ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும் அன்னை போல் நம்மை அன்பு செய்ய இவ்வுலகில் யாருண்டு. வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் சோதனைகளில் அவரின் அருகிருப்பும் ஆலோசனையும் ஆயிரம் யானை பலம் தருவதுண்டு. அன்னைக்கே இத்தனை சிறப்பென்றால் அன்னை மரி அன்னையர்க்கெல்லாம் மாதிரிகை முன்னோடி. அவரின் ஆறுதலுக்கும் அரவணைப்பிற்கும் அகில உலக அன்னையர் அன்பு தலைவணங்கும். இத்தகைய அன்னை மரி மேல் கொண்ட அன்பினாலும் ஆழ்ந்த பக்தியினாலும் துறவுவாழ்வில் சிறப்புற்று திகழ்ந்தவர் இன்றைய நாளில் நாம் நவநாள் சிறப்பிக்கும் புனித அலெக்சிஸ் . அன்னை மரி மேல் இவர் கொண்ட பக்தி நமது வாழ்வில் எவ்வாறு மிளிர வேண்டும் என்பதை எடுத்துரைக்க வருகின்றார் அருட் தந்தை டென்னிஸ் அவர்கள் உரோமாபுரியின் மரியானோ இல்லத்திலிருந்து,,,
https://www.youtube.com/watch?
வார்த்தையிலும் வாழ்க்கையிலும் மிகச்சிறந்த சொல் அம்மா. எதிர்பார்ப்பில்லா உறவின் அடையாளம் அம்மா. அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல வாழ்வின் சாரம். அன்னை மரியாள் மேல் கொண்ட பக்தியால் தனது துறவு வாழ்வில் நீடித்து நிலைத்து நின்றார் நம் புனிதர் அலெக்சிஸ். குழந்தை இயேசுவை நோக்கி தம் கை களை நீட்டுவது போலவும், அவரிடம் இருந்து மலர் வளையம் பெறுவது போலவும் இருக்கும் படங்கள் நம் புனிதரை அடையாளப்படுத்துகின்றன. இதனை அன்னை மரி மேல் கொண்ட அன்பிற்கு அவர் தம் அன்பு மகன் தரும் பரிசு என்று சொன்னால் கூட மிகையாகாது. ஆண்டுகள் பல கடந்தாலும் நம் அன்னைக்கு நாம் என்றும் குழந்தைகள் தான்.
அவர் மீது நாம் காட்டும் அன்பே பக்தியாக பக்தி முயற்சியாக வெளிப்படுகின்றது. சாதாரண மக்களே அன்னைமரி மீது அளவற்ற பக்தி கொண்டிருக்கும் போது நாம் அன்னை மரியின் ஊழியர்கள் . எனவே அவர் மீதான அன்பு நம்மில் அதிகமாக இருப்பது இயல்பு. இதற்கு காரணமும் அன்னையே.
இறைவனை அன்பு செய்து, இறை விருப்பத்தை நிறைவு செய்து, இறைவனுக்கு பணி செய்தவர் நம் தாய். அவர் அன்று கற்பித்ததை இன்று நம் வாழ்வில் பயிற்சிக்கின்றோம். நமது புனிதர் அலெக்சிஸ் போல அன்னை மரி மேல் அளவற்ற பக்தி கொண்டு அவரின் பாதுகாப்பில் நம் வாழ்வை ஒப்படைப்போம். இறைவனை எவ்வாறு முழுமையாக அன்பு செய்வது என்பதை தன் வாழ்வால் எண்பித்த அன்னை மரியாள் போல அவரின் ஊழியர்களாகிய நாமும் செயல்படுவோம். ஆகட்டும் என்ற ஒற்றை சொல்லால் அகிலத்தை அரவணத்த நம் தாய் போல நம் வாழ்வாலும் பணியாலும் அன்னை மரியின் பக்தியை அகிலமெங்கும் பரப்புவோம்.