறை இயேசுவின் பாதை சிலுவை பாதை. பயணத்தில் சிறந்த பயணம் , பாதையில் சிறந்த பாதை அவருடையது. துன்பமும் துயரமும் நிறைந்த துயரபாதை அல்ல அது, துணிவையும் பொறுமையையும் தரும் பொன்னானப் பாதை.
இந்த சிலுவை பாதை வழிபாட்டு முறையானது கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. லூத்தரன் ஆங்கிலிக்கன் சபையாரிடம் அவ்வளவாக இல்லை. முதன் முதலில் புனித அசிசியார் காலத்தில் தான் இந்த சிலுவைப்பாதை வழிபாட்டு முறை கொண்டாடப்பட்டது. இயேசு பாடுகள் பட்டு இறந்த இடமான எருசலேம் செல்ல எல்லா மக்களாலும் இயலாது எனவே அந்த ஆசையை நிவர்த்தி செய்ய விரும்பி இத்தாலியில் தான் முதன் முதலில் சிலுவை பாதை வழிபாடானது ஆரம்பமானது. இயேசுவின் பாடுகளை 14 நிலைகளாக பிரித்து, சிந்திக்க தியானிக்க உதவினர். அவர் பட்ட பாடுகளையும் அந்த சூழலையும் புரிந்து கொள்ள ஏதுவாக அந்த 14 நிலைகளும் சிலைகளாக படிமங்களாக செய்யப்பட்டு அதை பார்த்து பயணிக்கும் மக்கள் தங்கள் வாழ்வை மேன்மைப்படுத்திக் கொள்ள வழி செய்தனர்.
இந்த சிலுவைப்பாதை தவக்காலங்களில் சிறப்பாக கடைபிடிக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக பெரிய வெள்ளிக்கிழமைகளில் மிகச்சிறப்பாக நடத்தப்படுகின்றது. ஒரு சில ஊர்களில் நாடகமாக நிஜ மனிதர்கள் தத்ரூபமாக அந்த நிலைகளை நடித்து காட்டி மக்களை பாஸ்கா பரவசத்தில் ஆழ்த்துகின்றனர். பக்தியான முறையில் சிலுவைப்பாதை செய்யப்படும் போது மனிதன் பரிபூரண பலனை அடைகின்றான். எனவே அவர் பயணித்த பாதையில் நம் பாதங்களைப் பதிக்க இன்று நம்மை அழைக்கிறார். நமது பாதையை நாமே தேர்ந்தெடுப்போம். ஏனெனில் நம்மையன்றி நமது கால்களால் வேறு எவராலும் நடக்க முடியாது. எனவே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் விழிப்புணர்வுடன் எடுத்து வைக்க இறைவனின் இரக்கத்தை வேண்டுவோம். நமது வானகத்தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நாமும் உடலளவிலும் உள்ளத்தளவிலும் இரக்கமுள்ளவர்களாய் வாழ , உடனிருப்பவர்களோடு இரக்கத்தைப் பகிர கருணை இறைவனின் காலடிச் சுவடுகளைப் பின் தொடர்வோம் சிலுவைபாதை வழி.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...