Tuesday, 6 September 2022

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

 கல்லாய் இருந்தால் காலில் மிதிபட்டு காணாமல் போய் விடுவோம் என்று எம்மை கற்சிலையாய் கண்ணொளிரச்செய்யும் வைரமாய் மாற்றியவர்கள் ஆசிரியர்கள். கற்பிப்பதை நீங்கள் விரும்பியதால் கற்றலை யாம் விரும்பினோம். பெற்றோருக்கு அடுத்த படியாய் எம்மில் அன்பு அரவணைப்பு அக்கறை காட்டியவர்கள். தன்னிடம் பயில்பவன் தன்னை விட அதிக உயரத்திற்கு வர வேண்டும் என்று விரும்பும் ஒரே உள்ளம் ஆசிரியப் பணி புரியும் உங்கள் உள்ளமே. ஒரு மருத்துவர் மருத்துவரை மட்டுமே உருவாக்க முடியும் ஒரு காவல் துறை அதிகாரி மற்றோரு காவல் துறையாளரை உருவாக்க முடியும் இப்படி அந்தந்த தொழில் செய்பவர்கள் அவரவர் தொழில் சார்ந்தோரை மட்டுமே உருவாக்க முடியும் ஆனால் ஆசிரியர்களாகிய நீங்கள் மட்டுமே இவ்வுலகின் அனைத்து துறையினரையும் உருவாக்கும் ஆசீர் பெற்றுள்ளீர்கள் அரசியல்வாதி முதல் அடிமட்டத்தொண்டன் வரை நிறுவனத்தலைவர் முதல் நிவாரணம் கேட்கும் தொழிலாளி முதல் அனைவரையும் உருவாக்கும் திறன் பெற்றவர்கள் நீங்கள். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் உங்களை நினைத்து வாழ்த்துகின்றோம் என்று வாழ்த்தினால் போதாது அதனால் ஆயுள்வரை உம்மை நினைத்து போற்றுகின்றோம். தான் படித்த பள்ளி நாள்களை நினைவுகூறும் ஒவ்வொருவரும் ஏதாவதொரு ஆசிரியரைப் பற்றி அந்த நேரம் கண்டிப்பாக நினைப்பார். பள்ளி நாட்களை பதின்பருவ நினைவுகளை பசுமையாய் ஆக்கியது உங்களின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் தான். ஆசிரியர்களாகிய நீங்கள் கற்றலுக்கு வழி சொல்லும் ஆசான், குடும்ப சூழலுக்கு ஆறுதல் தரும் மருத்துவர், நட்பின் சிக்கல்களை தீர்த்துவைக்கும் நீதிபதி, எமக்காய் வழக்காடும் வக்கீல், அரவணைக்கும் தாய், ஆலோசனை தரும் ஆன்மீகவாதி, எம் திறமைகளை செதுக்கிய சிற்பி, நல்ல வடிவம் கொடுத்த குயவன், வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திய மந்திரவாதி,என எம் வாழ்வில் எல்லாமுமாய் நீங்கள் . அனுதினமும் நினைக்கின்றோம் உங்களை, பாலைவனமாய் இருந்த எங்ககளை விளை நிலமாக மாற்றிய உம் கருணையையும் உழைப்பையும் அனுதினமும் கொண்டாடி மகிழ ஆசை தான் . ஆனால் எங்கள் வாழ்வால் நினைவுகூறுகின்றோம்.

பட்டமாய் எம்மை உயர்த்தி அதனை உயரே பறக்க வைக்கும் நூலாய் உம்மை மாற்றி சந்தர்ப்ப சூழல் என்னும் காற்றின் திசை அறிந்து எம்மை உயர்த்தியவர்கள் நீங்கள். அறிவென்னும் விளக்கை ஏற்றி அன்பென்னும் வழிகாட்டி எம் மரியின் ஊழியர் சபை சகோதரிகளால் நடத்தப்படும் பள்ளிகளியிற்றுவித்து ல் பயிற்றுவித்து இன்று நல்லாசிரியர் விருது பெற்று தன்னையும் தான் சார்ந்த பள்ளியையும் பெருமைப்படுத்தும் எம் ஆசிரியர்களை வாழ்த்தி பாராட்டுவதில் பெருமையும் பேரானந்தமும் அடைகின்றோம்.
நல்ல குறிக்கோளையும் சமுதாய உணர்வுகளையும் இனிவரும் காலங்களிலும் இளைய மாணவர்கள் மனத்தில் விதைத்து விருட்சங்கள் பல காணவும் விதையுள்ள பழங்களைத் தரும் மாணாக்கர் சமுதாயத்தை உருவாக்கவும் மனதார வாழ்த்துகின்றோம். உம் தன்னலமில்லா பணிக்கு கிடைத்த ஒரு சிறு பரிசே இந்த நல்லாசிரியர் விருது. உமது ஒப்பற்ற் சேவைக்கு ஓராயிரம் நல்லாசிரியர் விருது கொடுத்தாலும் தகுமே. நம்பிக்கையின் தீபமாய் நல்ல ஆலோசனை தரும் நண்பராய் இருந்து பலரின் வாழ்விற்கு வெளிச்சம் தந்த உங்களின் வாழ்வு இறையருளால் நிறைக்கப்பட தொடர்ந்து வேண்டுகின்றோம்.
துன்புறுவோருடன் உணர்வால் ஒன்றித்தல் என்பதனை தங்களின் நோக்கமாக, கருணையைத் தனிவரமாக, கற்பித்தலை முக்கியமான முதன்மையான பணியாகக் கொண்டு செயல்படும் எம் புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாகிய நீங்கள் எம்மைப் போலவே கருணையும் கனிவும் கொண்டு செயல்படுவது யாம் பெற்ற பெரும்பேறு. ஊழியர்களின் அன்னையாம் புனித வியாகுல அன்னையை போல வீரத்துடனும் விவேகத்துடனும் செயல்பட்டு வினோதங்கள் புரியும் உங்களை ஆசிரியர் தினமாகிய இன்று வாழ்த்திப் பாராட்டி மகிழ்கின்றோம்.
எங்களுக்கு எப்படி ரசிக்க வேண்டும் என்று கற்றுத்தந்தவரும் நீங்கள் தான் பிறர் ரசிக்கும்படி எப்படி வாழவேண்டும் என்றுக் கற்றுத்தந்தரும் நீங்கள் தான் . உங்கள் ரசனையில் உங்களை ரசிக்கவைத்த ரசிக்கும்படி வாழவைத்த அத்தனை ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். 

உறவாக உணர்வாக உடைமையாக இயேசு

பொதுக்காலத்தின் 23 ஆம் ஞாயிற்றில் இருக்கும் அன்பு இறைமக்களாகிய நாம் அனைவரும் இயேசுவைப் பின்பற்றும் உண்மையுள்ள சீடர்களாக வாழ இன்றைய நாளின் வாசகங்கள் வழியாக இறைவன் அழைக்கின்றார். உண்மையான இயேசுவின் சீடர்கள்  என்பவர்கள்  உறவாக உணர்வாக உடைமையாக இயேசுவைக் கொண்டு வாழ வேண்டுமென்று வலியுறுத்தி ஞானத்தின் மூலம் மீட்படைய வழி சொல்கின்றார்.

தன்னைப் பின்தொடர்ந்து வந்த ஏராளமான மக்களை திரும்பிப் பார்த்த இயேசு தனக்குரிய சீடர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். தாய் தந்தையர்களை தன்னை விட மேலாக கருதுபவர்கள், தம் சிலுவையை தூக்க மறுப்பவர்கள், உடைமையை விட விரும்பாதவர்கள் போன்றோர் தனக்கு சீடராக இருக்க தகுதியற்றவர்கள் என்கின்றார். மாறாக உறவு உணர்வு உடைமை என எல்லாமாக தன்னை நினைப்பவன் மட்டுமே சீடனாக வாழ முழுத் தகுதியுடையவன் என்று வலியுறுத்துகின்றார்.

உறவாக இயேசு.

நாம் வாழும் இவ்வுலகில் ரத்த உறவுகளும் எந்த சூழ்நிலையிலும் நம்மை விட்டுக் கொடுக்காத நட்புறவுகளும் கட்டாயம் தேவை. உயிரும் உணர்வும் கலந்த இவ்வுறவு பல நேரங்களில் கடவுளன்பை விட மேலானதாக கருதப்படுகின்றது. கடவுளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய பல நேரங்கள் இந்த உறவு முறைகளுடனான பொழுதுபோக்கில் காணாமல் போகின்றன. கடவுளா உறவா என்று வரும்போது இக்காலகட்டத்தில் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். கடவுளன்பினால் தான் இத்தகைய உறவுகள் வந்தன என்றும் இனி வரப்போகும் உறவுகளும் அவராலே வந்து நிலைபெறப் போகின்றன என்றும் எண்ணாதவர்கள் தான் இத்தகைய உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

 நம்முடைய உறவுகள் கடவுளோடு நாம் கொண்டுள்ள உறவை வளர்ப்பதாக இருக்கவேண்டுமே தவிர பாதிப்பதாக ஒரு போதும் இருக்கக் கூடாது. தாய் தந்தையர் சகோதர சகோதரிகள் நண்பர்கள் அனைவரும் கடவுளன்பின் சுவையை நாம் உணர நமக்குக் கடவுளால் கொடுக்கப்பட்டவர்கள் என்று உணர்ந்தோமானால் நம் வாழ்வு செழிப்படையும். அடிமையாகிய ஒபேசினுவிற்கு பவுலடியார் காட்டிய அன்பு போல நமது அன்பும் பலுகிப்பெருகும். கடவுளன்பை அதிகமதிகமாக சுவைத்து அதனைப்  போதனைகள் வழியாகப் பிறருக்கும் கொடுத்த புனித பவுலடியார் அடிமை ஒபேசினுவைப் பற்றி அவரது தலைவன் பிலமோனிற்கு எழுதும் கடிதத்தில் இதயத்திற்கு ஈடாக சகோதரனுக்கும் மேலாக கருதி தன்னை ஏற்பது போல் அவரையும் ஏற்க சொல்லி எழுதுகின்றார். இதனையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்! 17எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வதுபோல் அவனையும் ஏற்றுக்கொள்ளும். என்று பிலமோனுக்கு எழுதியக் கடிதத்தின் வழியாக  வாசிக்கக்கேட்டோம். கடவுளின் உறவை உலகிலுள்ள உறவுகளில் எல்லாம் மேலான உறவாக புனித பவுலைப் போல நினைப்பவர்களே உண்மையான சீடர்கள் என்று வலியுறுத்துகின்றார் இயேசு.

2. உணர்வாக இயேசு.

மனிதர்களாகிய நாம் பல உணர்வுகளால் நிறைக்கப்பட்டுள்ளோம். மகிழ்ச்சி பெருமிதம் வெட்கம் கோபம் கவலை போன்ற உணர்வுகளின் நிலை அதிகமாகும் போது நம்முடைய இயல்பு நிலையில் இருந்து மாறி செயல்படுகின்றோம். உணர்வுள்ள மனிதனே உண்மை மனிதன். எவரொருவர் நம்முடைய உணர்வுகளோடு நம்மை மதித்து அன்பு செய்து ஏற்றுக் கொள்கின்றாரோ அவருடனான உறவு காலத்திற்கும் அழியாது நிலைத்திருக்கும் என்பர். இப்படிப்பட்ட உணர்வுகளின் அடிப்படையாக ஆணிவேராக இயேசு இருந்து செயல்படும்போது நம் வாழ்வு முற்றிலும் மாற்றம் பெற்ற வாழ்வாக இருக்கும்.

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது. என்று கூறுவதன் வழியாக  சிலுவையைத் தூக்கிக் கொண்டு பின்தொடர்பவனே உண்மையான சீடன் என்று வலியுறுத்துகின்றார். சிலுவையைத் தூக்க முதலில் உடலில் பலம் மனத்திடம் நல்ல மன நிலை வேண்டும் இவை இல்லாமல் சிலுவையைத் தூக்க முயற்சிப்பவரால் இறுதிவரை அவரைப் பின் செல்ல முடியாது.  என்னால் தான் சுமக்க முடியும் என்ற ஆணவமோ என்னால் தூக்கவே முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டால் அவரது சீடராக இருக்க முடியாது. இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்படுவது போல நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை; நம்முடைய திட்டங்கள் தவறக்கூடியவை. அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது. நம்முடைய உணர்வுகள் எல்லாம் இயேசுவாக இருக்கும் போது எண்ணங்களும் திட்டங்களும் சிறப்பாக அமையும். நமது உடலைக் கடந்து ஆன்மா இறைவனில் இன்புற்று மகிழும்.

3. உடைமையாக இயேசு.

ஒரு மனிதன் இவ்வுலகில் இன்பமாக வாழ அடிப்படை உரிமைகளும் உடைமைகளும் தேவை. ஆனால் அடிப்படையான இவ்வுலகப் பொருட்களை சில நேரங்களில் கட்டாயத் தேவையாகக் கருதிக் கொண்டு செயல்படுகின்றோம். உதாரணத்திற்கு தொலைபேசி  தொலை தூரத்தில் இருக்கும் நம் உறவுகளை வலுப்படுத்த தொடக்க காலகட்டத்தில் பயன்படுத்தப் பட்டது. காலப் போக்கில் நம்முடைய அன்றாட வாழ்வின் அத்தியாவசிய தேவையாக மாறி இன்று சிலருக்கு சுவாசமாகவே மாறி விட்டது. கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிந்து பழக்கப்பட்டவர்களுக்கு அது அணியாமல் வெளிய செல்வது ஏதோ உடையணிவதில் ஏதோ மறதி ஏற்பட்ட உணர்வு அது போல தொலைபேசியை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு அது இல்லாமல் வெளியே பயணிப்பது என்பது உடல் உறுப்பில் ஒன்று இல்லாமல் பயணிப்பது போல் உணர்வைத் தரும் அந்த அளவிற்கு உடலோடு ஒட்டிக் கொண்டு நம்முடன் பயணிக்கின்றது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் மேல் ஆசை பற்று உண்டு. சிலருக்கு உடையில் சிலருக்கு உடைமையில். இப்படி உலகப் பொருட்களின் மேல் பற்றும் ஆசையும் கொண்டு செயல்படுபவர்களால் இயெசுவைப் பின்பற்றும் உண்மையான சீடர்களாய் இருக்க முடியாது. நமது பற்று ஆசை எல்லாம் பற்றற்ற இயேசுவின் மேல் இருக்கும் போது நாம் கடவுளிடமிருந்து வரும் உண்மையான ஞானத்தை பெற்று அவரது சீடர்களாக மாறுகின்றோம். ஞானம் என்னும் மெய்யறிவு என்பது கடவுளிடம் இருந்து கிடைக்கப்பெறுவது அது கிடைக்க நாம் அதிகமாக செபிக்கவேண்டும் . இது தெரியாமல் சிலர் உலக அனுபவத்தினால் கிடைக்கக் கூடிய அறிவு தன்னுடைய சொந்த கடின உழைப்பினால் கிடைத்தது என்று எண்ணி பெருமிதம் கொள்கின்றனர். இத்தகைய பெருமிதம் கொள்வதும் ஒருவகையில் உலக அறிவை உடைமையாகக் கொள்வவதற்கு சமம் ஆக உடைமையாக இயேசுவைக் கருதுபவர்களால் மட்டுமே அவரது உண்மை சீடர்களாக இருக்க முடியும்.

எனவே அன்பு உள்ளங்களே உறவாக உணர்வாக உடைமையாக இயேசுவைக் கோண்டிருப்பவர்களாக மாறுவோம். அவரே நம் வாழ்வின் எல்லாம் என உணர்ந்து செயல்படுவோம் இறைவன் நம்மையும் நம் குடும்பத்திலுள்ள அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து வழி நடத்துவாராக ஆமென்        

Tuesday, 7 June 2022

உலகப் பெருங்கடல் தினம்.

இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வணக்கம் அன்பு உள்ளங்களே ஜூன் 8 உலகப் பெருங்கடல் தினம். நாம வாழ்ற இந்த பூமி பந்து 70 % கடல் நீராலானது. சொல்லப்போனா நிலப்பரப்ப விட நீர்ப்பரப்பு  தாங்க அதிகமா இருக்கு. நாம வாழ்றதுக்கு கடல் ஒரு முக்கியமான பங்கு வகிக்குது நு சொன்னா மிகையாகாது. கண்டங்களை ஒன்னா இணைச்சு வாணிபம் செய்யவும், பல நாடுகளுக்கு இடையே போக்குவரத்தும் செய்யவும்  கடல் தான் துணையா இருக்குது. கடல் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யுறது மட்டுமில்லாம, ஆக்சிஜன் உயிர் வாயுவை உற்பத்தி செய்யவும், பல மருந்துகளோட மூலப்பொருட்களுக்கு காரணமாவும் இருக்கு.  கால நிலை மாற்றத்தை சீரமைக்கவும், குறிப்பா கடல்கரையோரம் வாழும் மீனவர்களோட மிகப்பெரிய வாழ்வாதாரமாவும் கடல் தான் இருக்கு.  

இந்த உலகப்பெருங்கடல் தினம் கொண்டாடப்படணும் கிறது முதன் முதல்ல 1992 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டுச்சு. ஆனா அதுக்கு முன்னாடி 1980 ல அர்ஜெண்டினாவ சேர்ந்த என்ரிக் ஜோர்மில்லா கிறவர் உலகத்துக்கு ஒரு முக்கியமான உண்மையை எடுத்து சொன்னார். அது என்னன்னா, புவி வெப்பமயமாதல் மூலமா மனித குலத்துக்கு ஆபத்து வர்றது எல்லாருக்கும் தெரிஞ்சது. ஆனா கடல் முலமாவும் ஒரு ஆபத்து வரப் போகுதுன்னு சொன்னார். உலகத்தின் தெற்கு பகுதியில் இருக்கக்கூடிய பனிப்பாறைகள் உருக ஆரம்பித்து விட்டன. இதனால் கடலின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது மனித குலத்திற்கு பேராபத்து நு சொன்னார் அவர் சொன்னதை அப்ப யாரும் கேட்கல. அதுக்கு அப்புறம் ஏற்பட்ட கால நிலை  மாற்றமும், சுழலும் இந்த உலகத்துல அந்த விழிப்புணர்வைக் கொண்டு வர ஆரம்பிச்சது. அப்புறமா 1992 ஆண்டு பிரேசில் ல  உள்ள ரியோ டி செனிரோ ல நடந்த உலக உச்சி மாநாட்டுல கனடா தான் முதன் முதல்ல இந்த தினம் கொண்டாடப்படணும், கடல் வளங்கள் பாதுகக்கப்படணும்னு வலியுறுத்துச்சு. அதுக்கு அப்புறம் அதிகாரபூர்வமற்ற முறையில உலகத்துல பல இடங்கள்ல இந்த தினம் கொண்டாடப்பட்டுச்சு. 2008 ஆம் ஆண்டு தான் ஐக்கிய நாடுகள் அவை இந்த நாளை அதிகாரப் பூர்வமா அறிவிச்சு அங்கீகரிச்சாங்க. அன்னையில இருந்து இன்னைக்கு வர ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ம்தேதி உலகளாவிய அளவில பெருங்கடல் திட்டம் கிற அமைப்பினால ஒருங்கிணைக்கப்பட்டு இந்த நாள் உலக பெருங்கடல்கள் தினமா கொண்டாடப்பட்டு வருது.  

இந்த தினம் கொண்டாடப்படுறதுக்கான நோக்கம். 

