Tuesday, 12 April 2022

புனித வெள்ளி:

பெரிய வெள்ளி கிறிஸ்தவர்களாகிய நமக்கு மிகவும் முக்கியமான நாள். நம் வாழ்க்கைக்கான அர்த்தம் தரும் நாள். தவக்காலம் முழுதும் கடைபிடித்த தவ முயற்சிகளையும் ஒறுத்தல்களையும் நாம் ஏன் இவற்றை எல்லாம் இத்தனை நாள் செய்தோம் என்பதற்கான அடையாளம் தரும் அற்புத நாள். அன்பு என்னும் மூன்றெழுத்து முத்தான கவிதைக்கு முத்தாரமாய் அமைந்தது இயேசுவின் வாழ்க்கை சுருக்கம் இந்நாள். மூன்று வருட பணி வாழ்வின் மொத்த  சாராம்சத்தையும், மூன்றே மணி நேரத்தில் வெளிப்படுத்திய மகத்தான நாள். பெரிய வியாழன் அன்று இரவு வழிபாடு முடிந்து நற்கருணை இடமாற்ற பவனி ஆராதனையோடு நள்ளிரவு முடிவடைகிறது. பெரிய வெள்ளி அதிகாலை முதலே ஆராதனை எல்லா ஆலயங்களிலும் ஆரம்பமாக, இறை இரக்க செபமாலை, 24 தொழுகை மலர்கள் ஆராதனைப் பாடல்களாகப் பாடப்படுகின்றன. காயப்பட்டு குற்றுயிரும் கொலை உயிருமாக துன்புற்று கொண்டிருக்கும் இயேசுவுக்கு நமது ஆராதனைகளால் அன்பு மருந்து இடுகின்றோம். நமது செயல்களால் ஆராதனைகளால், அழுத்திடும் அவர் தம் சுமைகளுக்கு ஆறுதல் அளிக்கின்றனர். பிற்பகல் மூன்று மணி அளவில் சொல்லப்படும் செபங்களும் பக்தி முயற்சிகளும் பரிபூரணபலன் கொடுக்கின்றன. இயேசு இறந்து விட்டார் என்பதன் அடையாளமாக மூன்று மணி செப ஆராதனைக்கு பின் கோயில்கள் பூட்டப்படுகின்றன. இயேசுவின் இறப்பு உண்மையிலேயே நமக்கு மிகுந்த இழப்பையும் துயரத்தையும் கொடுக்கிறது என்பதனை வெளிப்படுத்தும் விதமாக மயான ஆழ்ந்த அமைதியும், துக்கமும் அனுசரிக்கிறோம். ஒரு சில ஊர்களில் வீடுகளில் சமைப்பதை விடுத்து பங்கில் மொத்தமாக சம்பந்தி முறையும் கடைபிடிக்கப்படுகிறது. 

மாலையில் பெரிய சிலுவைப் பாதை மிகவும் பக்தியான முறையில் செய்யப்படுகிறது. தவக்காலத்தின் மற்ற வெள்ளிக்கிழமைகளில் செய்யப்படும் சிலுவைப்பாதையைக் காட்டிலும் பெரிய வெள்ளியன்று செய்யப்படும் சிலுவைப்பாதைக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. நாடக வடிவிலும், ஆழமான சிந்தனைக் கருத்துகள் வழியாகவும் வழிநடத்தப்படும் இந்த பெரிய சிலுவைப்பாதையில் 12ம் நிலை ஊர்களுக்கு ஏற்ப சிறப்பாக வித்தியாசமான வகையில் செபிக்கப்படுகிறது. 12 ம் நிலை இயேசு சிலுவையில் இறந்ததைக் குறித்து தியானிக்க அழைக்கிறது. எனவே இந்நிலையில் இறந்தவர்களுக்கு கோடி துணி போட்டு மரியாதை செலுத்தும் விதமாக சிலுவைக்கு புது வெள்ளைத்துணி போட்டு மரியாதை செலுத்துகின்றனர். சில இடங்களில் புலம்பல் பாடல்களும் ஒப்பாரி சோக கீதங்களும் இசைத்து உணர்வுபூர்வமாக இயேசுவின் இறப்பை நமக்கு எடுத்துரைக்கின்றனர். பாடுகளின் பாதையில் முழுமையாக பங்கேற்று நம் வாழ்க்கைப்பாதையை செம்மைப்படுத்தவே இம்முயற்சிகள் என்பதை உணர்ந்து பக்தியோடு பங்கேற்போம். 

