Friday, 25 February 2022
2. சாம்பல்
முழுமையான எரிதலின் இறுதி பொருள் சாம்பல்.
சாம்பல் தவ நிலையின் அடையாளம். தாழ்ச்சியின் அடையாளம். ஒரு பொருள் நெருப்பில் சுடப்பட்டு தன் இயல்பு நிலை, அழிந்து, உருவம் சிதைந்து தன்னையே உரமாக, காற்றில் கலக்கும் புகையாக தூசாக மாற்றும் நிலை. விபூதி புதனன்று நம் நெற்றியில் பூசப்படும் சாம்பல் இரண்டு விதமான அர்த்தங்களை நமக்கு தெளிவுபடுத்துகிறது. சாம்பல் ஒன்றுமில்லாமையின் அடையாளம். மற்றொன்று ஓங்கிய வீரியத்தின் அடையாளம். நெற்றி நமது உடலின் முதன்மையான அங்கம் வீரத்தையும் வியப்பையும் வெளிப்படுத்தும் வித்தியாசமான இடம். மனதின் குழப்பங்களும் சந்தேகங்களும் குபீரென்று கொப்பளிக்கும் இடம். இங்கு மங்கள திலகமிட்டு மகிழ்வு சேர்ப்பவர்களுமுண்டு,
மணக்கும் சந்தனமிட்டு மனதை குளிர்விப்பவர்களுமுண்டு,
இத்தகைய நெற்றியில் இடப்படும் சாம்பல் நாம் ஒன்றுமில்லாதவர்கள் வெற்று பாத்திரம் வெறுமையின் அடையாளம் தாழ்ச்சியின் அடையாளம் என்பதை உணர்த்துகிறது. சாம்பல் கொண்டு நம் நெற்றியில் வரையப்படும் சிலுவை அடையாளம் வெறுமையான நம்மை மீட்க இருப்பது இந்த திருச்சிலுவை தான் என்பதை எடுத்துரைக்கிறது.
கடந்த ஆண்டு குருத்து ஞாயிறன்று பயன்படுத்தப்பட்ட குருத்தோலைகள் பத்திரப்படுத்தப்பட்டு விபூதி தினமன்று எரிக்கப்பட்டு சாம்பல் ஆக மாறுகின்றன. சாம்பல் நோன்பின் அடையாளம் தவத்தின் அடையாளம். விவிலியத்தில் சாம்பல் 56 இடங்களில் சொல்லப்படுகின்றது. எசேக்கியல் நூல் 27;30 ல் அவமானத்தின் அடையாளமாகவும்,
லேவியர் நூல் 6;11 ல் பலியிடுதலின் அடையாளமாகவும்,
தொடக்க நூல் 37;34 ல் துக்கத்தின் அடையாளமாகவும்,
யோபு 42;6 ல் மனமாற்றத்தின் அடையாளமாகவும்
எபிரேயர் 9;13 ல் தூய்மைப்படுத்துதலின் அடையாளமாகவும் காணப்படுகிறது.
தொடக்க கால கிறிஸ்தவர்கள் சாம்பல் பூசி தங்களது தவக்காலத்தினைத் தொடங்கினர். புனிதர்களான பொலிகார்ப் மற்றும் ஐரேனியஸ் விவிலிய நிகழ்வுகளின் அடிப்படையில் இந்நாளினை சாம்பல் பூசி கொண்டாடியதாக தெரிவிக்கின்றனர். 325 ல் கூடிய நிசேயா திருச்சங்கம் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவைக் கொண்டாடும் முன் 40 நாட்கள் சாம்பல் பூசி துக்க நாட்கள் கடைபிடிப்பதை வலியுறுத்துகிறது. மேலும் 4, 5 ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த புனிதர்களான அத்தனியூஸின் விழாக்காலக் கடிதங்கள், எருசலேம் நகர் புனித சிரில், புனித முதலாம் லியோ இவர்களின் மடல்களும் கடிதங்களும் 40 நாட்கள் தவம் கடை பிடிக்க வேண்டியதன் கருத்தினை நமக்கு வெளிப்படுத்துகின்றன.
சாம்பல் உரமாக பல இடங்களில் பயன்படுகின்றது. இன்று நம்மீது பூசப்பட்ட சாம்பல் நாம் குருத்து ஞாயிறன்று பயன்படுத்திய குருத்தோலைகளின் சாம்பல். குருத்தோலை என்பது வளர்ச்சியின் வெளிப்பாடு. வீரியத்தின் வெளிப்பாடு ஒரு மரம் அல்லது செடி தான் வளர்வதை இவ்வுலகிற்கு உணர்த்தும் வெற்றியின் வெளிப்பாடு. இயேசு என்றும் வாழ்பவர். வீரியமிக்கவர். அவரது வாழ்க்கைப் பயணம் 33 ஆண்டுகளில் முடிந்தாலும் இன்றும் அவரது புகழும் வாழ்வும் வார்த்தையும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆக சாம்பல் போல நமது வாழ்வும் நமக்கும் பிறருக்கும் வளர்ச்சியை வீரியத்தைக் கொடுப்பதாக அமையட்டும். மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் என்று கூறி நம்மீது பூசப்படும் இச்சாம்பல் நமக்கு கிறிஸ்துவின் மேல் கொண்ட அன்பில் வளர்ச்சியையும், கிறிஸ்தவ மதிப்பீடுகள் மேல் நமக்கு வீரியத்தையும் உருவாக்கட்டும். மனம் வருந்துவோம் மன்னிப்பு பெறுவோம்.
சாம்பல் போல வாழ்வின் இறுதி நிலையிலும் பயனுள்ளவர்களாக வாழ்வோம். சாம்பல் போன்ற நாம் சிலுவை என்னும் மீட்பாலே மீட்கப்பெறுவோம் என்பதை உணர்வோம்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...