    நமக்கு ஏராளமான நன்மைகளை  செய்யுற கடல்களை பாதுகாக்கவும், கௌரவிக்கவும் இந்த உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுது. நெகிழி நு சொல்லப்படுற பிளாஸ்டிக் நால கடல் தன்னுடைய இயல்பு நிலையை நாளுக்கு நாள் இழந்துகிட்டே வருது. பிளாஸ்டிக் கழிவுகளை கடல்ல கொட்டும் போதும், கழிவு நீர்பாதைகள் கடல சென்றடையும் போது அதுல உள்ள பிளாஸ்டி கழிவுகள் அதிகமாகி நாளடைவில அது சிறிய துணுக்குகளா மாறுது  . இந்த துணுக்குகள் கடல்ல வாழ்ற நுண் உயிரினங்கள் சாப்பிட்டு இறக்க நேரிடுது. அது மட்டுமிலாம கடல் உணவு வகைகளை சாப்பிடுற நமக்கும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துது. கடல் மட்டுமில்லங்க இயற்கை எல்லாமே நாம அத எவ்வளவு தான் அசுத்தம் படுத்தினாலும் தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கும் . கடல் ல வாழ்ற கடல்பாசி, கிரில்ஸ் இரால்கள் அபவளப்பாறைகள் மீன்கள் எல்லாமே கடல்ல சேர்ற கழிவுகளை சாப்பிட்டு கடலை சுத்தப்படுத்துற வேலையை செய்யும். ஆனா நாம கொட்டுற பிளாஸ்டிக் இந்த உயிரினங்களையே கொன்னுடும். அதிகமான வாழ்நாள் கொண்ட ஆமை போன்ற உயிரினங்கள் இனம் அழியக் காரணமும் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் தான். 

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள்ல இந்த தினம் கொண்டாடப்படுது. அந்த வகையில  "நிலையான பெருங்கடல் புதுமைப்புனையுன் உறுதியளிப்பு" தான் இந்த ஆண்டு கருப்பொருள்  . அதாவது புதுமைகள் புதிய முயற்சிகள் செய்வோம் கடல் வளத்தை பாதுகாப்போம் மேம்படுத்துவோம் நு மனிதர்களாகிய நாம  நிலையான பெருங்கடலை உருவாக்குவோம் நு எடுக்கிற ஒரு உறுதியளிப்பு. 2020 ல இருந்து 2030 வரை இந்த கருப்பொருளோட தான் இந்த நாள் கொண்டாடப்படணும்னு ஐக்கிய நாடுகள் அவை வலியுறுத்துறாங்க. கடல் வளங்களை அபிவிருத்து செய்யவும், பெருங்கடல் விஞ்ஞானத்திற்கு முன்னனி வகிக்கவும் முயற்சி எடுக்கிற இந்த கால கட்டத்துல இந்த கருப்பொருள் மிகவும் பொருத்தமானதுன்னும் எல்லாராலயும் ஏற்றுக் கொள்ளப்பட்டுச்சு.   இன்னைக்கு வர ஏராளமான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் செஞ்ச்சு நம்ம கடல் வளத்தை பாதுகாத்துட்டு வர்றோம். 

கடல் தான் இந்த உலகத்தோட குளிர்சாதனப் பெட்டி . வானம் அழகா நீலக்கலர்ல தெரியக் காரணமே இந்த கடல் தான். தன்னோட நீர்ல மூணுல ஒரு பங்கு நீரை மழையா மாத்தி பூமியை குளிர்விக்கிறதும் கடல் தான். இப்படி நம்மை எப்பவும் குளிர்ச்சியா ஆரோக்கியமா வச்சிருக்கிற கடலை நாமும் ஆரோக்கியமா பாத்துக்க வேண்டியது நம்ம கடமை. இந்த நல்ல நாள்ல கடலை நம்பி வாழ்ற மீனவர்களையும், கடலோட வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உதவுற எல்லா அன்பர்களையும் வாழ்த்துவோம். சூரிய உதயத்தையும் மறைவையும் அழகா காட்டி நமக்கு சந்தோசத்தை கொடுக்குற கடல நாம சந்தோசப்படுத்துவோம். கடலைப் பாதுகாப்போம் கடல் வாழ் உயிரினங்களை வலுப்படுத்துவோம். அனைவருக்கும் இனிய உலக பெருங்கடல் தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வழியா உங்களை மீண்டும் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.   

Monday, 6 June 2022

உலக உணவு பாதுகாப்பு தினம்.

 இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வணக்கம் அன்பு உள்ளங்களே . ஜுன் 6 உலக உணவு பாதுகாப்பு தினம்.  நமக்கு உடம்புல திடிர்னு தலைவலி வயிறு வலி கால்வலினு எது வந்தாலும் மருத்துவரோ அல்லது வீட்டில இருக்கிற அனுபவசாலிங்களோ முதல்ல கேட்குறது நேத்து நைட் என்ன சாப்பிட்ட ந்னு தான். ஏன்னா பாதுகாப்பு இல்லாத சுத்தமில்லாத ஆரோக்கியம் இல்லாத உணவு நால தாங்க எல்லா நோயும் வருது. இந்த விழிப்புணர்வை  மக்களுக்கு கொடுக்கணும்னு தான் இந்த உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுது.     

உலக சுகாதார அமைப்பு மற்றும்  ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இணைந்து உலக உணவு பாதுகாப்பு தினத்தை கொண்டாட ஆரம்பிச்சாங்க. எல்லா வயசுல உள்ளவங்களையும் குறிப்பா குழந்தைகளை தாக்குற முக்கியமான வியாதிகள் எல்லாமே பாதுகாப்பற்ற உணவினால தான் நடக்குதுனு தெரிஞ்சி அதை தடுக்க நினைச்சாங்க. குறைந்த வருமானம் கொண்ட நாட்டு மக்களையும் அதிகமா பாதிச்சு உலகளாவிய சுமையைக் கொடுக்கிறதும் இந்த உணவு பாதுகாப்பின்மை தான்னு உணர ஆரம்பிச்சு இந்த நாள் 2018ஆம் ஆண்டுல இருந்து கொண்டாடப்பட்டு வருது. 2020 ஆம் ஆண்டுல தான் உலக சுகாதார சபை உணவுப் பாதுகாப்பிற்கான உலகளாவிய முயற்சிகளை எடுத்து அதை வளுப்படுத்துறதுக்கான பல தீவிரமான முயற்சிகளையும் எடுத்தாங்க. 

பாதுகாப்பற்ற உணவால 200 க்கும் அதிகமான நோய் வகைகள் உருவாகுதாம். 10 ல ஒருத்தர் இந்த வியாதியினால பாதிக்கப்படுறாங்க. அந்த வகையில் பார்த்தா ஒரு வருசத்துக்கு 4.2 லட்சம் பேர் இறக்குறதா புள்ளி விவரம் சொல்லுது. 

 பாதுகாப்பான உணவும் அதன் உற்பத்தியும் நுகர்வும் நாட்டோட பொருளாதாரத்திற்கு அதிகமா உதவுறத கண்டறிஞ்சி இந்த நாளை மிகசிறப்பா கொண்டாட ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருள்ல இந்த தினம் கொண்டாடப்படுது. நாளைய ஆரோக்கியத்திற்காக இன்றைய பாதுகாப்பான உணவுங்கிறது தான் இந்த ஆண்டிற்கான கருப்பொருள். 

உணவுப் பாதுகாப்புங்கிறது அரசாங்கம், உற்பத்தியாளர்கள், நுகர்வோர் நு எல்லோருடைய கூட்டுப் பொறுப்பு. நாம சாப்பிடுற சாப்பாட்டோட சுத்தத்தையும் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்துற கடமை வேளாண் பண்ணை அதாவது அதை அறுவடை செய்யுற நபர் ல இருந்து சாப்பாட்டு மேசைக்கு கொண்டு வர்ற நபர் வரை எல்லோருக்கும் பங்கு உண்டு. கொரோனா காலத்துல தனிமனித சுத்தத்துக்கும் பொது சுத்தத்துக்கும் அதிமகாவே முக்கியத்துவம் கொடுத்து வாழ பழகிட்டோம். இருந்தாலும் உலக உணவு பாதுகாப்பு தினமான இன்னைக்கு நாம ஆரோக்கியமா வாழ் சில வழிமுறைகள்.

 சும்மா சமையலறைக்குள்ள நுழைஞ்சாலும் சரி சமைக்க ஆரம்பிச்சாலும் சரி  சுத்தமா கைய கழுவிட்டு செய்ய ஆரம்பிக்கணும். 

சுத்தமான நீர் ஆரோக்கியமான மூலப்பொருட்களால உணவை சமைக்கணும்.

சமைச்ச உணவு சமைக்காத உணவை பிரிச்சு வைக்கணும். குறிப்பா குளிர்சாதனைப் பெட்டிக்குள்ள வைக்கிறப்ப.

இறைச்சி உணவுகள் சமைக்கிறப்ப, அதனோட வாடை போகிற மாதிரி நல்லா வேக வைக்கணும்.    

சத்தான உணவை சாப்பிடுறது. சரியான வெப்பனிலையில உணவுப் பொருட்களை வைக்கிறது. ரொம்ப முக்கியம். 

 அதிகமான  விரைவு உணவுகள், அதிகமா நிறம் ஊட்டப்பட்ட உணவுகள் , பயன்படுத்துன எண்ணையை திரும்ப பயன்படுத்தி செய்யப்படுற உணவுகள் இவை எல்லாம் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. ரொம்ப முக்கியமானது போதுமான அளவு உணவை சாப்பிடுறது அளவுக்கு அதிகமா சாப்பிட்டாலும் அதுவும் நோய் தான். உணவை வீணாக்கக்கூடாது. இன்னைக்கு நாம வீணாக்குற கொஞ்ச உணவு யாரோ ஒருத்தருடைய ஒரு நாள் உணவா கூட இருக்கலாம். 

உணவு தாராளமா கிடைக்கிறவனுக்கு கடவுள் கோயிலுக்குள்ள இருக்கிறார். ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்படுறவங்களுக்கு ஒரு வேளை சோறு போடுறவங்க தான் கடவுள் நு சொல்வாங்க. நம்ம வாழ்க்கையில நாமும் கடவுளா மாற நிறைய வாய்ப்பு கிடைச்சிருக்கும் இனியும் கிடைக்கும். கையளவு உணவு தானேன்னு கைவிட்டுடாம கவனமா இருப்போம். இன்னைக்கு நாம சாப்பிடுற ஆரோக்கியமான உணவு நாளைய நமது ஆரோக்கியம் இதை நாம உணர்ந்தா மட்டும் போதாது மத்தவங்களையும் உணர வைக்கணும்.

 உணவை வீணாக்காதிருப்போம். உணவை பகிர்ந்து உயிர் கொடுப்போம். அனைவருக்கும் இனிய உலக உணவு பாதுகாப்பு தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் மூலமா உங்களை வந்து சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.                   

Saturday, 4 June 2022

உலக சுற்று சூழல் தினம்

 இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ? வணக்கம் அன்பு உள்ளங்களே ஜுன் 5 உலக சுற்று சூழல் தினம். நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டு வர்ற மக்கள் தொகையாலும் தொழிற்சாலை கழிவுகள் வாகனப்புகையினாலயும் நாம வாழ்ற இந்த பூமி அசுத்தமாகிக் கிட்டே வருது. இப்படியே போச்சுனா மனுசங்க வாழ்றதுக்கு தேவையான எந்த ஒரு இயற்கை சக்தியும் இந்த பூமியில இல்லாமலே போயிடும். அதனால இந்த சுற்று சூழல் மாசுபாட்டை குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுது. நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு நு பஞ்ச பூதங்கள் வடிவத்துல இருக்கிற இந்த இயற்கைய மனுசங்களாகிய நாம பல்வேறு விதத்துல பயன்படுத்திக்கிட்டு வர்றோம். அதை சரியா பயன்படுத்தாம மாசுபாட்டையும் உருவாக்கிக்கிட்டு இருக்கோம். இது மட்டுமில்லாம இயற்கையும் தன்னுடைய ஆதங்கத்தை பல இயற்கை சீற்றங்கள் வழியா காமிச்சிட்டு தான் இருக்கு. அதிக வெப்பம், புயல் நிலநடுக்கம், பனிப்பாறைகள் உருகுதல் காட்டு தீ சுனாமின்னு ஏகப்பட்ட சீற்றங்கள். இப்படிப்பட்ட நிலைமையில நாம வாழ்ற இந்த பூமியோட சுற்று சூழல் நலனை சீர்தூக்கி பார்த்து, பிரச்சனைக்கு தீர்வு காண, சிந்தித்து செயல்பட தான் இந்த உலக சுற்று சூழல் தினம் கொண்டாடப்படுது. 

புவிக்கோளையும் அதோட இயற்கையையும் காப்பாற்ற தேவைப்படும் சுற்று சூழல் செயல்பாட்டை பத்திய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் அவையால 1972 ஆம் ஆண்டு இந்த தினம் கொண்டாட தொடங்கப்பட்டுச்சு. இதுக்கு ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் நு அழைக்கப்படுற யுனெப்  செயல்படுது. உலக மக்கள் எல்லோரும் இந்த தினத்தை ஒவ்வொரு விதமா சிறப்பிக்கிறாங்க. உலக அளவில ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு கருப்பொருளொட இந்த நாளைக் கொண்டாடுறாங்க அந்த வகையில 2022 ஆம் ஆண்டு உலக சுற்று சுழல் தினத்துக்கான கருப்பொருளை ஸ்வீடன் நாடு ஒன்லி ஒன் ஈர்த் நு அறிவிச்சிருக்காங்க. ஒரே ஒரு பூமி 

பள்ளி கல்லூரிகள் ல இந்த நாளுக்கான முக்கியத்துவம் அதிகமாவே இருக்கும் இந்த தினத்துக்கான போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் அணிவகுப்புகள் இயக்கங்களுன் நிறைய யசெயல்பாடுகள் மாணவர்களால செய்யப்படுது. மரம் நடுவது மிக சிறப்பான ஒரு செயல்முறையா எல்லாருக்கும் அறிவுறுத்தப்படுது. 


 நம்ம முன்னோர்கள் சுற்று சூழலை ரொம்ப சிறப்பான விதத்துல பாதுகாத்தாங்க. குறிஞ்சி முல்லை மருதல் நெய்தல் பாலை நு ஐந்து வகை நிலங்களா மக்கள் பிரிஞ்சி வாழ்ந்தப்ப மலைய கடல நிலத்தை காத்தை நெருப்பை தெய்வமா வழிபட்டு இருக்காங்க. அதனால அதை பத்திரமா பாதுகாத்து வந்தாங்க. அதனால அவங்க வாழ்ந்த காலத்துல இப்ப உள்ள இந்த வெப்பமயமாதல் ஓஸோன் படல் ஓட்டை எல்லாம் இல்லை. அவங்க எல்லாரும் வாழ்ற நாள்ல சந்தோசமா வாழ்ந்தாங்க. ஆனா நாம எல்லாரும் இந்த பூமி நமக்கு மட்டும் தான் சொந்தம்னு  நினைக்குறோமே தவிர நமக்கு பின்னாடி வர்ற தலைமுறைகளுக்கும் இது சொந்தம் நு  நினைக்கிறது இல்லை. ஒரே ஒரு பூமி தான் இது நமக்கும் நமக்கு பின்னாடி வர்ற தலைமுறைகளுக்கும் நு நினைச்சோம்னா போதும் சுற்றுசூழல் விழிப்புணர்வு தானா ஆரம்பிக்கும். 

உலக சுற்று சூழல் தினம் கொண்டாடப்படுற இந்த நாள்ல சுற்று சூழல் விழிப்புணர்வை அதிகமா மக்கள் கிட்ட ஏற்படுத்தனும். அதுக்கு சில வழிமுறைகள்

ஆக்சிசனை அதிகப்படுத்தி கார்பன் அளவைக் குறைக்க குறைஞ்சது 3 மரக்கண்டுகளாவது ஒருத்தர் தன்னோட வாழ்நாள் ல நடணும். 

தனி நபர் வாகனங்களை அதிகமா பயன்படுத்துறத கொஞ்சம் குறைச்சு பொது வாகனகளான பேருந்து தொடர் வண்டியில பயணிக்கனும். 

காகிதங்களை வீணடிக்க கூடாது. அதிகமா பயனபடுத்தினாலும் அதை மறு சுழற்சிக்கு பயன்படுத்தணும்.

தண்ணீரை சிக்கனமா பயன்படுத்தணும். 

மின்சாரம் மின் உற்பத்தி பொருட்களை பயன்பாட்டை குறைக்கணும். 

நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கணும். 

இறுதியா இயற்கை விவசாயத்தை அதிகப்படுத்தணும்.

சுற்று சுழல் மேல அதிகமா அக்கறை செலுத்தி ஆக்க பூர்வமான செயல்பாடுகள் செய்யுறவங்களை பாராட்டுற விதமா சுற்று சூழலுக்கான இந்தியாவின் உயரிய விருது இந்திராகாந்தி பர்யவரன் புரஸ்கார்

தமிழகத்தின் சுற்றுசூழல் ஆர்வலர் விருது.நு பல விருதுகள் இந்த நாள்ல வழங்கப்படுது. 

சுற்று சூழலை பாதுகாக்க விழிப்புணர்வை நம்ம கிட்ட இருந்து முதல்ல ஆரம்பிப்போம். மாற்றத்தை நாம தொடங்கி வைப்போம். அழகான இந்த பூமியை அழகாவே விட்டு வைப்போம்.  அனைவருக்கும் இனிய சுற்று சூழல் தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் மூலமா உங்களை மீண்டும் வந்து சந்திக்கிறேன் நன்றி வணக்கம்    

Thursday, 19 May 2022

புனித அன்னா மரியா பிரான்சிஸ்கா ருபாத்தோ.

 நம்பிக்கையின் திருப்பயணிகள் வரிசையில் இன்று நாம் காண இருக்கும் புனிதர் புனித அன்னா மரிய ருபாத்தோ. புனித அன்னா மரிய பிரான்சிஸ்கா ருபாத்தோ 1844 ஆம் ஆண்டு யோவான் ருபாத்தோ மற்றும் கத்தரினா பவேஸியா என்னும் தம்பதியினருக்கு எட்டாவது மகளாக பிறந்தவர். பிறந்த நான்கு வயதிலேயே தன் தந்தையை இழந்து பெரிதும் துன்புற்றார். இவருடைய பதின்பருவ வயதில் மணமுடிக்க ஒருவர் ஆர்வமாய் இருந்தாலும் துறவு வாழ்வில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை எடுத்துரைத்து அதனை மறுத்தார். தன்னுடைய 19 வது வயதில் தன் தாயையும் இழந்து தவித்த இவர் தூரின் என்ற இடத்திற்கு சென்று மரினா ஸ்கோபோன் என்னும் செல்வந்த பெண்மணியின் நட்பைப் பெற்றார். 