சிலுவையில் இயேசு சொன்ன 7 வார்த்தைகள் அவரது மொத்த வாழ்விற்கான ஆதாரத்தை நமக்கு எடுத்துரைக்கின்றன. 

தந்தையே இவர்களை மன்னியும் இவர்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கின்றார்கள் என்பதன் மூலம் இவர் தம் வாழ்வு மன்னிப்பில் தோய்ந்தது என்பதை எடுத்துரைக்கின்றார். இதன் மூலம் நாமும் பிறரை மன்னிக்க மன்னிப்பு பெற உதவுகிறார்.

இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்ற வரிகள் இவரது தொலை நோக்கு பார்வையையும் பிறரை மீட்பதற்காகவே தான் வந்தேன் என்பதை எடுத்துரைப்பதாகவும் இருக்கின்றது. நமது வாழ்வும் எதிர்பார்ப்பும் விண்ணக வாழ்வு ஒன்றை மட்டுமே எதிர்நோக்குவதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்..

இதோ உம் தாய் தன் தாயின் மேல் கொண்டிருந்த பாசத்தையும் அகில உலகத்தின் மேல் அவர் கொண்டிருந்த தனியாத தாகத்தையும் எடுத்துரைத்து தன்னுடைய அரவணைப்பை வெளிப்பத்துகிறார். உலகனைத்திற்கும் தாயாக மரியாளையும், அவர் தம் பிள்ளைகளாக நம்மையும் மாற்றியதை எடுத்துரைக்கும் சிறந்த தருணம். அன்னை மரியாளை நம் வழிகாட்டியாக, தாயாக கொண்டு செயல்பட  அழைக்கிறார்.

ஏலி ஏலி லாமா சபக்தானி என்று தன்னுடைய மொத்த உயிர் வேதனையையும் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். என் இறைவா என் இறைவா ஏன் என்னை கை நெகிழ்ந்தீர் என்பதன் மூலம் தன்னுடைய தத்தளிப்பை வெளிப்படுத்தி

நம்முடைய துன்ப துயர நேரங்களில் தத்தளிப்பில் இறைவனை நோக்கி அழைக்க அறிவுறுத்துகிறார். 

தாகமாயிருக்கிறேன் என்று தன்னுடைய மனித நிலை உணர்வுகளை தவிப்பின் மூலம் வெளிப்படுத்தி நமக்கு ஆன்மீக தாகம் இறையரசு தாகம். விண்ணக தாகம் கொண்டவர்களாய் வாழ அழைக்கின்றார். 

எல்லாம் முடிந்தது என்று தன்னுடைய அழைப்பிற்கான நோக்கம் அர்ப்பணிப்பின் நோக்கம் நிறைவுற்றதை எடுத்துரைக்கின்றார். 

தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்ற வார்த்தைகளில் தன்னுடைய இன்னுயிரையும் கடவுளின் கரத்தில் ஒப்படைத்து உயிர் துறக்கின்றார். 

இப்படியாக மன்னிப்பு, இரட்சிப்பு அரவணைப்பு தத்தளிப்பு தவிப்பு அர்ப்பணிப்பு ஒப்புவிப்பு என்னும் பூக்களின் மூலம் நம் வாழ்வை செழிப்பாக்கி உயிரோட்டமுள்ளதாக மாற்ற விழைகின்றார்.


