Friday, 25 February 2022

தவக்காலம் அருளின் காலம்

உலகமெங்கும் வாழக்கூடிய கிறிஸ்தவ மக்களால் 40 நாட்கள் கடைபிடிக்கப்படும் ஒரு காலம். . இறை வேண்டல் தவ முயற்சிகள் தருமம் செய்தல், தன்னொறுத்தல் போன்ற நற்செயல்களை ஊக்குவிக்க பயன்படும் காலம். அதிலும் குறிப்பாக பிறரன்பு செயல்கள் , நோன்பு ,செபம் என்னும் மூன்று செயல்களை அதிகமாக வலியுறுத்தும் காலம். நமக்காக துன்பங்கள் பட்டு இறந்து உயிர்த்த இயேசுவிற்காக நாம் நம்மை ஒறுத்து மேற்கொள்ளும் தவ நாட்கள் இவை. தவக்காலம்? எப்படி யார் கொண்டுவந்தது? 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த தொடக்க கால கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவை மிக சிறப்பாக ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்நாட்களில் திருமுழுக்கு பெற விரும்புபவர்கள், பெரிய பாவம் செய்தவர்கள் தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் செய்யும் விதமாக மூன்று நாட்கள் தங்களையே வருத்தி, நோன்பிருந்து, சாம்பல் பூசி தவமிருந்து தூய்மைப்படுத்திக் கொண்டனர். அதன் பின் உயிர்ப்பு பெருவிழாவிற்கு முன் உள்ள 6 வாரங்கள் பிரிக்கப்பட்டு, பாவம் செய்தவர்கள், மனம் மாற விரும்புபவர்கள் திருச்சபையோடும் கடவுளோடும் மீண்டும் நல்லுறவு கொண்டு வாழ வழி செய்யும் விதமாக, தப நாட்களாக சிறப்பிக்கப்பட்டன. ஞாயிறு தவிர மற்ற நாட்களில் தபம் அனுசரிக்கப்பட்டது. ஏனெனில் ஞாயிறு இயேசுவின் உயிர்ப்பைக் குறிக்கும் நாள். அதன்பின் இரண்டாம் வத்திக்கான் சங்கம் நிகழ்ந்த பின் அதாவது 1962- 1965 க்கு பின் பெரிய வியாழனுக்கு முந்திய நாள் வரை நோன்பு தபம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு 40 நாட்கள் தவக்காலம் என்று கருதப்பட்டது. ஏன் தவக்காலம்? நான்கு வகை பருவ காலங்கள் உலகத்தில் புழக்கத்தில் உண்டு இளவேனிற் காலம் கோடை காலம், இலையுதிர் காலம், குளிர்காலம். தவக்காலம் இதில் இளவேனிற்ககாலம் என்று அழைக்கப்படும் வசந்த காலத்தில் வருகின்றது. போர்வைக்குள் ஒடுங்கி புகலிடம் தேடிய குளிர்காலம் முடிந்து புதிய இலைகளுடன் புது வாழ்வை தொடங்க மரங்கள் எத்தனிக்கும் காலம். இதுவரை வெறுமையாய் இருந்த தன்னை சிறு இதழ்கள் மூலம் அலங்கரிக்க தொடங்கும் காலம். இன்னும் நான் இருக்கிறேன் என்பதை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்தும் காலம். மரங்கள் போல நமது வாழ்வும் வசந்தத்தை நோக்கி வண்ண நடை போட வாய்ப்பளிக்கும் காலம் இத்தவக்காலம். இயேசுவின் வாழ்வில் தபம் . இயேசு தன்னுடைய எல்லா செயல்களையும் தொடங்குவதற்கு முன் தனித்திருந்து செபித்தார் தன்னுடைய 12 வயதில் இறைவேண்டலையும் இறைப்பிரசன்னத்தையும் தேடத் தொடங்கிய இவர் இறுதி வரை தபத்தையும் தனி செபத்தையும் ஒரு போதும் கைவிடவில்லை. பணி தொடங்குவதற்கு செபத்தில் முன் தனித்திருந்தார். புதுமைகள் செய்ய தொடங்கும் முன்னும், செய்து முடித்த பின்னும் இறை செபத்தில் தனித்திருந்தார். தனிமையில் ஒருவருடன் பேசுவதற்கும் கூட்டத்தினர்க்கு மத்தியில் பேசும் போதும் தனித்திருந்து தன்னுடைய செப ஆற்றலைப் பெருக்கிக்கொண்டார். இயேசு தான் வாழ்ந்தது போல நம்மையும் வாழச்சொல்கின்றார். வாழ்ந்து காட்டி விட்டார். வாழ அழைக்கின்றார். அருளை அள்ளித் தாரும் இத்தவக்காலத்தில் தனி செபத்திலும் ஒறுத்தலிலும், பிறரன்பு பணிகளிலும் நம் நேரத்தை செலவிடுவோம். தவக்காலத்தை அருள் தரும் காலமாக மாற்றுவோம். தானங்கள் செய்வோம் பிறரை அன்பு செய்ய. நோன்பு விரதங்கள் இருப்போம் நம்மை அன்பு செய்ய, செபத்தில் நிலைத்திருப்போம் இறைவனை அன்பு செய்ய. ஆக தானம் நோன்பு செபம் அனைத்தும் வலியுறுத்துவது அன்பையே. தவக்காலம் அன்பை வலியுறுத்தும் காலம். அன்பில் நிலைத்திருப்போம். அன்பால் நிலைத்திருப்போம். தவக்காலம் என்னும் வசந்த காலம் வாழ்வில் வளமையை அள்ளித்தரட்டும்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...