ரூபாத்தோ தன்னுடைய நண்பரான மரினா ஸ்கோபோனின் குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுத்தும், நோயாளிகள் மற்றும் ஏழைகளை சந்திப்பதில் தன்னுடைய நேரத்தை செலவிட்டார்.  1882 ல் ஸ்கோபோனோவோம் இறந்து போகிறார்.  ஒரு நாள் காலை திருப்பலி முடிந்து திரும்பும் வேளையில்  லோயோனா என்னும் ஆலயக் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் மேல் கல்லானது விழுந்து விட மிகவும் பாதிக்கப்படுகிறார். அவரை சகோதரி ருபாத்தோ மிகுந்த அக்கறையுடன் கவனித்து பணிவிடை செய்தார். இதனை கண்ட அருகில் இருந்த கன்னியர் மட சகோதரிகள் இவரின் பிறர் நல சேவையை பாராட்டி துறவற வாழ்வு வாழ அழைப்பு விடுத்தனர். உமது இத்தகைய பணி ஆண்டவருக்கு உரியது அதனை ஆண்டவருக்கு கொடுப்பதே முறை என்று எடுத்துரைத்தனர். எனவே கன்னியர்களின் வழிகாட்டுதலின் படி 1885 ஆம் ஆண்டு மரிய பிரான்சிஸ்கா என்னும் பெயருடன் துறவியாக மாறினார். அவரது துறவற ஆர்வத்தினாலும் பிறர் நலப் பணியினாலும் பல்வேறு நற்செயல்களை ஆற்றி, பிலிப்பி அலேக்ரா என்னும் ஆயரின் ஆணையினிமித்தம் அவர் இருந்த குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார். இவர்களே பின்னாளில் மதர் ருபாத்தோ கப்புச்சின் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டனர். 

1892 ஆம் ஆண்டு மோந்தே வீடியோ என்னும் இடத்திற்கு மறைப்பணி ஆற்ற சென்றார். அதன்பின் அர்ஜெண்டினாவிலும் தன்னுடைய மறைபரப்புப்பணியை சிறப்பாக ஆற்றினார்.  1904 ஆண்டு புற்று நோயால் பீடிக்கப்பட்டு தன்னுடைய 59 ஆம்வயதில் மோந்தே வீடியோ வில் காலமானார். அவரது விருப்பப்படி அந்த மோந்தே விடியோ விலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருத்தந்தை புனித ஆறாம் பவுல் இவரை ஆசீர்வதிக்கப்பட்டவர் அருளாளர் என்னும் நிலைக்கு உயர்த்தினார். 1941 முதல் 1970 வரை இவரின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமைகள் அனைத்தும் குறிப்பாக ஜெனோவாவில் இவரது பரிந்துரையால் நடந்த புதுமை 1951 ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டவராக அறிவித்தார்.      

 எனவே எல்லா விதத்திலும் இவர் புனிதையாக உயர்த்தப்பட தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் இப்புனிதையை திருப்பீட வணக்கத்திற்கு தகுதி உடையவரென அறிவித்தார். 2013 ஆம் ஆண்டு மேலும் ஒரு புதுமை தெளிவுபடுத்திய பின்பு 2022 ஆண்டு மே மாதம் 15ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார். 

இவரது அருளிக்கம் கொண்ட பேராலயம் புனித பிரான்சிஸ்கா ருபாத்தோ என்று அழைக்கப்படுகிறது. இவரது திருநாள் ஆகஸ்ட் மாதம் 6 தேதி கொண்டாடப்படுகிறது.  கப்புச்சியன் சபை மதர் ருபாத்தோ சபை சகோதரிகளின் பாதுகாவலராக இவர் திகழ்கின்றார். புனித மரிய பிரான்சிஸ்கா ருபாத்தோ போல நாமும் பிறர்நலப்பணியிலும் அழைத்தலில் ஆர்வமும் மறைபரப்புப்பணியில் மகிழ்வும் கொண்டு வாழ முயல்வோம். வாழ்வில் எற்படும் எல்லா சிக்கலான் சூழல்களிலும் இறைத்திருவுளம் சிறப்பாக செயல்படும் என்பதை தன் வாழ்வின் நிகழ்வில் கண்டு கொண்ட புனித மரிய பிரான்சிஸ்கா ருபாத்தோ நமக்கு இறைவனிடம் பரிந்து பேசி வழிகாட்டுவாராக. புனித மரிய பிரான்சிஸ்கா ருபாத்தோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.   

புனித கரோலினா சாந்தோகனாலே.

நம்பிக்கையின் திருப்பயணிகள் வரிசையில் இன்று நாம் காண இருக்கும் புனிதர் . புனித கரோலினா சாந்தோகனாலே. 1852 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2ம் நாள் இத்தாலியிலுள்ள பலேர்மோவில் செல்சே ராயல் குடும்பத்தில்  பிறந்தார். பிறந்த அடுத்த நாளே அதாவது அக்டோபர் 3 ம் தேதி ஞானஸ்நானம் பெறும் பேறு பெற்றார். தன்னுடைய 8 வது வயதில் திவ்விய இயேசுவை உணவாக உட்கொண்டார். தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் உடல் நலம் சரி இல்லாத மரணப்படுக்கையில் இருக்கும் தன்னுடைய தாத்தாவை பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அவருடன் இருந்து அவருக்கு தேவையான பணிவிடைகள் செய்து அவர் நித்திய இளைப்பாற்றி அடைய வழிவகுத்தார். அவரது இறப்புக்கு பின் மவுரோ வெனுதி என்பவரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். இவரே பின்னாளில் நம் புனிதையின் ஆன்மீக வழிகாட்டுநராக மாறியவர். இளம் வயதில் இவருக்கு விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்த போதிலும் துறவறத்தின் மீது அதிகமான ஈடுபாடு கொண்டு உறுதியான தேவ அழைத்தலைப் பெற்றுக்கொண்டார். அடைபட்ட மடத்தில் இருந்து கொண்டு காட்சி தியானம் செய்தல் வெளியே சென்று நோய்வாய்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவுதல் என்னும் இரண்டு பணிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தன்னுடைய 21ம் வயதில் பலேர்மோவில் உள்ள புனித அந்தோனியார் பங்கைச்சேர்ந்த  டாட்டர்ஸ் ஆப் மேரி என்னும் சபை சகோதரிகளுக்கு தலைவரானார்.    

சாந்தோகனாலே இக்கால கட்டத்தில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு 16 மாதம் துன்புற்று 1887 ல் இத்துன்பத்தில் இருந்து சிறிதளவு விடுதலை பெற்றார். இத்துன்பத்தின் மத்தியிலும் சகோதரிகளின் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தார். காட்சி தியானம் மற்றும் செயல்பாட்டு  துறவு வாழ்வு இரண்டையும் ஒன்றிணைக்க  நினைத்து பிரான்சிஸ்கன் மூன்றாம் துறவற குழுமத்தை உருவாக்கினார். இதற்கான முறையான அனுமதி திருத்தந்தை பதின்மூன்றாம் சிங்கராயர் அவர்களால் 1887 ல் வழங்கப்பட்டது. அதே ஆண்டு ஜீன் மாதன் 13 ம் தேதி பிரான்சிஸ்கன் மூன்றாம் துறவற நிலையில் தன்னை இணைத்து வார்த்தைப்பாடு ஏற்று, துறவற ஆடையை பெற்றுக் கொண்டார். இயேசுவின் மரியாள் என்னும் பொருள் அமையும் வகையில் தன்னுடைய பெயரை மரியா தி ஜெசு என மாற்றிக் கொண்டார். 

பலேர்மோவில் ஒவ்வொரு வீடாக கதவாக சென்று ஏழை எளிய மக்களுக்கு நோயாளிகளுக்கு தன்னாலான உதவிகளை செய்தார். இதன் மூலம் தன்னுடைய அழைத்தலின் நோக்கத்தை பூர்த்தி செய்தார். மேலும் அவரால் தனியாக அத்தனை பேருக்கும் உதவி செய்ய இயலாத நிலையில் தன்னுடைய சபையை சேர்ந்த சகோதரிகள் சிலரை இப்பணி செய்ய ஊக்குவித்தார். அவர்களுக்கு புனித லூர்தன்னையின் அமலோற்பவ சகோதரிகள் எனபெயரிட்டார். இச்சபையானது 1923 ஜனவரி 24 ம் தேதி பலேர்மோ ஆயர் அலெசாந்த்ரோ லுஆல்டி அவர்கள்  அனுமதியின் படி மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் முறையான சபையாக இயங்க அனுமதி பெற்றது.

சபைக்கான ஒப்புதல் பெற்ற ஒரு வாரத்திலேயே சகோதரி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார். ஜனவரி 29ம் தேதி இவரது இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டது. அதன்பின் 1926 ஆம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி இவரது உடலின் எஞ்சிய பாகங்கள் சேகரிக்கப்பட்டு சபையின் சிற்றாலயத்தில் பாதுகாக்கப்பட்டது. திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால் 1947ஆம் ஆண்டு இச்சபை பாப்பாண்டவரின் கீழ் இயங்கும் சபையாக செயல்பட அனுமதிக்கப் பட்டது. 1968 ஆம் ஆண்டு திருத்தந்தை 6ம் அருள் சின்னப்பர் இதனை வழிமொழிந்து ஆணை பிறப்பித்தார். 

சகோதரி அவர்களுக்கான அருளாளர் பட்டம் செயல்பாடுகள் 1982 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் கடவுளின் ஊழியர் என்னும் அடை மொழியுடன் துவங்கப்பட்டது. புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட தகுதியுடைமையைத் தேடும் படலம் ஆரம்பமாகி 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. சகோதரி அவர்களின் வாழ்க்கை பணி, இறைவாழ்வு, மறை உறவு அனைத்தும் உரோமை திருஅவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டு புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால், புனித நிலைக்கு உயர்த்தப்பட இவர் தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2022 ஆம் ஆண்டு மே 15 ம் தேதி, இவரால் இவரது செப உதவியினால் நடந்த அற்புதங்கள் புதுமைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட்டார். 

இவரது திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27 ம்தேதி கொண்டாடப்படுகிறது.  கப்புச்சின் சபை புனித லூர்து அன்னை அமலோற்பவ சகோதரிகளின் பாதுகாவலாரக இவர் திகழ்கின்றார். புனித கரோலினா சந்தோகனாலே போல நாமும் நாமும் அழைக்கப்பட்டதன் மேன்மையை உணர்ந்து வாழ முயற்சிப்போம் . ஏழை எளிய மக்கள் நோயாளிகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய முன் வருவோம். இறை உறவிலும் பணி உறவிலும் நிலைத்து வாழ புனித கரோலினா சாந்தோகனாலே நமக்கு அருள் புரிவாரக . புனித கரோலினா சாந்தோகனாலேவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.  

Friday, 13 May 2022

அன்பின் இனிமையை சுவைப்போம்




 பாஸ்கா காலம் 5ஆம் ஞாயிறு

I. திருத்தூதர் பணிகள் 14:21-27

II. திருவெளிப்பாடு 21:1-5

III. யோவான் 13:31-35

இந்த உலகில் விலை மதிப்பில்லாமல் கிடைப்பது அன்பு ஒன்று தான். ஆனால் எளிதில் கிடைப்பதனாலோ என்னவோ அதன் மதிப்பு யாருக்கும் தெரிவதில்லை. இன்றைய நற்செய்தி வாசகம் நாம் அனைவரும் இயேசுவை போல அன்பு செய்து வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறது. "போல" செய்தல் இன்றைய கால கட்டங்களில் நாம் விரும்பி செய்யும் ஒன்று. டிக்டாக் என்ற செயலி மூலமாக நடிகர்களைப் போலச் செய்கின்றோம். உடை உடுத்துவது நகை மாட்டுவது வரை தலை முடி முதல் கால் நகம் வரை அனைத்துமே போலச் செய்தல் தான். ஏன் இப்போது எல்லாம் உணவு சமைப்பது கூட வலையொலிப்பதிவைப் பார்த்து தான். எல்லாவற்றையும் பிறரைப் போலச்செய்ய நினைக்கும் நாம் நல்லவிசயங்களை பிறரைப் போலச் செய்ய நினைப்பதில்லை. அப்படி இருக்க இயேசு என்னைப் போலச்செய்யுங்கள் என்று உறுதியாக சொல்கின்றார். என்னைப் போல அன்பு செய்யுங்கள். நான் அன்புசெய்தது போல நீங்களும் அன்பு செய்யுங்கள் என்கின்றார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்வார்கள். என்கின்றார்.


அன்பு மிக இனிமையானது. எனவே தான் அதனை மிகச்சிறப்பான கட்டளையாக இயேசு தம் சீடர்களாகிய நமக்கு கொடுக்கின்றார். அன்பு கொடு மரியாதை கொடு என அடுத்தவரிடம் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரனாய் இருக்காதே என பணிக்கின்றார். மாறாக கேட்காமலேயே அள்ளிக்கொடுக்கும் செல்வந்தனாய் இருக்க வலியுறுத்துகிறார். அன்பும் மரியாதையும் கேட்டுப் பெற வேண்டியவை அல்ல கொடுத்துப்பெற வேண்டியவை. கேட்டால் கிடைக்காது இவை இரண்டும். கொடுத்தால் மட்டுமே இரட்டிப்பாக கிடைக்கும். நம்மை அன்பு செய்பவர்களை மட்டுமல்லாது வெறுப்பவர்களையும் நாம் அன்பு செய்ய வேண்டும். உதாரணம் நம் இயேசு. அவர் தன்னை காட்டிக் கொடுத்தவன், விட்டு ஓடியவர்கள், மறுதலித்தவர்கள் பழித்துரைத்தவர்கள் என அனைவரையும் அன்பு செய்கின்றார். நாமும் அவர் " போல " அன்புசெய்ய வேண்டும். கொடுத்துப் பெறுவோம் அன்பை . எங்கே அன்பு குறைகிறதோ அங்கு குறைகள் பெரிதாய் தெரியும். அன்பு நிறைவாய் இருந்தால் அங்கு குறைகளுக்கு இடமே இல்லை.


அன்பு என்பது ஆழ்கடல் போன்றது. கரையில் தேடினால் சிப்பிக்களும் கிளிஞ்சல்களும் தான் கிடைக்கும் . ஆழமாய்த் தேடினால் தான் முத்துக்கள் கிடைக்கும். (சில சமயம் மூச்சும் திணறும்). நாம் பெரும்பாலும் மேலோட்டமான அன்பை சிலர் மேல் செலுத்திவிட்டு அதை விட குறைவான அன்பை அவர்களிடமிருந்து பெற்று, அதனையே முழுமையான அன்பு என எண்ணி நிறைவு அடைகிறோம். விளைவு அவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலோ சிறு வார்த்தைகள் சொன்னாலோ உடனே அந்த அன்பு மறைந்துவிடுகிறது. ஆழ்கடல் அன்பை உணர நாம் முயற்சிப்பதில்லை. ஆழ்கடல் அன்பை உணர முதலில் மூச்சடக்க பயிற்சிக்க வேண்டும். முத்துக்கள் இருக்கும் இடம் அறிய வேண்டும். இல்லாத இடத்தில் மூச்சடக்கி ஒரு பயனுமில்லை. பெரும்பாலனோர் கரையில் முத்துக்களைத் தேடி கிளிஞ்சல்களையும் சிப்பிக்களையும் முத்துக்கள் என்றெண்ணி வாழ்க்கையை வாழ்கின்றனர். முத்துக்கள் போலத் தெரியும் கற்களை நம்பியும் ஏமாறுகின்றனர். உண்மையான அன்பு எதுவென உணர்ந்து அதன்படி வாழ முயற்சிப்போம்.

அன்பு இனிமையானது அது தன்னையும் தன்னைச்சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்கும். எல்லையின்றி தன் அன்பை பிறருக்கு அள்ளிக் கொடுக்கும். நறுமணம் போல எங்கும் பரவி மனங்களை மகிழச்செய்யும். நமது அன்பு அப்படிப்பட்ட அன்பாக இருக்க அருள் வேண்டுவோம். எல்லையின்றி பரவும் அன்பாக, நமது அன்பு பிறருக்கு மகிழ்வை நன்மையைத்தரக் கூடியதாக இருக்க முயல்வோம். ஒரு சிறு கதை....

முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு மாமரம் இருந்தது. அது பருவகாலம் முடிந்தும் கனி தந்தது. அந்த ஊர் மக்கள் அதன் கனியை மிகவும் ரசித்து உண்டு அதனைப் பாராட்டிச் செல்வர். இதனால் மகிழ்வடைந்த மரம் இன்னும் அதிகமாக கனிகளைக் கொடுக்க ஆரம்பித்தது. இதன் பெருமையைக் கேட்டு பக்கத்து ஊர் மக்களும் வந்து கனிகளை உண்டு ரசிக்க ஆரம்பித்தனர். இதன் பெருமை இப்படியாக வளர்ந்து அந்த ஊர் மன்னனின் காதுகளையும் எட்டியது. அவனும் அந்த மாங்கனிகளை சுவைக்க ஆரம்பித்தான். அதன் சுவையில் திளைத்துப் போன மன்னன் அதன் கனிகளை தினமும் சுவைக்க எண்ணினான். பின் அதன் கனியை தான் மட்டுமே சுவைக்க எண்ணி மரத்திற்கு காவல் போட்டான். ஏழை எளிய மக்கள் அதன் கனியை சுவைக்க முடியாமல் போயிற்று. அதன் வருகே வந்து தங்களின் ஏக்க பெரு மூச்சை மக்கள் வெளிப்படுத்திச்சென்றனர். நாளடைவில் மரத்தின் அருகே போகவும் தடை. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு மட்டுமே அனுமதி. மக்கள் மரத்தின் சுவையை மறந்தே போயினர். சிறிது காலத்தில் மரம் தன் இலைகளை உதிர்த்து பட்டு போக ஆரம்பித்தது. கனிகளும் வெகுவாக குறைந்து போனது . இதனால் கலக்கமுற்ற மன்னன் காவலர்களை மாற்றினான். உரம் மண் மாற்ற சொன்னான். எந்த மாற்றமும் இல்லை ... அந்த ஊர் வழியாக பயணம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவர் மன்னனின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்து, அவரிடம் பேசத் தொடங்கினார். மன்னன் தன் கதையையும் மரத்தின் கதையையும் முனிவருக்கு கூறினார்.

இறுதியாக முனிவர் , மாமரம் தன் செயலால் மட்டும் இவ்வளவு இனிமையான கனிகளை தரவில்லை . அதன் கனிகளை உண்டு அதனை அன்பு செய்து பாராட்டிய மக்களாலும் தான் செழித்து வளர்ந்தது. நீ மட்டும் அதன் கனிகளை பலனை அனுபவிக்க எண்ணினாய் . அது பிறர் அன்பு இல்லாமல் தன் செழிப்பை மறந்தது. மீண்டும் அது செழித்து வளர கனி தர வேண்டும் என நீ நினைத்தால், அதற்கான காவலையும் வேலியையும் எடுத்து விடு. ஊரின் பொது மரமாக அதனை விட்டு விடு.அதன் பின் பார் அதன் கனிகள் செழிக்கும் கிளைகள் தழைக்குமென்றார். மன்னனும் முனிவரின் சொற்களுக்கு கட்டுப்பட்டு அப்படியே செய்தான். சிறிது நாட்களில் மரம் தன் பழைய நிலையை அடைந்தது. ஏராளமான மக்கள் அதன் கனிகளை சுவைக்க வந்தனர், அதன் பெருமையையும் சிறப்பையும் பாராட்டி சென்றனர். அதிகமாக அன்பு செய்தனர். முன்னைய நிலையைக் காட்டிலும் பின்னர் மரத்தின் கனியும் சுவை மிக்கதாய் இருந்தது. மக்களும் அதன் பயனை அதிகமாக உணர்ந்தனர். அன்பு மட்டுமே அந்த மரத்திற்கும் அந்த ஊர் மக்களுக்கும் இனிமையை சேர்க்கக் கூடியதாய் இருந்தது.

நாமும் அந்த மாமரம் போல அன்பைக் கொடுத்து அன்பை பெறுவோம் நமது அன்பின் கனி பிறர் வாழ்விற்கு இனிமையைத் தரட்டும். பிற செயலிகள் போல அல்லாது நம் உயிர்த்த ஆண்டவர் இயேசு போல செயல்படுவோம் அன்பை கொடுப்போம் அன்பைப் பெறுவோம். இறைவனின் இனிய அன்பில் நிலைத்திருப்போம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரோடும் இருப்பதாக ஆமென்..