ஆலயத்தில் எந்த விதமான வழிபாடுகளும் நடைபெறாது என்பதால் ஆலய வளாகத்தில் செப வழிபாடுகள் நடைபெறும். எந்த விதமான அலங்காரங்களும் இன்றி வெறுமையான பீடம் ஒன்றில் மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடைபெறும். வழக்கமாக ஒலிக்கப்படும் ஆலய மணிகள் உயிர்ப்பு ஞாயிறு நள்ளிரவு திருப்பலிக்கு முன் வரை ஒலிக்கப்படாது, அதற்கு பதிலாக மரத்தால் ஆன கிரீஸ் எனப்படும் ஒரு வகை ஒலி எழுப்பப்படும். 

 மாலையில் நடக்கும் செப வழிபாடு நான்கு சிறப்பு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. இறைவாக்கு வழிபாடு, பொது மன்றாட்டு திருச்சிலுவை ஆராதனை, நற்கருணை திருவிருந்து .  செபவேளை துவங்கும் முன் குருவானவர் ஆலய வளாகத்தில் உள்ள எளிய பீடத்தின் முன் முகம் குப்புற விழுந்து செபிப்பார். இயேசுவின் தாழ்ச்சியையும் தன்னையே கையளித்த தியாகத்தையும் அடையாளப்படுத்தும் விதமாக இவ்வாறு செய்கின்றார். அதன் பின் இறைவாக்கு வழிபாடு பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு மற்றும் நற்செய்தி வாசகங்கள் வாசிக்கப்படும். குருவானவரின் மறையுரைக்கு பின்  பொது மன்றாட்டுகள் பகுதியில் திருச்சபைக்காக, திருத்தந்தைக்காக, பல்வேறு நிலையில் உள்ளாவர்களுக்காக, திருமுழுக்கு பெற தயாரிப்பவர்களுக்காக, கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக, யூத மக்களுக்காக, அவிசுவாசிகளுக்காக, நாத்திகர்களுக்காக, நாட்டுத் தலைவர்களுக்காக, துன்புறுவோர்க்காக,  செபிக்கின்றனர்.  அதன் பின் திருச்சிலுவை ஆராதனை நடைபெறும். குருவானவர் ஆலய வளாகத்தின் நுழைவு பகுதியில் இருந்து மரத்தால் ஆன திருச்சிலுவையை வெள்ளைத்துணியால் மூடி எடுத்து வருவார். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் ஆணிகொண்ட கைகள் கால்கள் காயம்பட்ட திருவிலா என ஒன்றன் பின் ஒன்றாக துணி விலக்கப்பட குருவானவர் திருச்சிலுவை மரமிதோ இதிலே தான் தொங்கியது உலகத்தின் இரட்சண்யம் என்று பாடுவார். மக்கள் மறுமொழியாக வருவீர் ஆராதிப்போம் என்று பாடுவர். அதன் பின் திருச்சிலுவை மக்கள் ஆராதனைக்கும் முத்தம் செய்வதற்கும் பொதுவில் வைக்கப்படும். இயேசுவின் திருப்பாடுகள் , காயங்கள் குறித்த தியானப் பாடல்கள் பாடப்பெறும். 

இறுதியாக நற்கருணை விருந்து, இன்று முறையாக எந்த விதமான திருப்பலிகளும் நடைபெறாது என்பதால் நேரடியாக திவ்விய நற்கருணை எடுத்து வரப்பட்டு மக்களுக்கு அளிக்கப்படும். இவ்வாறாக புனித வெள்ளி இயேசுவின் திருப்பாடுகளின் வெள்ளியாக உலகமெங்கும் உள்ளா கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிறது. 

திருச்சசபையின் தலைமைப் பீடமான உரோமையில் திருத்தந்தை அவர்களால் கொலோசயம் எனப்படும் இடத்தில் திருப்பாடுகளின் வெள்ளி சிலுவைப்பாதை மற்றும் இதர பிற வழிபாடுகளால் சிறப்பிக்கப்படும். புனித வெள்ளியின் மகிமையை உணர்ந்து நம்முடைய செபத்தாலும் உணர்வோடு ஒன்றிக்கும் பண்பாலும் துயருரும் இயேசுவுக்கு ஆறுதல் அளிப்போம்.  

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...