Thursday, 12 May 2022

புனித ஆனி மேரி ரிவியர்

  புனித  ஆனி மரியா ரிவியர் 1768 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ம்தேதி கிழக்கு பிரெஞ்சு நகரமான மோன்டெபெசட் சொஸ் பௌசன் என்னும் ஊரில் பிறந்தார்.  குடும்பத்தில் நான்காவது பெண்ணான இவருக்கு பிறந்த சில தினங்களிலேயே அதாவது இவரது முதல் கிறிஸ்து பிறப்பு நாளன்று இவருடைய பாட்டியின் உதவியினால் ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது. மரினெத்தே என்று தன்னுடைய குடும்பத்தாரால் அன்போடு அழைக்கப்பட்ட இவர்   16 மாத குழந்தையாக இருந்த போது படுக்கையில் இருந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு முதல் கணுக்கால் எலும்பு வரை உடைந்து நடக்க முடியாமல் 10 வருடம் துன்பத்திற்கு ஆளானார். அந்த துன்பம் அவரை கடவுளோடு மிக அதிகமாக நெருங்க வைத்தது.  தன்னுடைய ஐந்து வயதிலிருந்தே கடவுள் மேல் ஆழமான அன்பு கொண்டார் . நடக்க முடியாத இவரை இவரது தாயார் தூக்கி கொண்டு போய் ஒப்புரவு அருட்சாதன சிற்றாலயம் என்று அழைக்கப்படும் சேப்பல் ஆஃப் தி பெனிட்டன்ஸ் என்னும் உள்ளூர் ஆலயத்திற்கு அழைத்து செல்வார். காலை முதல் மாலை வரை செபத்திலும் கண்ணிரோடு கூடிய மன்றாட்டிலும் பியட்டா என்றழைக்கப்படும் வியாகுல மாதாவின் முன் பல மணி நேரங்களை செலவிடுவார். அதன் பின் தன் தாயார் இறந்து போக மிகவும் மன வேதனைக்கு ஆளானார். 1774 ஆம் ஆண்டு ரிக்கெட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டாலும் ஊன்றுகோலின் உதவியால் தன்னால் நடக்க முடியும் என்பதை கண்டு கொண்டாள். வெறும் நான் கு அடி நான் கு அங்குலம் மட்டுமே இருந்த அவரால் இப்படி நடக்க முடிந்ததே பெரும் அதிசயமாக காணப்பட்டது. 

1785 ஆம் ஆண்டு பிராடெல்லசில் உள்ள நோட்றே டேம் அருட்சகோதரிகளின் சபையில் சேர விண்ணப்பித்தார். இவரது மோசமான உடல் நிலை கருதி இவர் நிராகரிக்கப்பட்டார். மனம் தளராமல் தன்னுடைய சொந்த ஊரில் ஒரு பள்ளியை நிறுவினார். அதன் பின் ஏற்பட்ட பிரென்சு புரட்சியின் விளைவால் பல மத பள்ளிகள் நிறுவனங்கள் மூடப்பட்டும் சந்தேகககண்களுடனும் பார்க்கப்பட்டன.  கிறிஸ்துவின் மீது கொண்ட ஆழமான அன்பாலும் நம்பிக்கையாலும் இவர் தொடர்ந்து உறுதியாக இருந்தார். அருட்தந்தையர்கள் இல்லாத போது தானே வழிபாடுகளை முன்னெடுத்து நடத்து மக்களுக்கு இறைநம்பிக்கையை வளர்த்தார். விவிலியம் தொடர்பான கருத்துக்களையும் விளக்கங்களையும் பொது மக்களுக்கு அறிவித்து வந்தார். புனித பிரான்சிஸ் சேவியர் மற்றும் புனித பிரான்சிஸ் ரெஜிஸ் மட்டில் அளவுகடந்த பக்தி கொண்டிருந்தார். 1794 ஆண்டு ஆனி மேரி ரிவியர் மற்றும் அவரது உடன் நண்பர்களால் நடத்தப்பட்ட பள்ளி பறிமுதல் செய்யப்படவே இவர்கள் துய்ட்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தனர். அங்கு அருட்தந்தை லுய்கி பொண்டானியர் இவர்களை ஆதரித்தார். 1796 ல் நவம்பர் 21 ஆம் ஆண்டு ஐந்து இளம் பெண்கள் புதிய பள்ளியின் மாடியில் துறவற வார்த்தைப்பாடு கொடுத்தனர். அனாதைப்பிள்ளைகளுக்கு ஆதரவும் கல்வியும் அளிப்பதே இவர்களது நோக்கம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர். வீடுகளுக்கு சென்று மக்களை சந்திப்பது, மறைக்கல்வி எடுப்பது என தங்களது துறவற பணியினை சிறப்பாக செய்தனர். 1797 ஆம் ஆண்டு இவ்வைவர் குழு பன்னிரண்டாக மாறியது. 1801 ஆம் ஆண்டு பிரான்சில் மீண்டும் சுமுகமான சூழல் தோன்றியது அந்நிலையில் இவர்களது சபை வளரத்தொடங்கியது எனவே 1815 ஆம் அண்டு சபையின் தாய் இல்லம் போர்க் செயிண்ட் ஆண்டியோலில் உள்ள பெரிய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. 1805 ஆண்டு திருத்தந்தையாக இருந்த ஏழாம் பயஸ் அவர்கள் பிரான்சிலிருந்து ரோமைக்கு செல்லும் வழியில் இவர்களது சபையை சந்தித்தார். அப்போது சபைக்கான முறையான ஒப்புதலும் ஆசிரும் பெறப்பட்டது. 1807முதல் முறையாக  துறவற சபையாக அங்கிகரிக்கப்பட்டு துறவற ஆடைகளை அணியத் தொடங்கினர். 

டிராப்சிஎன்னும் நோயால் அவதிப்பட்ட இவர்.1838 ல் இறந்தார். இவரது கடுமையான பணியால் 2005 ஆண்டு 1352 சகோதரிகளுடன் கிட்டதட்ட 189 நாடுகளில் இவர்களது சபை பரவி இருந்தது. 

இவருக்கான அருளாளர் பட்ட வேலைகள் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்களின் வழிகாட்டுதல் படி நடக்க ஆரம்பித்தது. பெண் அப்போஸ்தலர் என்றும் ஒருமுறை இவர் அழைக்கப்பட்டார். 1853 ஆம் ஆண்டு மே 12 ம் தேதி கடவுளின் ஊழியர் என்ற பெயரால் அனைவராலும் அழைக்கப்பட்டார். இவரது வீரத்தையும் இறை நம்பிக்கையையும் கண்ட திருத்தந்தை 13ம் சிங்கராயர் இவர் வணக்கத்திற்குரியவர் என்று பெயரிட வழிவகுத்தார். மேலும் இவர் வழியாக நடந்த அற்புதங்கள் உறுதி செய்யப்பட்டதால் 1982 ஆம் ஆண்டு மே 12 ம் தேதி இவருக்கு அருளாளர் பட்டம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் வழங்கப்பட்டது.  அதன் பின் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 15 ம் தேதி புனிதர் பட்டம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 3 ம் தேதி இவரது திருநாள் சிறப்பிக்கப்படுகிறது. பிரெஞ்சுகாணிக்கை மாதா சபையினரின் பாதுகாவலியாக இவர் திகழ்கின்றார். புனித ஆனி மேரி ரிவியர் போல நாமும் இடைவிடாத செபத்தாலும் முயற்சியாலும் கடின உழைப்பாலும் தொடர் துன்பத்திலும் இறை நம்பிக்கையில் உறுதியோடு இருந்து இறைவனுக்கு சான்று பகர்வோம். இறை ஊழியர்களாக நம்மை மாற்றி இறைப்பணி செய்திடுவோம்.


புனித டைட்டஸ் பிராண்ட்ஸ்மா


புனித டைட்டஸ் பிராண்ட்ஸ்மா ஒரு டச்சு இறையியலாளர், பத்திரிக்கையாளர் எழுத்தாளர். இவர் 1881 ஆம் ஆண்டு ப்ரைஸ்லேண்ட் மாகாணத்தில் ஹார்ட்வெர்டுக்கு அருகிலுள்ள பிரீஸ்லேண்ட் மாநிலத்தை சேர்ந்த  ஒகேக்லோஸ்டரில் பிறந்தார். இவரது இயற்பெயர். அன்னா ஸ்ஜொர்டு பிராண்ட்ஸ்மா. தந்தை டைட்டஸ் பிராண்ட்ஸ்மா, தாயார் ட்ஜிட்ஜே போஸ்ட்மா.    இவர்களது குடும்பம் ஒரு சிறிய பால் பண்ணை நடத்தி வந்தது. மூன்று பெண்கள் மற்றும் இரண்டு மகன்களைக் கொண்ட ஒரு அழகான கிறிஸ்தவ குடும்பம் இவருடையது. ஒரு பெண்ணை தவிர குடும்பத்தில் உள்ள அனைத்துப் பிள்ளைகளும் துறவற கட்டுப்பாட்டுக்குள் தங்களை உட்புகுத்தி கொண்டனர்.




பிராண்ட்ஸ்மா தன்னுடைய உயர் நிலைப் பள்ளியை மெகனில் உள்ள பிரான்சிஸ்கன் பிரையரி வளாகத்தில் முடித்தார். அதன் பின் தன்னுடைய குருத்துவ பயிற்சியை மேகனில் உள்ள பிரான்சிகன் சின்ன குருமடத்தில் பெற்றார். 1898 ஆம் ஆண்டு பாக்ஸ்மீரில் உள்ள கார்மலெட் பிரையரில் நவ துறவியாக நுழைந்தார். அங்கு தான் தன்னுடைய தந்தையின் பெயரை தனது பெயராக மாற்றிக் கொண்டு டைட்டஸ் பிராண்ட்ஸ்மா  என்று அழைக்கப்படலானார். 1899ல் முதல் வார்த்தைப்பாடும், 1905 ல் குருப்பட்டமும் 1909 ரோமையில் தத்துவத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 1909முதல் 1923 வரை நிறைய புத்தகங்கள் இதழ்கள் போன்றவற்றை எழுதி சிறந்த எழுத்தாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். புனித அவிலா தெரசம்மாளின் படைப்புக்களை டச்சு மொழியில் மொழிபெயர்ப்பதற்கான திட்டத்தி 1916ல் தொடங்கினார். இன்றைய டைட்டஸ் பிராண்ட்ஸ்மா லிசெய்யும் என்றழைக்கப்படும் மேல் நிலைப்பள்ளியை உருவாக்கி இரண்டு ஆண்டுகள் அதனை நன்முறையில் நடத்திய பெருமை இவரைச்சேரும். 




1921 ல் பெல்ஜிய கலைஞரான ஆல்பெர்ட் சர்வேஸின் சிலுவைப்பாதை நிலையங்கள் அமைப்பது தொடர்பான சர்ச்சைகளில் அவருக்கு உதவியாக இருந்து அதனை தீர்த்துவைத்ததுடன் 14 சிலுவைப்பாதை நிலையங்களிலும் அவரது தியானக் கருத்துகள் இடம்பெறுமாறு வழிவகுத்தார்,.




கத்தோலிக்க திருச்சபை பற்றிய செய்திகள் உலக மக்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று கருதிய மனிதர்களில் இவர் மிகவும் முக்கியமானவர். 1923 ல் தத்துவவியல் பேராசிரியராக, மறைபொருள் பற்றிய வரலாற்று பேராசிரியராக நிக்மேகனின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். அதன்பின் மக்னிஃபிகஸ் ல் ரெக்டராக இரண்டு வருடங்கள் பணியாற்றினார். பேராசிரியராக அறிவார்ந்த பணி செய்வதோடு தன்னுடைய வாழ்வு முடிந்துவிடக் கூடாது அனைவரும் அறியும்படி தனக்கு தெரிந்த அத்தனை கருத்துக்களையும் வெளிப்படுத்தும் பணியினை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். எனவே பத்திரிக்கையாளராக தன்னை பிறருக்கு வெளிப்படுத்த ஆரம்பித்தார். 1935 ல் கத்தொலிக்க பத்திரிக்கையாளர்களுக்கு திருச்சபை ஆலோசகராக இருந்தார். அமெரிக்க கனடா போன்ற நாடுகளுக்கு சென்று தன்னுடைய சபை பற்றி எடுத்துரைக்கும் ஒரு விரிவுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்படி ஒரு முறை சென்ற போது நயாகரா வீழ்ச்சி பற்றி கூறும் போது, இந்த உலக புகழ்பெற்ற நீர் வீழ்ச்சியில் நான் தண்ணீரின் தன்மை , அதன் அளவிட முடியாத ஆற்றலை மட்டும் பார்க்கவில்லை கடவுளின் அளப்பரிய ஆற்றலையும் அவரது கைகளின் வல்லமையான செயல்பாடுகளையும் அவரது அன்பின் வெளிப்படுகளையும் பார்க்கிறேன், என்றார். 1940 ஆண்டு மூன்றாம் ரைச் நெதர்லாந்தின் மீது படையெடுத்த போது, நாஜி சித்தாந்தத்துக்கு எதிராகவும், கல்வி மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு எதிராகவும் போராடினார். ஜெர்மனியின் நாஜிக்கள் இயற்றிய யூத எதிர்ப்பு சட்டங்களை வலுக்கட்டாயமாக எதிர்த்து பேசியதால் 1942 ஜனவரியில் ஜெர்மனி நெதர்லாந்தை ஆக்கிரமித்த போது இவர் கைது செய்யப்பட்டார். கத்தோலிக்க செய்திதாள்கள் நாஜி பிரச்சாரத்தை வெளியிட்டால் இவர் தன்னுடைய மடாலயத்தில் அமைதியாக வாழ அனுமதிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இவர் இதனை மறுத்துவிட்டார். அதனால் இவரை டச்சாவ் வதை முகாமில் வைத்து துன்புறுத்தினர். பல்வேறு துன்பங்கள் கஷ்டங்கள் சோதனைகள் பட்டினிகளுக்கு ஆளானார். அதே ஆண்டு ஜீலை மாதம் உடலில் கார்போலிக் அமிலம் செலுத்தப்பட்டு உயிரிழந்தார். இவர் இறக்கும் போது இவருக்கு வயது 61. 




பிராண்ட்ஸ்மா கத்தோலிக்க திருச்சபையில் தியாகி போல் கருதப்படுகினறார். 1985 ஆண்டு நவம்பர் மாதம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் அருளாளர் பட்டம் பெற்றார். ஜீலை மாதம் 27 ம நாள் இவரது திருநாள் கார்மலேட் சபையினரால் பக்தியான முறையில் கொண்டாடப்படுகிறது. அதன்பின் 2021 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இவர் வழியாக நிகழ்ந்த அற்புதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இறைவிசுவாசத்தின் நிமித்த கொல்லப்பட்ட புனிதர் என்னும் அடிப்படையில் இவருக்கு 2022  மே மாதம் 15 ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இவரது பெயர் கொண்ட திருத்தலங்கள் நெதர்லாந்திலும் நிக்மேகனிலும் உள்ளன. இவர் கத்தோலிக்க இயதழியலில் பாதுகாவலராக திகழ்கின்றார். புகைப்பழக்கத்திற்கு அடிமையாக  இருப்பவர்கள் மற்றும் நெதர்லாந்து நாட்டு மக்களின் பாதுகாவலாரகவும் திகழ்கின்றார். புனிதர் டைட்டஸ் பிராண்ட்ஸ்மாவை போல துணிவுடனும் கத்தோலிக்க திருச்சபையின் மேல் அளவற்ற அன்பும் கொண்டவர்களாக வாழ முற்படுவோம்.

Sunday, 8 May 2022

உலக அன்னையர் தினம்.

 இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வணக்கம் அன்பு உள்ளங்களே மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை . உலக அன்னையர் தினம். ஏன் இந்த நாள் என்ன காரணம்னு இதோட வரலாறு என்னன்னு வாங்க பார்க்கலாம். 

 பண்டைய கிரேக்க நாகரீகத்திலிருந்து இன்றைய நாகரீகம் வரை அம்மாவை கொண்டாடாதவங்க யாருமே இல்லை. ஏன்னா அம்மா எல்லோர் வாழ்க்கையிலயும் ரொம்ப முக்கியமானவங்க. அம்மா இல்லன்னா நாம இல்லை. பண்டைய காலத்துல இருந்தே அன்னை வழிபாட்டு முறை எல்லா நாடுகள்ளயும் இருந்துச்சு. சில இடங்கள்ள மதம் சமயம் சார்பாவும் சில இடங்கள்ள அன்னையர்களுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பின் அடிப்படையிலயும் இந்த நாள் கொண்டாடப்பட்டுச்சு. ஒவ்வொரு நாட்டிலயும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமா இந்த தினத்தைக் கொண்டாடுறாங்க. செவி வழிச் செய்தியா இந்த நாள் கொண்டாடப்பட்டதுக்கு ஒரு வரலாற்று கதை இருக்கு. பண்டைய காலத்துல வணங்கப்பட்ட பெண் கடவுளான சைபீல் எல்லா கடவுளுக்கும் முழு முதல் தாய் கடவுளா, பிரிஜியா மக்களால வணங்கப்பட்டது. இந்த விழா தான் அன்னையர்களை மரியாதை செய்ய கொண்டாடப்பட்ட முதல் விழா நு சொல்றாங்க. ஆனா  முதன் முதல்ல எல்லோருக்கும் தெரியிற வரலாறா மாறுனது 20 நூற்றாண்டோட தொடக்கத்தில தான். ஜார்விஸ் கிற சமூக சேவகி அமெரிக்கா ல உள்ள மேற்கு வெர்ஜீனியா ல உள்ள கிராப்டன் கிற சின்ன கிராமத்துல வாழ்ந்துட்டு வந்தாங்க. யுத்த காலத்தில போர்ல பலியான அமெரிக்க வீரர்களோட குடும்பம் சிதைஞ்ச்சு சிதறிப் போறத தடுத்து நிறுத்த பல நல்ல செயல்களை செஞ்ச்சு போராடுனாங்க. இப்படி பிரிஞ்ச்சு போற அந்த குடும்பத்தோட நல் வாழ்க்கைக்காகவும், சமாதானத்திற்காகவும் போராடி கடைசியில 1905 ல  ஜார்விஸ் இறந்து போயிடுறாங்க.  இவங்க மேற்கு வெர்ஜீனியால உள்ள புனித அந்திரேயா கோயில்ல வேலை செஞ்ச்சுட்டு வந்ததால. அவங்க பொண்ணு அன்னா ஜார்விஸ்  தன்னோட அம்மா இறந்த தினத்தை முன்னிட்டு அவங்க வேலை செஞ்ச அந்த ஊர்ல உள்ள தாய்மார்களை எல்லாம் அழைச்சு அன்னையர் தினமா 1908 மே மாசம்  கொண்டாட ஆரம்பிச்சாங்க. அப்புறம் இது வருசா வருசம் அன்னையர் தினமா அமெரிக்கா முழுசும் கொண்டாடப்படணும் நு அமெரிக்க அரசுக்கு வலியுறுத்துனாங்க. இதன் விளைவா, அமெரிக்காவின் 28 வது அரசரான தாமஸ் வுட்ரோ வில்சன் 1940 ஆண்டு  ஒவ்வொரு ஆண்டும்  மே மாதம் 9 ம் தேதி அன்னையர் தினமா கொண்டாடப்படணும்னு பிரகடனம் செஞ்சு அதுக்கான கையெழுத்தையும் போட்டார். ஞாயிற்றுக் கிழமைகள்ள இந்த தினத்தைக் கொண்டாடுறது சிறப்பா இருக்கும்னு  ஒவ்வொரு ஆண்டும் மே மாசம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமா கொண்டாடுறாங்க. அமெரிக்கா ல அதிகாரப் பூர்வமா உருவான இந்த தினம் இன்னைக்கு உலக மக்கள் பெரும்பாலானவர்களால கிட்டதட்ட 46 நாடுகள்ள கொண்டாடப்படுது. 

இந்த நாள்ள தங்களுக்காக அனைத்தையும் தியாகம் செய்யுற அன்னையர்களை சிறப்பான விதத்தில மகிழ்ச்சி படுத்துறத ஒரு முக்கியமான கடமையா பலரும் செய்யுறாங்க. 

ஒவ்வொரு நாட்டுலயும் எப்படி கொண்டாடுறாங்கனு தெரிஞ்சிக்கலாம் வாங்க. 

வங்க தேசத்துல அன்னையர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறாங்க. ரத்னகர்வா மா விருது இதுல குறிப்படத்தக்காது. 

கனடா ல பொது விடுமுறை தினமா அறிவிக்கப்பட்டு சிறப்பா கொண்டாடப்படுது.

சீனா ல கார்னேசன்  மலர்களை கொடுத்து அன்னையர்களை மகிழ்விக்கிறாங்க. சமீபத்துல சீனால மேங்க் ஸீயு தன் தாயோட நினைவா இந்த நாள் சிறப்பா கொண்டாடப்படணும்னு அன்னையர் திருவிழா ஊக்குவிப்புனு ஒரு அரசு சாரா அமைப்பை உருவாக்கி இந்த நாளை சிறப்பா கொண்டாட வைக்கிறார். 

கிரீஸ் ல அன்னை மரியாள் எருசலேம் தேவாலயத்துக்கு இயேசுவை கொண்டு வந்த நாளா நினைவு கூறி கொண்டாடுறாங்க. 

இந்தியால தேசிய அளவில ஆகஸ்ட் மாதம் 19 ம் தேதி கொண்டாடப்பட்டாலும் இந்த நாளையும் உலக அளவில அன்னையர் தினமா ஏற்றுக் கொண்டாடுறாங்க. 

இது மாதிரி ஈரான் ஜப்பான், மெக்சிகோ நேபாளம் தாய்லாந்து ரோமானியா, பிரிட்டன் அயர்லாந்து, வியட்னாம் நு எல்லா இடங்கள்ளயும் கொண்டாடி மகிழ்ச்சியடையுறாங்க.  

நம்ம எல்லோராட வாழ்க்கையிலயும் பெண் ரொம்ப முக்கியமான அம்சம். மகள் அக்கா தங்கை சித்தி அத்தை பெரியம்மா பாட்டி மனைவி மருமகள் மாமியார் நு எத்தனை உறவு முறையில வந்தாலும் அம்மா எப்பவுமே எல்லோருக்குமே ஸ்பெஷல் தாங்க. அந்த உறவை எந்த உறவாலயும் மிஞ்ச முடியாது. ஏன்னா அம்மா தான் உறவுக்கு எல்லாம் முதல் உறவு. அம்மா சொல்லி தான் அப்பாக்ங்கிற உறவே பிள்ளைங்களுக்கு தெரியுது. அதுக்கு அப்புறம் தான் மத்த உறவு எல்லாம். 

அன்னையர் தினம் கொண்டாடுற இந்த நாள்ல உலகத்துல இருக்குற எல்லா அன்னையர்களுக்கும் நம்மோட வாழ்த்துக்களை சொல்வோம். தியாகத்தை தன்னோட உடல் மூழுசும் ஓரவ விட்டு நமக்காக தன்னோட வாழ்க்கைய வாழ்ற எல்லா அம்மாக்களும் சந்தோசமா நிறைவா அமைதியா அன்பா வாழணும்னு அதுக்கு  அவங்கள நாம வாழ வைக்கணும். அன்பையும் தியாகத்தையும் அளவில்லாம கொடுக்கிற அத்தனை அன்னையர்களுக்கும் அகில உலக அன்னையர் தின வாழ்த்துக்கள், மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெசஹ்ல் மூலமா உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.   

Wednesday, 4 May 2022

அன்பு ஆயனா? ஆடம்பர ஆயனா?

 பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு


I. திருத்தூதர் பணிகள் 13:14, 43-52

II. திருவெளிப்பாடு 7:9, 14-17

III. யோவான் 10:27-30


பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிற்றை நல்லாயன் ஞாயிறாக சிறப்பிக்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும் ஆயனாம் ஆண்டவர் இயேசுவின் பெயரில் அன்போடு அழைக்கின்றேன். "ஆண்டவரே என் ஆயர்" இது குழந்தைகள் வரை பெரியவர் வரை அனைவரும் முணுமுணுக்கும் ஒரு நாம செபம். ஆண்டவர் இயேசுவை ஆயன் தோற்றத்தில் பார்த்து அவர் ஆடுமேய்த்தாரா என்று பிற மதத்தவர்கள் சிலர் என்னிடம் கேட்டது கூட உண்டு அப்போதெல்லாம், அவர் ஆடுகளை மேய்க்கவில்லை, மந்தைகளாகிய எங்களை மேய்க்க ஆயனாக மாறி இருக்கின்றார் என்று கூறுவதுண்டு. ஆடுகள் நம்மோடு மிக நெருங்கிய தொடர்புடையவை. வீடுகளில் கோவிலுக்கு நேர்ச்சை என்று ஆசைஆசையாக ஆடுகளை வீட்டில் ஒருவர் போல வளர்ப்பது நம் பழக்கம். அப்போது அந்த ஆடுகள் நம்மோடு ஏற்படுத்தும் உறவு, ஒரு விதமான உணர்வு. அதை வார்த்தையால் விவரிக்க முடியாது. எங்கு சென்றாலும் உடன் வருவது, அழைத்தவுடன் ஓடி வருவது,என நம்முடனான உறவை தன் செயல்கள் மூலம் காட்டும் ஒரு சிறப்பான விலங்கினம்.


ஆயன் - தன் மந்தையை எல்லா விதமான இக்காட்டிலிருந்தும் காக்கும் வலிமை உடையவர். தன்னுடன் வைத்திருக்கும் கோல் கொண்டும் கழி என்னும் ஆயுதம் கொண்டும் தாக்க வரும் விலங்குகளை எதிர்க்கும் துணிவு படைத்தவர். ஆடுகளின் பசி தாக உணர்வினைப் புரிந்து அதற்கேற்ற புல்தரைக்கு அழைத்து செல்பவர். ஆடுகளின் உடல் நலனில் அக்கறை கொண்டவர். இப்படியாக...... பழைய ஏற்பாட்டிலும் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி ஆடுகளும் ஆயன்களும் மிகச்சிறப்பான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றனர். ஆபேல், மோயீசன், சவூல் தாவீது என பலர் ஆயன்களாக இருந்து ஆயர்களாக, மக்களை வழிநடத்துபவர்களாக மாறி இருக்கின்றனர். நம் இயேசு ஆயன்களுக்கெல்லாம் மேலான ஆயன். அவர் தமது மந்தையை எப்படி வழி நடத்துகிறார் என்பதை தனது போதனையாலும் செயலாலும் தன்னோடு வாழ்ந்த சீடர்களுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்தி இருக்கிறார். நாம் அவர் மந்தையைச்சேர்ந்த ஆடுகள் . அவர் வழி நடக்க நாம் செய்ய வேண்டியதெல்லாம் இரண்டு தான். ஒன்று அவர் குரலைக் கேட்டு நடப்பது. இரண்டு அவர் நம்மை அறிந்து வைத்திருப்பது போல நாமும் அவரை அறிந்து வைத்திருப்பது. இவை இரண்டிலும் வளர்ந்து ஆயனை மகிழ்விக்கும் ஆடுகளாக நாம் மாற இன்றைய வாசகங்கள் வழி இறைவன் நமக்கு அழைப்புவிடுக்கின்றார்.


அவர் குரலைக் கேட்கவும் அவரை அறிந்து கொள்ளவும் நாம் பல முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆயனின் குரலைத் தெளிவாக கண்டு கொள்ள பிற சப்தங்களுக்கு நம் மனதில் இடம் கொடுக்காதிருப்போம். அவரை அறிந்து கொள்ள அவரோடு அதிக நேரம் செலுத்துவோம். நாம் பல நேரங்களில் போலியான ஆயன்களின் குரலுக்கு செவிமடுத்து ஏமாந்து போகிறோம். போலி ஆயன்களின் பொய்யான பரப்புரைகளை நம்பி இது தான் என் ஆயன் என்று எண்ணி தவறாக அறிந்துவிடுகிறோம். வீண் பகட்டு ஆடம்பரம் அமளி ஆர்ப்பாட்டம் இவற்றால் உண்மையான ஆயனின் உருவத்தை மறந்துவிடுகிறோம். பார்வையில் தெளிவும் கேட்டலில் கூர்மை உணர்வும் கொண்டு வாழும் போது மட்டுமே உண்மையான ஆயனை கண்டு கொள்ளமுடியும்.

ஒரு முறை பரந்த புல்வெளியில் ஆயன் ஒருவன் தன் ஆடுகளை மேய்த்து வந்தான். அவனது கையில் தடிமனான பெரிய கோல் ஒன்றும் அதனோடு முனையில் இணைக்கப்பட்ட கழி ஒன்றும் எப்போதும் இருக்கும். பல நாட்களாக தன் மந்தையை மேய்ச்சல் நிலத்துக்கு அழைத்துச்செல்வதும் மீண்டும் தன் பட்டிக்கு கூட்டி வருவதுமாக தன் காலத்தைக் கழித்தான். ஒரு நாள் மேய்ச்சல் நிலத்துக்கு தன்னால் போக முடியாமல் போகவே தன் மகனை ஆடுகளை பட்டிக்கு திரும்ப அழைத்துவர அனுப்பினான். ஆயனின் தோற்றம் போல் இல்லாது மகன் இருக்கவே ஆடுகள் தயக்கமுற்றன. ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு முன்னேறின. மகனின் கையில் ஆயனின் கோல். உறுதியான தடிமனான மரத்தாலான் கோலைக் கண்டு, இது நிச்சயம் நம் ஆயனின் கோல் தான், அவர் விருப்பத்தின் படியே நாம் அவர் மகனுடன் செல்கிறோம் என்பதை உறுதி செய்து கொண்டன. சற்று நேரத்திற்கு அப்பால் இன்னொரு இளைஞன். தோற்றம் இளவரசனைப் போல் இருந்தது. கையில் தங்கத்தாலான ஒரு பெரிய செங்கோல். அதனூடே வைரங்களும் பவளங்களும் இணைக்கப்பட்டிருந்தன. அவன் ஆடுகளைப் பார்த்து , எத்தனை நாள் தான் இப்படி அங்கும் இங்கும் ஓடி களைப்பீர்கள் என்னோடு வாருங்கள் புல்வெலியை உங்களைத்தேடி வரச்செய்கின்றேன். நீர் நிலைகளை நீங்கள் இருக்கும் இடத்திலேயே அமைக்கின்றேன். வெயிலிலும் குளிரிலும் நீங்கள் உணவுக்காக அலைய வேண்டாம் எல்லாம் உங்களைத் தேடி வரும். நீங்கள் இருக்கும் இடத்தை பஞ்சு மெத்தைகளால் நிரப்புவேன். என்று பலவாறு அடுக்கிக்கொண்டே போனான். சஞ்சலமுற்ற ஆடுகள் சில, அந்த இளவரசன் சொன்ன பேச்சைக் கேட்டு அவர் பின்னே செல்ல முயன்றன. தங்களோடு பிற ஆடுகளையும் வருமாறு அழைத்தன. இறுதியில் பாதிக்கு பாதியாக பிரிந்து, சில இளவரசனைப் பின்பற்றின. சில ஆயனின் மகனைப் பின்பற்றின.


ஆயனின் இல்லம் திரும்பிய ஆடுகள் ஆயனால் கட்டி அணைக்கப்பட்டு அன்பு செலுத்தப்பட்டன. வீடு திரும்பாத ஆடுகளுக்காக ஆயன் கண்ணீர் விட்டான், அவற்றை நினைத்து வருந்தினான். எஞ்சிய ஆடுகளை பத்திரமாக அதற்கான கொட்டிலில் அடைத்து இரவு பகலாக காவல் செய்தான். இளவரசனோடு சென்ற ஆடுகளோ, கொடிய இருட்டறையில் அடைக்கப்பட்டன. காய்ந்த புற்களும் சிறிதளவு தண்ணீரும் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டண. இறுதியில் அவை அந்த இளவரசனுக்கு பொழுதுபோக்கு காண்பிக்கும் விலங்கினங்களாக மாற்றப்பட்டன. மரத்தாலான ஆயனின் கோலினை அவைகள் அப்போது நினைத்துப் பார்த்தன. தங்கத்தாலான இளவரசனின் செங்கோலினை விட, கரடுமுரடான ஆயனின் கோல் எவ்வளவோ மேல் என்று. தங்கள் ஆயன் மீண்டும் வருவார் தங்களை மீட்க என்று எண்ணி காத்திருக்க தொடங்கின.


நாமும் பல நேரங்களில் இப்படி தான் இழந்தவுடன் தான் அதன் அருமை புரிந்துகொள்கின்றோம். பணமும் பகட்டும் ஆடம்பரமும் கொண்ட ஆயன்களையே பெரும்பாலும் நாம் தேடுகிறோம். விளைவு பகட்டு பகலிலேயே முடிவடைந்து விடுகிறது. நமது ஆயன் நம் அருகிலேயே இருக்கின்றார். ஆடம்பரத்தை விட்டு விட்டு அன்பை தேடுவோம் ... அன்பான ஆயனின் குரலில் தெளிவு இருக்கும் குழப்பம் இருக்காது. கோல் கரடுமுரடானதாக வடிவமில்லாததாக இருக்கும். தங்கமும் வைரமும் நிறைந்ததாய் இருக்காது. எனவே அன்பு உள்ளங்களே நம் அன்பு நிறைந்த நம் ஆயனைத் தேடுவோம் ஆடம்பரமான ஆயனை அல்ல. அவர் நம்மோடு இருக்கும் போது நமக்கு எக்குறையுமிராது. நாம் இருக்கும் இடம் பசும்புல்வெளியாக மாறும். நீரோடை ஊற்றாக பொங்கி எழும். நாம் நம் ஆயனை அறிந்தவர்களாவோம். அவர் நம்மை அறிந்தவராவார். இப்படிப்பட்ட நிலையை நாம் அடைய ஆண்டவராம் ஆயனின் ஆசீரை வேண்டுவோம்.இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.

Monday, 2 May 2022

உலக பத்திரிக்கை சுதந்திர தினம்.

 இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? வணக்கம் அன்பு உள்ளங்களே மே 3 உலக பத்திரிக்கை சுதந்திர தினம். பத்திரிக்கை ங்கிறது சஞ்சிகை செய்தித்தாள் மாத வார இதழ்,நு பல வடிவங்கள்ல அச்சிடப்பட்டு  செய்திகளையும் கருத்துக்களையும் இயற்கலை படைப்புக்களையும் மக்கள் அறிய, பகிர பரப்ப வெளி வருகிற ஒரு படைப்பு. இந்த உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்படுறதுக்கான காரணம் வரலாறு என்னன்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க. 

1993 ல ஐக்கிய நாடுகளோட பொதுசபைக் கூட்டத்தில ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி மே 3 ம நாள் ஒவ்வொரு ஆண்டும் உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்படணும் நு முடிவு செஞ்சாங்க. பத்திரிக்கை சுதந்திரத்தை உலக மக்கள் கிட்ட பரப்பணும்கிறதுக்காகவும், மனித உரிமைகள் சாசனம் பகுதி 19 ல சொல்லப்பட்டுருக்கிற மாதிரி பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளோட அரசுகளுக்கு நினைவுபடுத்துறதுக்காகவும் ஐக்கிய நாடுகள் அவையினால இந்த நாள் சிறப்பு நாளாக் கொண்டாடப்பட்டது. 

இந்த நாள்ள ஊடக சுதந்திரத்துக்கு  பங்களிப்பைக் கொடுக்கிற ஒருத்தருக்கு யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ கிலெர்மோ கானோ உலக பத்திரிக்கை விருது கொடுத்து கௌரவப்படுத்துறாங்க. கிலெர்மோ கானோ கிறவரு கொலம்பிய எல் எசுப்பட்டாடோர் கிற பத்திரிக்கை நிறுவனத்தோட பத்திரிக்கையாளர் இவர் 1986  டிசம்பர் 17 அன்னைக்கு பத்திரிக்கை அலுவலகம் முன்னாடியே  போதைப் பொருளுக்கு எதிரா குரல் கொடுத்ததுக்காக படுகொலை செய்யப்பட்டாரு. இதனால பத்திரிக்க சுதந்திரம் பத்திய பேச்சு உலக நாடுகள் எல்லாம் பரவ ஆரம்பிச்சது. இவரோட மரணத்தை நினைவு கூர்ற விதமாவும் பத்திரிக்கை சுதந்திரம் இன்னும் அதிகரிக்கணும் நும் இவரோட பெயரால் வருசா வருசம் இந்த விருது கொடுக்கப்படுது. அதுமட்டுமில்லாம உலக அமைதி, பேச்சு சுதந்திரம், பத்திரிக்கை தர்மம் நு பல விதங்கள்ள உழைக்கிற ஒரு பத்திரிக்கை எழுத்தாளர உலக அளவுல தேர்வு செஞ்சு 25000 டாலர் மதிப்புள்ள பரிசும் வழங்கப்படுது. 14 நபர்களைக் கொண்ட குழு இந்த நபர் யாருங்கிறத தீர்மானித்து 1997 ல இருந்து இந்த விருது கொடுக்கப்பட்டு வருது. 

இந்தியால பத்திரிக்கை சுதந்திரம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்துல ரொம்பவே கம்மியா தான் இருந்தது. ஆளுனர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்க்ஸ் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்குற மாதிரி பல விதிகளை அமல் படுத்தினார். முதல் இந்திய பத்திரிக்கையான வங்காள கெஜட் கிற பத்திரிக்கையை கண்டித்து  அதோட ஆசிரியரையும் கைது செஞ்சு சிறையில  1781 ல அடைச்சார். அதுக்கு அப்புறமா 1799 ல பத்திரிக்கைகளுக்கான புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுச்சு. பத்திரிக்கை ஆசிரியர் உரிமையாளர், முகவரி எல்லாத்தையும் கட்டாயம் அரசுக்கு தெரிவிக்கணும், பத்திரிக்கை ல அதோட ஆசிரியர் பேரு கட்டாயம் போடணும். ஞாயிற்றுக்  கிழமையில பத்திரிக்கை வெளியிடக் கூடாது. இந்த கட்டுப்படுகளை விதிகளை மீறுறவங்கள நாடுகடத்தப்படுவாங்கன்னு பல சட்டங்களைக்  கொண்டு வந்தாங்க. காலணி ஆதிக்கம் முடிவுக்கு வந்ததுக்கு அப்புறமா இந்தியால பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்கப்பட ஆரம்பிச்சது. இன்னும் உலக அளவில பல இடங்கள்ல பத்திரிக்கை சுதந்திரம் கேள்விக் குறியாதான் இருக்கு. 

நாட்டுபற்றோட இதழியல் ஆசிரியர்களா திகழ்ந்த பல இந்தியர்கள் இந்த பத்திரிக்கை சுதந்திரத்துக்காக போராடி இருக்காங்க. இராஜாராம் மோகன் ராய், அரவிந்த கோஷ், லாலா லஜபதிராய், சுரேந்திர நாத் பானர்ஜி, திலகர், விபின் சந்திரபால், மகாத்மா காந்தி, தேசியக் கவி ஞர் சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா, திருவிக. போன்ற பலர் இவங்கள்ல முக்கியமானவங்க. இவங்களோட முயற்சியினாலும் தொடர் போராட்டத்தினாலயும் தான் இன்னைக்கு நம்மாள எளிமையா நாட்டு நடப்புக்களை தெரிஞ்சிக்கவும், சுதந்திரமா நம்முடைய கருத்துக்களை எடுத்து சொல்லவும் முடியுது. 1947 ல 1000 செய்திதாள்கள் இருந்தது, 1957ல 6903 ஆகவும், 1974 12185 ஆகுவும் உயர்ந்து தொடர்ந்து வளரத்தொடங்கிச்சு. 1975 ல ஏற்பட்ட 19 மாத நெருக்கடி காலத்துல பத்திரிக்கை சுதந்திரம் மறுபடியும் பாதிக்கப்பட்டுச்சு. 1977 ல நடந்த பொதுதேர்தலுக்கு அப்புறமா மீண்டும் பழைய நிலைக்கு முன்னேற தொடங்கிச்சு.  

தமிழ்னாட்டுல வெளிவந்த முதல் பத்திரிக்கை தமிழ்னாடு நாளிதழ். ஆரம்பத்தில வார இதழாக இருந்து அதுக்கு அப்புறமா நாளிதழாக மாற்றம் பெற்றது. இதோட நிறுவனர், .ஆசிரியரா இருந்தவரு டாக்டர் வரதராசுலு. சேரன்மகாதேவி  குருகுலத்துல சம்பந்தி கல்வி முறை வேணும்னு போராடினதால பலரோட வெறுப்பை சம்பாதிச்சார் அதனால தமிழ்நாடு நாளிதழோட வளர்ச்சி பாதிக்கபட்டுச்சு, அதுக்கு அப்புறமா வளர்ந்து வந்தது தான் தினமணி நாளிதழ். இன்னைக்கு  இது போல எண்ண முடியாத அளவுக்கு ஏராளமான நாளிதழ்களும் பத்திரிக்கைகளும் வந்து நம்மோட அறிவுக்கு தீனி போட்டுட்டு இருக்கு. செய்தியின் முக்கியத்துவம், மக்களுக்கும் அரசுக்கும் சொல்ல வேண்டிய முக்கிய கருத்துக்கள், சமூக மக்களின் விழிப்புணர்வு இதை தெளிவா எடுத்துக்கூறுரது தான் ஒரு நல்ல பத்திரிக்கையோட கடமை.  உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை கொண்டாடுற இன்னைக்கு பத்திரிக்கை துறையில வேலை செய்யுற எல்லாருக்கும் நம்மோட வாழ்த்துக்களை தெரிவிப்போம். நம்முடைய நலனுக்காகவும் அறியாமையை நீக்கவும் கடினமா வேலை செய்யுற எல்லா பத்திரிக்கை நணபர்களுக்கும் இனிய பத்திரிக்கை சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் மூலமா உங்களை மீண்டும் சந்திக்கிறென் நன்றி வணக்கம்.

Friday, 29 April 2022

உலக தொழிலாளர்கள் தினம்

 இன்னைக்கு என்ன ஸ்பெசல்? வணக்கம் அன்பு உள்ளங்களே மே 1 உலக தொழிலாளர்கள் தினம். கடின உழைப்பு கட்டாயம் பலன் தரும். அதற்கான காத்திருப்பு  ஒரு நாள் வெற்றிதரும் நு சொல்வாங்க. அது மாதிரி கடினமா உழைக்கிற எல்லா தொழிலாளர்களுக்கான நாள் தான் இந்த உழைப்பாளர் தினம் அல்லது தொழிலாளர் தினம். இந்த நாள் கொண்டாடுறதுக்கான காரணம் வரலாறு என்னன்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க. 

18 ம் நூற்றாண்டோட கடைசியிலயும் 19 ம் நூற்றாண்டோட தொடக்கத்திலயும் வேகமா வளர்ச்சி அடைந்த நாடுகள்ல  தொழிலாளர்கள் 18 மணி நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டாங்க. இதை எதிர்த்து பல போராட்டங்களும் குரல்களும் கொடுக்க ஆரம்பிச்சி இங்கிலாந்துல சாசன இயக்கம் நு ஒன்னு 6 கோரிக்கைகளோட உருவாச்சி அதுல மிக முக்கியமான ஒன்னு 8 மணி நேர வேலை. 

இதைத்தொடர்ந்து உலகம் முழுசும் பல போராட்டங்களும் ஊர்வலங்களும் ஏற்பட ஆரம்பிச்சது.   

1830 ல பிரான்சில நெசவுத்தொழில் செஞ்சிட்டு இருந்த தொழிலாளிங்க 15 மணி நேரம் கட்டாயம் உழைக்க வேண்டியது இருந்தது. இது தொடர்பா 1834 ல ஜனநாயகம் மரணம் கிற கோசத்தை வச்சி கிளர்ச்சி நடந்து தோல்வியில முடிஞ்சது. 

ஆஸ்திரேலியால 1856ல மெல்பர்ன் கட்டிட தொழிலாளர்கள் 8 மணி நேர வேலையை கோரிக்கையா முன்வச்சி வேலை நிறுத்தத்துல ஈடுபட்டு வெற்றி பெற்றாங்க. 

ரஷ்யால சார் மன்னரோட ஆட்சியில ரஷ்ய தொழிலாளிகள் அதிகமான வேலைப்பளுனால கஷ்டப்பட்டபோ 1896 ல லெனின் தலைமையில் இதுக்கான பல போராட்டங்கள் நடந்துச்சு. இது தான் ரஷ்ய புரட்சிக்கு காரணமா அமைஞ்சது. 

அமெரிக்கால 1832 ல பொஸ்டன் கப்பல் ல வேலை செஞ்ச தச்சுத்தொழிலாளர்கள் 10 மணி நேர வேலைய கோரிக்கையா முன் வச்சாங்க. இதே மாதிரி பென்சில்வேனியால நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள், இரயில்வே தொழிலாளர்கள் நு எல்லாரும் குறைவான வேலை நேரத்த வலியுறுத்தி 1877 வேலை நிறுத்தத்துல ஈடுபட்டாங்க. இதனால அமெரிக்கா தொழிலாளர் கூட்டமைப்பு நு ஒரு இயக்கம் உருவாக்கப்பட்டுச்சு. 1886 மே 1 நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு வலியுறுத்தி மே தினம் பிறக்க காரணமா இருந்தது. இந்த வேலை நிறுத்தத்துல தொழில் நகரங்களான சிகாகோ நியுயார்க், பிலடெல்பியா, மில்விக்கி சின்சினாட்டி பால்டிமோர் நு அமெரிக்கா முழுசும்  மொத்தம் 1200 நிறுவனங்கள்ள இருந்து ஏறக்குறைய 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்றாங்க.


இந்தியால முதல் முறையா சென்னையில தான் தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டுச்சு. 1923 ல் பொதுவுடைமைவாதியும் தலை சிறந்த சீர்திருத்த வாதியுமான ம. சிங்காரவேலர் சென்னை உயர் நீதிமன்றம் பக்கத்துல உள்ள மெரினா கடற்கரையில முதல் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடி செங்கொடி ஏற்றினார்.. 

இந்த மே தினத்தை சிறப்பிக்கிற விதமா பல சிலைகள் நினைவுச்சின்னங்கள் உலகம் முழுசும் இருக்கு. நம்ம சென்னையில மெரினா கடற்கரையில அண்ணா சதுக்கம் எதிர்ல, 1959 ல   தொழிலாளர் வெற்றி சின்னம் எழுப்பப்பட்ட்ச்சு. 1990 ல நேப்பியர் பூங்கா மே தினப் பூங்கானு பெயர் மாற்றப்ப்ட்டுச்சு. இதுபோல  அமெரிக்க ஐக்கிய நாடுகள்ள, பியர்லஸ் கர்ல் ஸ்டசு, ஸ்பிரிட் ஆப் சொலிடரிடி ஸ்டசு, ஹைமார்கெட் டிரஜெடி ஸ்டசு உருவாச்சு. 

இந்த தினம் கொண்டாடப்படுறதுகான காரணம் ஓய்வில்லாமல் உழைச்சிட்டு இருக்கிற தொழிலாளர்களுக்கு அவங்க உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கணும் கிறது, தான்.  தொழிலாளர்கள் எல்லாரும் தங்களோட உழைப்பை சுரண்டுற முதலாளிகளுக்கு  எதிரா  ஒண்ணு கூடணும்னு நினைச்சு இந்த தினத்துக்கு அடிக்கல் நாட்டியவர் கார்ல் மார்க்ஸ். உழைப்பு இல்லாம எந்த உயிரும் இல்லை சின்ன எறும்பு கூட அது தேவைக்கு உழைக்குது. ஆனா ஆறறிவு உள்ள மனுசன் தான் ஐந்தறீவு ஜீவனை விட மோசமா நடத்தப்படுறான் இதை தடுக்கணும் அவங்களுக்கான  உரிமையையும் ஊதியத்தையும் அவங்க பெறணும்னு உருவாக்கப்பட்டது இந்த நாள். 

தற்போது இந்த தினம் கிட்டதட்ட 80 நாடுகள்ல கொண்டாடப்படுது. உழைப்பு கிறது எல்லாருக்கும் பொதுவானது. கந்தல் ஆடை கதர் சட்டை எது உடுத்தி வேலை செஞ்சாலும் வேலை வேலை தான் . அதிக சம்பளம் வாங்குறவன் குறைந்த சம்பளம் வாங்குறவன் கிற வித்தியாசத்தி வச்சி ஒருத்தரை நாம எடை போடக்கூடாது. அப்படிப்பட்ட மனநிலைய கட்டாயம் நாம் மாத்தணும். திருட்டு பொய் சட்டத்திற்கு புறம்பான செயல் இது இல்லாம செய்யப்படுற எல்லா வேலையும் சிறப்பான வேலை தான். 

அதனால் உலக தொழிலாளர்கள் தினம் கொண்டாடுற இந்த நாள்ல கஷ்டப்பட்டு வேலை செய்யுற ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் உடல் உள்ள நலன் கிடைக்கவும் அவங்க உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவும் வாழ்த்துவோம். 

இயக்கம் இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை . இதயம் இயங்கும் கடிகாரம் முதல் இந்த பூமி வரை எல்லாமே இயக்கத்தினால தான் இயல்பா இருக்கு. 

தொழிலாளர்கள் கிற சக்கரத்தால தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக்கிட்டு இருக்கு. அவங்களோட வியர்வை துளிகள் புனிதமானது சொன்னால் கூட  மிகையாகாது.  உழைப்பை போற்றுவோம் உழைப்பாளர்களை பாதுகாப்போம். வாழ்த்துவோம் வாழவைப்போம். 

கடினமா உழைச்சு நாட்டையும் வீட்டையும் உயர்த்த துடிக்கிற  ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் இனிய உழைப்பளர்கள் தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வழியா உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.  

Monday, 25 April 2022

நன்றி வழிபாடு.

  எல்லாம் படைத்து அதில் என்னையும் வைத்து காலமெல்லாம் காக்கும் கருணை தெய்வமே உம்மை வணங்கி வாழ்த்தி இச்செப வேளையை துவங்குகிறோம். 

தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். 

அன்னையாய் அருகிருந்து ஆசானாய் வழிநடத்தி அற்புதங்கள் புரியும் இறைவா உமக்கு நன்றி. இவ்வுலகைப் படைக்க காத்திருந்த அந்த முதல் நாளில் இருளாய் இருந்தது. உலகம் இருளாய் இருப்பது நல்லத்தல்ல என்று எண்ணி ஒளியை உண்டாக்கினீர். ஒளி உண்டானதால் உயிரினங்கள் வளரத் தொடங்கின. புல் பூண்டுகள் முளைக்கத் தொடங்கின. வெறுமையில் இருந்த இவ்வுலகம் நிறைவை அடையத் தொடங்கியது. அது போல இந்நாளின் நிறைவை அடைய நன்றி என்னும் உணர்வில் திளைக்க நாம் கூடியுள்ளோம். நம் கைகளில் தாங்கியுள்ள இந்த ஒளி நம் வாழ்வென்னும் பொன்னாளை ஒளிர்விக்க அருள் வேண்டுவோம். ஒளி கொண்டு நம் வாழ்வை மெருகேற்ற, வளமான வாழ்வாக நம் வாழ்வு அமைய அருள்வேண்டி பவனி செல்வோம். 

மகிழ்வையும் செழிப்பையும் குறிக்கும் சந்தன குங்கும திலகமிட்டு, தனது வாழ்வின் அடுத்த ஆண்டில் புதிய பணியினை மேற்கொள்ளக் காத்திருக்கும் சகோதரி அவர்களின் வாழ்வு ஒளி மயமாக மகிழ்வாக செழிப்பாக அமைய வாழ்த்தி மகிழ்வோம்.


பச்சை கம்பளம் கொண்டு பாரினை போர்த்தி, ஒளி விளக்கு கொண்டு உயர் வானத்தை வெளிச்சமாக்கிய இறைவா உமக்கு நன்றி. 

அனுபவங்கள் வழி அன்றாட வாழ்வின் எதார்த்தங்களை அன்பாய் ஊட்டியதற்காய் நன்றி. 

உடன் பயணித்த உறவுகள் வழி உண்மைகளை எடுத்துரைத்தற்கு நன்றி. 

இப்படி நன்றி நன்றி நன்றி என்று கூற அடுக்கடுக்கான காரணகளும் காரியங்களும் பல உள்ளன. அவை அனைத்தையும் சொல்லி முடிக்க எம் ஆயுட்காலம் போதாது இறைவா. எனவே இந்நேரத்தில் நன்றி என்று கூறி நீர் செய்த அனைத்தையும் நினைத்துப் பார்க்கிறோம். உம் வழியாக பெற்ற அனைத்திற்கும் நன்றி கூறி உம் ஆசீர் வேண்டுகின்றோம். இப்பாடல் வழி

நன்றி பாடல்.....


செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றி தான். முடிவே இல்லாத பாதையில் பயணிக்கின்றோம். முடிவில் இறைவா நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில். ஆம் அன்பு உள்ளங்களே வாழ்க்கை என்னும் நமது பயணத்தில் நாம் சந்திப்பவர்கள், நம் உடன் பயணிப்பவர்கள் அதிகம். பார்க்கும் இடங்கள், நம்மைக் கடந்து போகும் உணர்வுகள், நபர்கள், நினைவுகள் எல்லாமே நிலையற்றவைகள். நம் பயணத்தை இனிமையாக்க நமக்கு உடன் கொடுக்கப்பட்டவர்கள். நம் களைப்பை ஆற்ற நாம் எடுத்துக் கொள்ளும் குளிரூட்டிகள். நம்மை மகிழ்ச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்க கொடுக்கப்பட்ட ஊட்டச்சத்துக்கள். அவ்வகையில் சகோதரி தனது வாழ்க்கையின் பயணத்தில் சந்தித்த ஒரு நிறுத்தம் தான் இந்த இல்லம். தன்னுடைய சுறுசுறுப்பான செயலாலும் சொல்லாலும் வாழ்வாலும் பணியாலும் பணித்தள மக்களைக் கவர்ந்தவர், புன்னகையால் புத்துணர்ச்சி அளித்தவர். நட்புறவில் நன்மைகள் பலவற்றை செய்தவர். உதவிக்கரம் கொடுத்து உண்மையான உறவுகளை உரிமையாக்கிக் கொண்டவர். பொறுமை என்னும் பண்பு கொண்டு பொற்குடமாய் சிறந்தவர். எளிமை தாழ்ச்சி கீழ்ப்படிதல் மகிழ்ச்சி கொண்டு தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்பவர்கள். ஓராண்டு காலம் இவ்வில்லத்தில் நிறைவாக பணி செய்து தன் மேற்கல்வியை தொடர இருக்கும் சகோதரியின் மன நிறைவோடு நாமும் இணைந்து திருப்பாடல் வழி இறைவனுக்கு நன்றி கூறுவோம். 

திருப்பாடல் 136.......


வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஏதோ ஒன்றை கற்பித்து விட்டு தான் செல்கின்றார்கள். கற்றலும் கற்பித்தலும் தானே வாழ்க்கை. 

எண்னுடையதெல்லாம் என்னுடையதல்ல. உன்னுடையதெல்லாம் என்னுடையதே , என்னுடையதெல்லாம் உன்னுடையதே இறைவா என்று திறந்த மனப்பான்மையுடன் இறைத்திருமுன் அமர்ந்திருக்கும் சகோதரி அவர்களுக்கு இறையாசீர் சிறப்பாக கிடைக்க செபிப்போம். 

நன்றி வாழ்த்து.....


கொடுத்த கொடைகளை இறைப்பதம் அர்ப்பணித்து அதற்காய் நன்றி கூறியும், மேலும் பல நலன்களால் தன்னை நிரப்ப வேண்டும் என்று காத்திருக்கும் நம் சகோதரியோடு நாமும் இணைந்து எல்லா வரங்களாலும் நலன் களாலும் இறைவன் அவர்களை நிரப்ப இறைமகன் இயேசு கற்பித்த செபத்தை ஒருமித்து செபிப்போம். 

விண்ணுலகில் இருக்கின்ற......       

  மகிழ்வான தருணங்கள், மறக்க முடியாத நிகழ்வுகள்,

அன்பான உறவுகள், ஆழமான வார்த்தைகள், 

இன்பமான இடங்கள், ஈடில்லா குணங்கள், 

உன்னதமான உள்ளங்கள், ஊக்கம் தரும் ஊரார்கள். 

என பெற்ற அனைத்து நன்மைகளுக்கும் நன்றி கூறி, செய்த நன்மைக்கு நன்றி எதிர்பார்க்காது, பெற்ற நன்மைக்கு நன்றி கூறி மகிழும் நம் சகோதரியோடு நாமும் இணைந்து மகிழ்வோம். 

பாடல் நெஞ்சே நீ ஆண்டவரை......

அன்பு ஒன்று தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான் என்பர் கவிஞர். ஆம் இயேசுவின் அன்பர்களாகிய நாம் அன்பு செலுத்துவதில் வல்லவர்கள், இயேசுவிடமிருந்து அன்பை பெற்று அதை உலகோர்க்கு அள்ளித்தருவதில் நமக்கு முன்மாதிரிகையாக திகழ்பவர் அன்னை மரியாள் எனவே அன்னையை போற்றி அவரின் அருள் வேண்டி பாடுவோம். 

 மாதா பாடல்

 என்னவனே இறைவா என் வாழ்க்கை பயணத்தில் எனக்கென நீ குறிக்கும் திசையே நான் விரும்பி ஏற்று பயணிக்கும் பாதையாக அமையட்டும் என்று இறைப்பதம் தன்னை அர்ப்பணித்து மக்ழிவுடன் தன் பயணத்தை தொடங்க இருக்கும் சகோதரியை இறைவன் நிறைவாக ஆசீர்வதித்து எல்லா நலங்களாலும் வரங்களாலும் நிரப்பி வழிநடத்தி  வழ்நாளெல்லாம் காப்பாராக. ஆமென்.      

Sunday, 24 April 2022

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

 அருட்தந்தை ஆல்வின்


அம்மன் பேட்டையில் வந்துதித்த அற்புத சூரியனே

அன்பர் பணிசெய்ய அழைக்கப்பெற்ற ஆர்வளனே

உன்னை அழைத்ததும் நாமே 

உரிய பணிசெய்ய நுழைத்ததும் நாமே

என்ற ஆண்டவரின் அற்புத வாக்கை 

அனுதின வாழ்வாக்க அர்ப்பணித்தவனே


தந்தை சின்னப்பன் தாய் விக்டோரியாவின் மூன்றாவது முத்தானவனே

அந்தோணி டேவிட், லூயிஸ் விக்டரின் அருமை தம்பியே

அழைத்த இறைவனின் பாதையில் பயணிக்க இருக்கும்

அற்புத வேளையில்  ஆயிரம் நன்றிகள் கூறுகின்றோம்.

உன்னை எம் குடும்பத்தில் கொடையாக கொடுத்ததற்கு.


நல்ல தொடக்கம் பாதி  வெற்றி 

உனது தொடக்க கல்வியோ அம்மன் பேட்டை

புனித வளனார் நடுநிலைப்பள்ளி. 


உயரம் கூட கூட உவகை கூடும் 

உன் உவகையைக் கூட்டிய உயர்நிலைப் பள்ளி

வரதராஜன் பேட்டை புனித தொன்போஸ்கோ பள்ளி.


மேலானவர்கள் மேன்மையான செயலை செய்வார்கள்

உன்னை மேன்மைப்படுத்தி மெருகேற்றியது 

கும்பகோணம் சிறுமலர் மேல்நிலைபள்ளி.


கலைகளையும் கல்வி தரங்களையும் 

களப்படமற்ற நட்புகளையும் நீ கற்று - வசந்த

காலங்களை வாழ்வில் பெற்று தந்தது 

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி.


நம்மை நாம் யார் என உணர உதவும் ஆன்மிக வாழ்வில்

ஆழம் கண்டு அனுபவப்பட அதிகமாக உதவியது

கோவை நல்லாயன் குருமடம்.


இயற்கை, மனிதம் சமூகம் மூன்றையும் 

இணைத்து உலகப்பார்வையில்  தெளிவு பெற

இனிமையாய் தத்துவவியல் கற்பித்தது

பூனா பாப்பிரை குருமடம்.



இறைவனின் பண்புகளை இதமாய் புரிந்து

இன்பமாய் வாழ இறையியல் கற்பித்தது.

புனித யோவான் குருமடம் பாஸ்டன் அமெரிக்கா.


இப்படி அனுதினமும் நொடிப்பொழுதும் 

இறைவன் உன்னை மெருகேற்றி மேன்மைப்படுத்தினார். 

இனிதான  பண்புகளாலும் இலகுவான குணகளாலும் 

இன்புற வைத்து இறுதியாக இறைப்பணிக்கென அழைத்தார்.


22.05 2021அன்று எம் குடந்தை மண்ணின் அருட்தந்தையாக 

அமெரிக்க மண்ணில் அருட் பொழிவு பெற்றாய்.

சொந்தம் துறந்து பந்தம் மறந்து தாய் மண்ணையும் விட்டு

அயல் நாட்டில் அருட்பொழிவு பெற்றாலும் - எம்

அம்மன் பேட்டை மண் உனது அருளுக்கு அருள் சேர்க்க விரும்புகிறது.


மழலையாக மண்ணில் பிறந்தாய்

மாபரன் பணி செய்ய அழைக்கப்பெற்றாய்

கல்வி பல கற்றுன் கருத்தாய் உன்னை நீ வளர்த்தாய்

காருண்ய கடவுளின் கருணையை கடலளவு பெற்றாய். 

குருத்துவம் என்னும் திரு அருட்சாதனத்தை பெற்ற நீ

குன்றாது இவ்வருளில் நிலைத்து நின்று

குடும்பத்தார்க்கும் கூடி வாழும் உறவுக்கும் 

குறையாத இறை அருளை நாளும் பெற்றுத்தருவாய்.

விதையாக விழுந்து இன்று விழுது விட துணிந்திருக்கும் உன்

வித்தியாசமான விந்தையான விழுமிய வாழ்வு 

பல இளம் உள்ளங்களுக்கு விதையாக மாறட்டும். 


நன்றி உணர்வோடு திளைத்திருக்கும் இவ்வேளையில் 

நன்மைகள் செய்த இறைவனுக்கு நாங்களும் நன்றி நவில்கின்றோம்.

கலப்பையில் கை வைத்த பின் திரும்பி பார்ப்பவனல்ல நீ

கட்டு கட்டாய் அறுவடை செய்து திரும்புவன் நீ 


காலங்கள் தரும் அனுபவங்களையும் ஆச்சரியங்களையும்

அன்றாட வாழ்வின் அனுதின உணவாக கொண்டு

ஆச்சரியமூட்டும் செயல்களால் அழைத்தலை ஆழப்படுத்த வாழ்த்துகிறோம்.

 முதலாண்டு குருத்துவ அருட்பொழிவு நாள் வாழ்த்துக்கள். 

குருத்துவ நன்றி விழா திருப்பலி வாழ்த்துக்கள்.   




   

Saturday, 23 April 2022

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்.

 இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ? வணக்கம் அன்பு உள்ளங்களே ஏப்ரல் 24 . தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம். 

பஞ்சாயத்து இதுல உள்ள முதல் பஞ்ச் கிறது ஐந்து என்ற எண்ணையும், யாத் கிறது மன்றம், பேரவை அல்லது கூட்டம் கிறதை குறிக்கிற ஒரு வழக்கு சொல்லையும் குறிக்குது. கிராமங்கள்ள மக்களுக்குள்ள ஏற்படுற பிரச்சனைகளே அவங்களே  கூடி தீர்த்துக்கிறதுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு தான் இந்த பஞ்சாயத்து ராஜ். இந்த வார்த்தை மகாத்மா காந்தி அவர்களால, பிரித்தானியா ஆட்சி காலத்துல உபயோகப்படுத்தப்பட்டது. கிராமங்களை அவர் அதிகமா விரும்புனதுனால பஞ்சாயத்து ராஜ் கிற இந்த  வார்த்தையே இந்த அமைப்புக்கான பெயரானது. தமிழ்ல இதை ஊராட்சினு சொல்றோம். மத்திய இந்தியாவில பஞ்சமண்டலங்கள், பீகார்ல கிராம ஜன பாதங்கள், இராஜஸ்தான்ல பஞ்ச குலங்கள்னு அழைக்கப்படுது.   கிராம மக்களுக்கு அதிகமான உதவிகளை செய்யணும் கிறது தான் மிக முக்கியமான காரணமா இருந்தது.   

உள்ளாட்சி அமைப்புகள் தங்களோட தேவைகளை வளர்ச்சியை திட்டமிட்டு நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இந்த திட்டம் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களோட கனவு. அதனால திரு நரசிம்மராவ் அவர்களால 1992 ஏப்ரல் 24 ம் தேதி கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. 

இந்த பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் அடிப்படையில ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூன்று அடுக்குகள்ல இயங்குது. மாவட்ட அளவில, வட்டார அளவில, கிராம ஊராட்சி அளவில. 

பஞ்சாயத்து முறை இருந்ததை நமக்கு சோழர் கால உத்திரமேருர் கல்வெட்டுகள்  குடவோலை முறை முலமா கிராம சபை மற்றும் வாரியத் தலைவர்கள் தேர்ந்த்தெடுக்கப்பட்டதை எடுத்து சொல்லுது. 1882 ரிப்பன் பிரபு காலத்தில தல சுய ஆட்சி திட்டம் மூலமா பஞ்சாயத்து சட்டம் பத்தியும் அறிய முடியுது. 

பஞ்சாய்த்து ராஜ் திட்டம் மூலமா மக்களுக்கு தேவையான 29 நலத்திட்டங்களை செய்ய முடியும். மாவட்டம் ஒன்றியம் கிராமம் நு மூனு பிரிவா அதிகாரங்களை பிரிச்சு செய்யுற ஒரு மிகச்சிறந்த அமைப்பு. மூணுல ஒரு பங்கு பெண் உறுப்பினர்கள் இருக்கிறாங்க. வருசத்துக்கு 4 முறை கூடி தங்களோட திட்டங்களை செய்யுறாங்க. சாலை வசதி, குடி தண்ணீர், தெரு விளக்கு, சுகாதாரம் , கல்வி, நூலகம், துப்புரவு, பூங்கா, பாதாள சாக்கடை, சிறிய பாலம் கட்டுதல், வீட்டு மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல், கிராம நூல்கங்களை பராமரித்தல், தொகுப்பு வீடுகள் கட்டுதல், விளையாட்டு மைதானங்களை நிறுவுதல் பராமரித்தம்  போன்ற பணிகளை இந்த அமைப்பு மூலமா செய்யுறாங்க. வரவு செலவு, திட்டம் பற்றிய விவாதம், மத்திய மாநில அரசுகள் கிட்ட இருந்து நிதி பெற்று பணி செய்ய திட்டம் நு முறையான திட்டங்கள் தீட்டி மக்கள் சேவை செய்யுற மகத்தான திட்டம். இது. நம்ம கட்டுற வீட்டு வரி, கேளிக்கை வரி, குடி நீர் வரி, விளம்பர வரி, மூலமா மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செஞ்சி கொடுக்கிறாங்க. இந்த குழு சரியா இயங்குதான்னு கவனிக்க ஆய்வு செய்ய கண்காணிக்க, தவறு செய்யுற இதன் தலைவர்களை மாத்துற நீக்குற அதிகாரம் மாவட்ட ஆட்சியர் கு இருக்கு. 

மத்திய மாநில அரசுகள் தங்களோட அதிகாரத்தை குறைச்சு கிட்டு மக்கள் கிட்ட தங்களோட அதிகாரத்தை பிரிச்சு பரவல் ஆக்குறது மூலமா மக்களுக்கு தேவையான உதவிகளும் நலத்திட்டங்களும் சீக்கிரமா கிடைக்கப்படணும் கிறது தான் இந்த திட்டத்தோட நோக்கம். மக்கள் தங்களோட ஊர்கள்ல அவங்களுக்கு நல்லா அறிமுகமான, சமூக தொண்டு செய்யுற ஆசையுள்ள மக்களை தலைவர்களா தேர்ந்தெடுக்கிறாங்க. பஞ்சாயத்து வலுவா திடமா இருந்தா தான் இந்த நாட்டோட அரசு வலிமையா இருக்கும்.

இந்த பஞ்சாயத்து ராஜ் திட்டம் முதன் முறையா 1992 ல 73 வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் படி கொண்டு வரப்பட்டது . இதோட மூன்றடுக்கு அமைப்பு முறைய ஏத்துக்கிட்டது ராஜஸ்தான். தமிழ்நாடு இரண்டு அடுக்கு முறைய ஏத்துக்கிட்டது. பஞ்சாயத்து ராஜ் திட்டத்துக்காக முதன் முதல்ல தேர்தல் நடந்தது மத்திய பிரதேச மாநிலத்துல. 1952 ல பல்வந்த்ராய் மேத்தாகுழு, 1977 அசோக் மேத்தா கமிட்டி, 1985 ல ஜிகேவி ராவ் கமிட்டி 1986 ல எல் எம் சிங்க்வி கமிட்டி நு பல கமிட்டி ல இந்த திட்டம் பற்றி பேசப்பட்டாலும் 1992 ல இருந்து தான் முறையா தேர்தல் வச்சு நடக்க ஆரம்பிச்சது. 

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. கிராமம் உயர்ந்தால் நாடு முன்னேறும். நாட்டின் முதுகெலும்பு கிராமம். கிறதை உணர ஆரம்பிப்போம். கிராமங்களை ஒரே நாள்ல அழிச்சி நகரமாக மாற்றி விடலாம். ஆனால் நகரங்களை அழிச்சி பத்து வருசம் ஆனாலும் கிராமமாக மாற்ற முடியாது. அதனால கிராம மக்களுக்காக உருவாக்கப்பட்டு இயங்கிக்கிட்டு இருக்கிற இந்த அமைப்புக்காகவும் இந்த அமைப்பு மூலமா ஆர்வத்தோட பணி செஞ்சிகிட்டு இருக்குற எல்லா மக்களுக்கும் நம்மோட வாழ்த்துக்களையும் ஆதரவியும் கொடுப்போம். மக்கள் பணி செய்யுறவங்க மகத்தான இறைவன் பணி செய்யுறவங்கன்னு நினைச்சு அவங்களுக்கு நம்மோட உதவிகளையும் பரிந்துரைகளையும் கொடுப்போம். கண்ணுக்கு தெரியாத கிராமங்கள்ல இருந்துகிட்டு கடுமையா பணி செய்யுற எல்லா ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பணியாளர்கள் தொண்டர்கள் எல்லாத்துக்கும் இனிய ஊராட்சி ஒன்றிய தினம் பஞ்சாயத்து ராஜ் தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வழியா உங்களை மீண்டும் சந்திக்கிறேன் நன்றி வணக்கம். 

Friday, 22 April 2022

உலக புத்தக தினம்.

 இன்னைக்கு என்ன ஸ்பெசல்? வணக்கம் அன்பு உள்ளங்களே ஏப்ரல் 23 உலக புத்தக தினம். புத்தகங்கள் மனித வாழ்வை புரட்டி போடும் புத்துணர்ச்சி அலைகள். வலிமை வாய்ந்த ஆயுதங்கள்.  வாழ்க்கைக்கான வழிமுறைகள் சொல்லும் வழிகாட்டிகள் .இப்படி புத்தகங்களைப் பத்தி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஏன் இந்த உலக புத்தக தினம் என்ன காரணம் நு தெரிஞ்சிக்கலாம் வாங்க.
உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடா இந்த நாள் அமையணும்கிறதும், புத்தகம் வாசிக்கிற எல்லாரையும் பெருமைப்படுத்தணும்கிறதும் தான் இந்த நாளுக்கான நோக்கமே. அது மட்டுமில்லாம 1616 ஆம் ஆண்டு இந்த நாள் ல தான் புத்தகங்களை அதிகமா விரும்புன, வாசித்த புகழ்பெற்ற  எழுத்தாளர்களான    மிகுவேல்டி செர்வண்டேஸ் , வில்லியம் ஷேக்ஸ்பியர், விளாடிமிர் நபோகோவ் ஜோசப் பிலா, மனுவேல் மெஜியா வலேஜா போன்ற சில அறிஞர்களோட பிறந்த நாளும் இறந்த நாளும் வருது. அதனால இந்த நாள்ல  உலக புத்தக தினம் கொண்டாடுறதுக்கான எல்லா தகுதியும் இருக்கிறதா நினைச்சாங்க.  முதன் முதல்ல ஸ்பெயின் நாட்டுல இருக்கிற கட்டலோனிய மக்களுக்கு தான் இந்த நாளைக் கொண்டாடணும்கிற ஆசை தோன்றியது. ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் 23 ம் தேதிய  இவங்க புனித ஜார்ஜ் திருநாளா கொண்டாடி இருக்காங்க. அப்ப திருவிழா பரிசா புத்தகங்களையும் ரோஜாப் பூக்களையும் கொடுக்கிற பழக்கம் இருந்தது. புத்தகங்களை அதிகமா வாங்கவும் வாசிக்கவும் பரிசளிக்கவும் பழக்கப்பட்ட ஸ்பெயின் மக்கள் இந்த தினத்தை புத்தக தினமா அனுசரிக்கணும் நு யுனெஸ்கோ அமைப்பு கிட்ட வலியுறுத்துனாங்க. ரஷ்ய படைப்பாளிகளும் அவங்க புத்தங்கங்களுக்கு காப்புரிமை அளிக்கப்படணும்னு அதே நேரத்தில நினைச்சதால ஏப்ரல் 23 உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தினமா கொண்டாடப்பட ஆரம்பிச்சது.  ஐக்கிய நாடுகள்ல இந்த நாளை மார்ச் மாதம் முதல் வியாழக்கிழமை கொண்டாடுறாங்க. 1995 ல இருந்து தான் இந்த தினம் உலகம் முழுசும் முறையா கொண்டாடப்படுது. அந்த வருசம் ஆகஸ்ட் 25 ல இருந்து நவம்பர் 16 வரை  நடந்த யுனெஸ்கோவின் 28 வது மாநாட்டில ஒரு தீர்மானம் நிறைவேற்றுனாங்க. அறிவை பெற, உலகத்தில உள்ள பல்வேறு கலாச்சாரங்களை பற்றிய விழிப்புணர்வை பெற, புரிதல் சகிப்புதன்மை மூலமா மனித ஒழுக்கத்தை மேம்படுத்த, புத்தகம் சிறந்த கருவியா இருக்கிறதால ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23 ம் தேதி உலக புத்தக தினமா கடைபிடிக்கப்பட்டு கொண்டாடப்படணும்னு வலியுறுத்துனாங்க.
புத்தக வாசிப்பு இப்ப உள்ள கால கட்டத்துல கொஞ்சம் குறைஞ்சிகிட்டு தான் வருது. தொலை தொடர்பு இணையம் நு மாற்றுக் கலாச்சாரக் காலத்து ல இருக்கிற நாம அச்சிட்ட புத்தகத்தை வாசிக்கிற நிலைமை மாறி டச்சிட்ட மின்னூல் புத்தகம் வாசிக்கிறவங்களா மாறி இருக்கிறோம். புத்தக வாசிப்பு சுவாசம் மாதிரி இருக்கணும் வாசிக்கிறத நிறுத்துறது சுவாசிக்கிறத நிறுத்துறதுக்கு சமம்.
புனித முற்று மக்கள் புது வாழ்வு வாழ வேண்டும். புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் நு பாரதிதாசன் பாடுகிறார். நாட்டில் மட்டும் இல்லைங்க ஒவ்வொருத்தர் வீட்டிலயும் புத்தக சாலை அமைக்கப்படணும். தேடல் இல்லாத வாழ்க்கை இல்லை . தேடல் இல்லைனா வாழ்க்கையே இல்லை அப்படிப்பட்ட தேடல் ஆரம்பிக்கிற இடமே இந்த புத்தகங்கள்ல இருந்து தான். வளர்ற குழந்தைகளுக்கு இப்ப இருந்தே புத்தக வாசிப்பை நாம பழக்கப்படுத்தணும். அவங்களுக்கு பிடிச்ச கார்டூன் கதை மாந்தர்களோட கதையை படிக்க சொல்லி ஊக்கப்படுத்த ஆரம்பிச்சாலே போதும் நாளடைவில அவங்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கமாகிடும். இதனால தன்னம்பிக்கையும் முயற்சியும் அவங்க கூட தானா வளர ஆரம்பிக்கும்.
புத்தகம் வாசிச்சு எழுதி அதனால வாழ்க்கையில் உயர்ந்தவங்க பல பேரு. புரட்சியாளர் பகத்சிங் சாகுறதுக்கு முன்னாடி வரை புத்தகம் படிச்சதா சொல்வாங்க. எதுவும் தெரியாத முட்டாளா சாகுறதை விட புத்தகம் படிச்சு எதையாவது கற்றுக்கொண்டேங்கிற திருப்தியில் சாக விரும்புறேன்னு சொன்னாராம்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தான் தேடிய புத்தகம் வெகு தொலைவில் இருக்குன்னு தெரிஞ்சி அதை தேடி போய் வாங்கி படித்தார்.
கார்ல் மார்க்ஸ் புத்தக அறைக்குள்ளயே இருந்து அதிக நேரம படிச்சதால தான் இந்த உலகத்துக்கு மூலதனமான பல நிறைய கருத்துக்கள் கிடைச்சது.
நம் நாட்டின் எளிமையான ஜனாதிபதி ஏபி ஜே அப்துல் கலாம் ஒரு மிகச்சிறந்த புத்தக வாசிப்பாளர்.
ஒரு நூலகம் திறக்கப்பட்ட ஒரு சிறைச்சாலை மூடப்படும் நு சொன்னவர் அறிஞர் அண்ணா. இப்படி புத்தகங்களை வாசிச்சு நேசிச்ச இவங்க எல்லாரும் புத்தகங்களுக்குள்ள தங்களை மறைச்சுக்கிட்டாலும் அந்த புத்தகங்கள் இவங்களை எல்லாம் உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.
உலக புத்தக தினம் கொண்டாடி மகிழ்ற இந்த நாள்ல, வாரத்துக்கு ஒரு புத்தகம் முடியலையா மாசத்துக்கு ஒரு புத்தகம்னு வாசிக்க பழகுவோம். குழந்தைகளுக்கும் நண்பர்களுக்கும் பரிசளிக்கிறப்ப புத்தகத்தை பரிசளிக்கிறத பயிற்சிப்போம். புத்தகங்கள் சமூக மாற்றத்திற்கு மட்டுமில்ல தனிமனித மாற்றத்திற்கு மான   திறவுகோல்னு புரிஞ்சிகிட்டு புத்தக வாசிப்பை நமதாக்குவோம். சரிந்து கிடக்கும் புத்தகங்கள் எல்லாம் நம் வாழ்வை நிமிர்த்தி விடும் நெம்புகோல்கள்.  வாசிப்பாளர்கள் வாசிக்க முயற்சிப்பவர்கள்  வாசிப்பை நேசிக்கும் அனைவருக்கும் இனிய உலக புத்தக தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெசல் வழியா உங்களை மீண்டும் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.   

Friday, 15 April 2022

கைவிடப்பட்ட மாமரி


புனித வெள்ளியன்று தன் மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்று ஆழ்ந்த துயரத்தோடும் மன வருத்தத்தோடும் இல்லம் திரும்புகின்றார் அன்னை மரியாள். துயரங்களில் பெரும் துயரம் என்று கருதப்படும் புத்திர துயரம் வாட்ட சொல்ல முடியா வேதனையில் தன் வீட்டை அடைகின்றார். இளம் வயதில் கணவனை இழந்து அன்னை  பட்ட துன்பம் மறையும் முன்  அன்பு மகனின் இழப்பு. சாதாரண பெண் என்றால் அழுது ஓலமிட்டு ஒப்பாரி வைத்து தன் துயரத்தை அன்றே ஆற்றி இருப்பாள். நம் அன்னையோ வீரத்தாய், விழுமியங்களை விதைத்து சென்ற விந்தை மகனை பெற்ற தாய். வியாகுலங்களினால் தன்னை வீரீயப்படுத்தி கொண்ட வித்தியாசமான தாய். எனவே தன் வாழ்வில் நடந்த அத்தனை இறைத் திருவுளங்களையும் மனதிற்குள் அசைபோடுகின்றாள். யூதபெண்ணான மரியா இயேசு அடக்கம் செய்யப்பட்ட அடுத்த நாள் ஓய்வு நாள் என்பதனை அறிந்து அதற்காக தன்னை தயார்படுத்துகிறார். யூத முறைப்படி வீட்டில் விளக்குகளை ஏற்றி கடவுளின் பிரசன்னத்தை உணர பாடப்படும் திருப்பாடல்களையும் செபங்களையும் பாட ஆரம்பிக்கின்றார். பாலைவனத்தில் யாவே இறைவன் கூடாரத்தில் தங்கி இஸ்ரயேல் மக்களை பாதுகாத்து பராமரித்ததை நினைவு கூர்ந்து பாடப்படும் பாடல்கள் அவை.  மேலும் யூத முறைப்படி  போர்வையினால் தன்னை மூடி இறைப்புகழ் பாடி இறைபராமரிப்பில் உணர்கின்றார். இவை அனைத்தையும் செய்யும் போது இறைவன் அவர் வாழ்வில் நிகழ்த்திய அத்தனை நிகழ்வுகளையும் கபிரியேல் தூதர் காட்சி முதல் கல்வாரி சிலுவை காட்சி வரை அனைத்தையும் நினைவு கூர்கின்றார். எசாயா இறைவாக்கினர் அறிவித்த துன்புறும் ஊழியராய் மாறி தன்னையே அர்ப்பணித்த தன் மகனின் வழியில் தானும் பயணிக்க முயற்சிக்கின்றார். பெரிய வெள்ளியன்று இயேசுவின் துன்பங்கள் அனைத்தையும் மனதில் சுமந்து, ஆண்கள் கூட்டத்தின் மத்தியில் தன் மகனை நெருங்கி சென்று உடனிருந்தவர், அவர் கீழே விழும் போதெல்லாம் தன் பார்வையால் அவருக்கு பலமூட்டி எழுந்து நடக்க ஊக்கமூட்டியவர், அவர் மேல் விழுந்த அடிகள் ஒவ்வொன்றையும் தன் உள்ளத்தில் விழுந்த அடியாக ஏற்றுக் கொண்டவர்,  தன் அன்பு  மகனின் இறுதி நேரங்களில் உடனிருந்து உணர்வால் நிறைந்திருப்பவர். பெரிய சனியன்று தன்னை அந்த நிகழ்வுகளில் மீண்டுமாய் நிறுத்தி வாழ்விற்கான பலம் தேடுகின்றார். இயேசு வின் வேதனை உடல் வேதனைகளில் வெளிப்பட்டு விட்டது. ஆனால் அன்னையின் வியாகுலங்கள், துயரங்கள் வார்த்தையில் வெளிப்படுத்த முடியாதவைகள். 

இன்று தன்னந்தளியளாய் கைவிடப்பட்டு தனித்து நிற்கும் தாய் மரி நமக்கு மிகச்சிறந்த வாழ்க்கை பாடத்தைத் தருகின்றார். அவர் போல் துணிச்சலுடன் நாம் செயல்பட நமக்கு கற்றுக் கொடுக்கின்றார். ஏழை எளியவர்கள் சின்னஜ்சிறியவர்களுக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற இயேசுவின் வார்த்தைகேற்ப, பிறருக்கு ஏற்படுத்தும் துன்பம் அநீதி, அவமானங்கள் அனைத்தும் இயேசுவுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அநியாயங்கள் என்று உணர அழைக்கின்றார். 

 இயேசுவின் சிலுவை அடியில் நின்று துன்பங்களினால் துணிவைப் பெற்றுக்  கொண்ட அன்னை மரி போல துன்புறும் அனைத்து உள்ளங்களோடும் துணை இருப்போம். வெறும் உடல் வேதனை துன்பம் அடைபவர்கள் மட்டும் இல்லாமல் உள்ளத்துயர் அனுபவிப்பவர்களோடும் அருகிருக்க முயற்சிப்போம். துன்பங்களும் துயரங்களும் தனிமையும் வாழ்வின் இரகசியத்தை நமக்கு கற்றுத்தரும் வகுப்பறைகள் என்பதை உணர்ந்து அவற்றை துணிவோடு எதிர்கொள்வோம். நம்பிக்கை அர்ப்பணத்தின் அச்சு அசல், எதையும் ஏற்கும் மனநிலை, சகிப்புத்தன்மை, சாட்சிய வாழ்வு தியாகம், முழுமையான கையளிப்பு என அனைத்து விழுமியங்களையும் முழுமையாக பெற்ற அன்னை மரியாள் போல நாமும் வாழ முயற்சிப்போம். அத்தனை துயர சூழலிலும் தன் மகன் இயேசு உயிர்ப்பார் மீண்டும் வருவார் என்று அவர் கொண்டிருந்த அதே விசுவாச மனநிலையோடு நாமும் காத்திருப்போம் அவரின் வருகைக்காக. புனித சனி நம் துன்பங்களையும் துயரங்களையும் ஆழமான நம்பிக்கை கீதங்களாக மாற்றட்டும். 

Tuesday, 12 April 2022

புனித வெள்ளி:

பெரிய வெள்ளி கிறிஸ்தவர்களாகிய நமக்கு மிகவும் முக்கியமான நாள். நம் வாழ்க்கைக்கான அர்த்தம் தரும் நாள். தவக்காலம் முழுதும் கடைபிடித்த தவ முயற்சிகளையும் ஒறுத்தல்களையும் நாம் ஏன் இவற்றை எல்லாம் இத்தனை நாள் செய்தோம் என்பதற்கான அடையாளம் தரும் அற்புத நாள். அன்பு என்னும் மூன்றெழுத்து முத்தான கவிதைக்கு முத்தாரமாய் அமைந்தது இயேசுவின் வாழ்க்கை சுருக்கம் இந்நாள். மூன்று வருட பணி வாழ்வின் மொத்த  சாராம்சத்தையும், மூன்றே மணி நேரத்தில் வெளிப்படுத்திய மகத்தான நாள். பெரிய வியாழன் அன்று இரவு வழிபாடு முடிந்து நற்கருணை இடமாற்ற பவனி ஆராதனையோடு நள்ளிரவு முடிவடைகிறது. பெரிய வெள்ளி அதிகாலை முதலே ஆராதனை எல்லா ஆலயங்களிலும் ஆரம்பமாக, இறை இரக்க செபமாலை, 24 தொழுகை மலர்கள் ஆராதனைப் பாடல்களாகப் பாடப்படுகின்றன. காயப்பட்டு குற்றுயிரும் கொலை உயிருமாக துன்புற்று கொண்டிருக்கும் இயேசுவுக்கு நமது ஆராதனைகளால் அன்பு மருந்து இடுகின்றோம். நமது செயல்களால் ஆராதனைகளால், அழுத்திடும் அவர் தம் சுமைகளுக்கு ஆறுதல் அளிக்கின்றனர். பிற்பகல் மூன்று மணி அளவில் சொல்லப்படும் செபங்களும் பக்தி முயற்சிகளும் பரிபூரணபலன் கொடுக்கின்றன. இயேசு இறந்து விட்டார் என்பதன் அடையாளமாக மூன்று மணி செப ஆராதனைக்கு பின் கோயில்கள் பூட்டப்படுகின்றன. இயேசுவின் இறப்பு உண்மையிலேயே நமக்கு மிகுந்த இழப்பையும் துயரத்தையும் கொடுக்கிறது என்பதனை வெளிப்படுத்தும் விதமாக மயான ஆழ்ந்த அமைதியும், துக்கமும் அனுசரிக்கிறோம். ஒரு சில ஊர்களில் வீடுகளில் சமைப்பதை விடுத்து பங்கில் மொத்தமாக சம்பந்தி முறையும் கடைபிடிக்கப்படுகிறது. 

மாலையில் பெரிய சிலுவைப் பாதை மிகவும் பக்தியான முறையில் செய்யப்படுகிறது. தவக்காலத்தின் மற்ற வெள்ளிக்கிழமைகளில் செய்யப்படும் சிலுவைப்பாதையைக் காட்டிலும் பெரிய வெள்ளியன்று செய்யப்படும் சிலுவைப்பாதைக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. நாடக வடிவிலும், ஆழமான சிந்தனைக் கருத்துகள் வழியாகவும் வழிநடத்தப்படும் இந்த பெரிய சிலுவைப்பாதையில் 12ம் நிலை ஊர்களுக்கு ஏற்ப சிறப்பாக வித்தியாசமான வகையில் செபிக்கப்படுகிறது. 12 ம் நிலை இயேசு சிலுவையில் இறந்ததைக் குறித்து தியானிக்க அழைக்கிறது. எனவே இந்நிலையில் இறந்தவர்களுக்கு கோடி துணி போட்டு மரியாதை செலுத்தும் விதமாக சிலுவைக்கு புது வெள்ளைத்துணி போட்டு மரியாதை செலுத்துகின்றனர். சில இடங்களில் புலம்பல் பாடல்களும் ஒப்பாரி சோக கீதங்களும் இசைத்து உணர்வுபூர்வமாக இயேசுவின் இறப்பை நமக்கு எடுத்துரைக்கின்றனர். பாடுகளின் பாதையில் முழுமையாக பங்கேற்று நம் வாழ்க்கைப்பாதையை செம்மைப்படுத்தவே இம்முயற்சிகள் என்பதை உணர்ந்து பக்தியோடு பங்கேற்போம். 

சிலுவையில் இயேசு சொன்ன 7 வார்த்தைகள் அவரது மொத்த வாழ்விற்கான ஆதாரத்தை நமக்கு எடுத்துரைக்கின்றன. 

தந்தையே இவர்களை மன்னியும் இவர்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கின்றார்கள் என்பதன் மூலம் இவர் தம் வாழ்வு மன்னிப்பில் தோய்ந்தது என்பதை எடுத்துரைக்கின்றார். இதன் மூலம் நாமும் பிறரை மன்னிக்க மன்னிப்பு பெற உதவுகிறார்.

இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்ற வரிகள் இவரது தொலை நோக்கு பார்வையையும் பிறரை மீட்பதற்காகவே தான் வந்தேன் என்பதை எடுத்துரைப்பதாகவும் இருக்கின்றது. நமது வாழ்வும் எதிர்பார்ப்பும் விண்ணக வாழ்வு ஒன்றை மட்டுமே எதிர்நோக்குவதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்..

இதோ உம் தாய் தன் தாயின் மேல் கொண்டிருந்த பாசத்தையும் அகில உலகத்தின் மேல் அவர் கொண்டிருந்த தனியாத தாகத்தையும் எடுத்துரைத்து தன்னுடைய அரவணைப்பை வெளிப்பத்துகிறார். உலகனைத்திற்கும் தாயாக மரியாளையும், அவர் தம் பிள்ளைகளாக நம்மையும் மாற்றியதை எடுத்துரைக்கும் சிறந்த தருணம். அன்னை மரியாளை நம் வழிகாட்டியாக, தாயாக கொண்டு செயல்பட  அழைக்கிறார்.

ஏலி ஏலி லாமா சபக்தானி என்று தன்னுடைய மொத்த உயிர் வேதனையையும் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். என் இறைவா என் இறைவா ஏன் என்னை கை நெகிழ்ந்தீர் என்பதன் மூலம் தன்னுடைய தத்தளிப்பை வெளிப்படுத்தி

நம்முடைய துன்ப துயர நேரங்களில் தத்தளிப்பில் இறைவனை நோக்கி அழைக்க அறிவுறுத்துகிறார். 

தாகமாயிருக்கிறேன் என்று தன்னுடைய மனித நிலை உணர்வுகளை தவிப்பின் மூலம் வெளிப்படுத்தி நமக்கு ஆன்மீக தாகம் இறையரசு தாகம். விண்ணக தாகம் கொண்டவர்களாய் வாழ அழைக்கின்றார். 

எல்லாம் முடிந்தது என்று தன்னுடைய அழைப்பிற்கான நோக்கம் அர்ப்பணிப்பின் நோக்கம் நிறைவுற்றதை எடுத்துரைக்கின்றார். 

தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்ற வார்த்தைகளில் தன்னுடைய இன்னுயிரையும் கடவுளின் கரத்தில் ஒப்படைத்து உயிர் துறக்கின்றார். 

இப்படியாக மன்னிப்பு, இரட்சிப்பு அரவணைப்பு தத்தளிப்பு தவிப்பு அர்ப்பணிப்பு ஒப்புவிப்பு என்னும் பூக்களின் மூலம் நம் வாழ்வை செழிப்பாக்கி உயிரோட்டமுள்ளதாக மாற்ற விழைகின்றார்.


ஆலயத்தில் எந்த விதமான வழிபாடுகளும் நடைபெறாது என்பதால் ஆலய வளாகத்தில் செப வழிபாடுகள் நடைபெறும். எந்த விதமான அலங்காரங்களும் இன்றி வெறுமையான பீடம் ஒன்றில் மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடைபெறும். வழக்கமாக ஒலிக்கப்படும் ஆலய மணிகள் உயிர்ப்பு ஞாயிறு நள்ளிரவு திருப்பலிக்கு முன் வரை ஒலிக்கப்படாது, அதற்கு பதிலாக மரத்தால் ஆன கிரீஸ் எனப்படும் ஒரு வகை ஒலி எழுப்பப்படும். 

 மாலையில் நடக்கும் செப வழிபாடு நான்கு சிறப்பு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. இறைவாக்கு வழிபாடு, பொது மன்றாட்டு திருச்சிலுவை ஆராதனை, நற்கருணை திருவிருந்து .  செபவேளை துவங்கும் முன் குருவானவர் ஆலய வளாகத்தில் உள்ள எளிய பீடத்தின் முன் முகம் குப்புற விழுந்து செபிப்பார். இயேசுவின் தாழ்ச்சியையும் தன்னையே கையளித்த தியாகத்தையும் அடையாளப்படுத்தும் விதமாக இவ்வாறு செய்கின்றார். அதன் பின் இறைவாக்கு வழிபாடு பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு மற்றும் நற்செய்தி வாசகங்கள் வாசிக்கப்படும். குருவானவரின் மறையுரைக்கு பின்  பொது மன்றாட்டுகள் பகுதியில் திருச்சபைக்காக, திருத்தந்தைக்காக, பல்வேறு நிலையில் உள்ளாவர்களுக்காக, திருமுழுக்கு பெற தயாரிப்பவர்களுக்காக, கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக, யூத மக்களுக்காக, அவிசுவாசிகளுக்காக, நாத்திகர்களுக்காக, நாட்டுத் தலைவர்களுக்காக, துன்புறுவோர்க்காக,  செபிக்கின்றனர்.  அதன் பின் திருச்சிலுவை ஆராதனை நடைபெறும். குருவானவர் ஆலய வளாகத்தின் நுழைவு பகுதியில் இருந்து மரத்தால் ஆன திருச்சிலுவையை வெள்ளைத்துணியால் மூடி எடுத்து வருவார். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் ஆணிகொண்ட கைகள் கால்கள் காயம்பட்ட திருவிலா என ஒன்றன் பின் ஒன்றாக துணி விலக்கப்பட குருவானவர் திருச்சிலுவை மரமிதோ இதிலே தான் தொங்கியது உலகத்தின் இரட்சண்யம் என்று பாடுவார். மக்கள் மறுமொழியாக வருவீர் ஆராதிப்போம் என்று பாடுவர். அதன் பின் திருச்சிலுவை மக்கள் ஆராதனைக்கும் முத்தம் செய்வதற்கும் பொதுவில் வைக்கப்படும். இயேசுவின் திருப்பாடுகள் , காயங்கள் குறித்த தியானப் பாடல்கள் பாடப்பெறும். 

இறுதியாக நற்கருணை விருந்து, இன்று முறையாக எந்த விதமான திருப்பலிகளும் நடைபெறாது என்பதால் நேரடியாக திவ்விய நற்கருணை எடுத்து வரப்பட்டு மக்களுக்கு அளிக்கப்படும். இவ்வாறாக புனித வெள்ளி இயேசுவின் திருப்பாடுகளின் வெள்ளியாக உலகமெங்கும் உள்ளா கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிறது. 

திருச்சசபையின் தலைமைப் பீடமான உரோமையில் திருத்தந்தை அவர்களால் கொலோசயம் எனப்படும் இடத்தில் திருப்பாடுகளின் வெள்ளி சிலுவைப்பாதை மற்றும் இதர பிற வழிபாடுகளால் சிறப்பிக்கப்படும். புனித வெள்ளியின் மகிமையை உணர்ந்து நம்முடைய செபத்தாலும் உணர்வோடு ஒன்றிக்கும் பண்பாலும் துயருரும் இயேசுவுக்கு ஆறுதல் அளிப்போம்.  

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...