Friday, 22 April 2022

உலக புத்தக தினம்.

 இன்னைக்கு என்ன ஸ்பெசல்? வணக்கம் அன்பு உள்ளங்களே ஏப்ரல் 23 உலக புத்தக தினம். புத்தகங்கள் மனித வாழ்வை புரட்டி போடும் புத்துணர்ச்சி அலைகள். வலிமை வாய்ந்த ஆயுதங்கள்.  வாழ்க்கைக்கான வழிமுறைகள் சொல்லும் வழிகாட்டிகள் .இப்படி புத்தகங்களைப் பத்தி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஏன் இந்த உலக புத்தக தினம் என்ன காரணம் நு தெரிஞ்சிக்கலாம் வாங்க.
உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடா இந்த நாள் அமையணும்கிறதும், புத்தகம் வாசிக்கிற எல்லாரையும் பெருமைப்படுத்தணும்கிறதும் தான் இந்த நாளுக்கான நோக்கமே. அது மட்டுமில்லாம 1616 ஆம் ஆண்டு இந்த நாள் ல தான் புத்தகங்களை அதிகமா விரும்புன, வாசித்த புகழ்பெற்ற  எழுத்தாளர்களான    மிகுவேல்டி செர்வண்டேஸ் , வில்லியம் ஷேக்ஸ்பியர், விளாடிமிர் நபோகோவ் ஜோசப் பிலா, மனுவேல் மெஜியா வலேஜா போன்ற சில அறிஞர்களோட பிறந்த நாளும் இறந்த நாளும் வருது. அதனால இந்த நாள்ல  உலக புத்தக தினம் கொண்டாடுறதுக்கான எல்லா தகுதியும் இருக்கிறதா நினைச்சாங்க.  முதன் முதல்ல ஸ்பெயின் நாட்டுல இருக்கிற கட்டலோனிய மக்களுக்கு தான் இந்த நாளைக் கொண்டாடணும்கிற ஆசை தோன்றியது. ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் 23 ம் தேதிய  இவங்க புனித ஜார்ஜ் திருநாளா கொண்டாடி இருக்காங்க. அப்ப திருவிழா பரிசா புத்தகங்களையும் ரோஜாப் பூக்களையும் கொடுக்கிற பழக்கம் இருந்தது. புத்தகங்களை அதிகமா வாங்கவும் வாசிக்கவும் பரிசளிக்கவும் பழக்கப்பட்ட ஸ்பெயின் மக்கள் இந்த தினத்தை புத்தக தினமா அனுசரிக்கணும் நு யுனெஸ்கோ அமைப்பு கிட்ட வலியுறுத்துனாங்க. ரஷ்ய படைப்பாளிகளும் அவங்க புத்தங்கங்களுக்கு காப்புரிமை அளிக்கப்படணும்னு அதே நேரத்தில நினைச்சதால ஏப்ரல் 23 உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தினமா கொண்டாடப்பட ஆரம்பிச்சது.  ஐக்கிய நாடுகள்ல இந்த நாளை மார்ச் மாதம் முதல் வியாழக்கிழமை கொண்டாடுறாங்க. 1995 ல இருந்து தான் இந்த தினம் உலகம் முழுசும் முறையா கொண்டாடப்படுது. அந்த வருசம் ஆகஸ்ட் 25 ல இருந்து நவம்பர் 16 வரை  நடந்த யுனெஸ்கோவின் 28 வது மாநாட்டில ஒரு தீர்மானம் நிறைவேற்றுனாங்க. அறிவை பெற, உலகத்தில உள்ள பல்வேறு கலாச்சாரங்களை பற்றிய விழிப்புணர்வை பெற, புரிதல் சகிப்புதன்மை மூலமா மனித ஒழுக்கத்தை மேம்படுத்த, புத்தகம் சிறந்த கருவியா இருக்கிறதால ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23 ம் தேதி உலக புத்தக தினமா கடைபிடிக்கப்பட்டு கொண்டாடப்படணும்னு வலியுறுத்துனாங்க.
புத்தக வாசிப்பு இப்ப உள்ள கால கட்டத்துல கொஞ்சம் குறைஞ்சிகிட்டு தான் வருது. தொலை தொடர்பு இணையம் நு மாற்றுக் கலாச்சாரக் காலத்து ல இருக்கிற நாம அச்சிட்ட புத்தகத்தை வாசிக்கிற நிலைமை மாறி டச்சிட்ட மின்னூல் புத்தகம் வாசிக்கிறவங்களா மாறி இருக்கிறோம். புத்தக வாசிப்பு சுவாசம் மாதிரி இருக்கணும் வாசிக்கிறத நிறுத்துறது சுவாசிக்கிறத நிறுத்துறதுக்கு சமம்.
புனித முற்று மக்கள் புது வாழ்வு வாழ வேண்டும். புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் நு பாரதிதாசன் பாடுகிறார். நாட்டில் மட்டும் இல்லைங்க ஒவ்வொருத்தர் வீட்டிலயும் புத்தக சாலை அமைக்கப்படணும். தேடல் இல்லாத வாழ்க்கை இல்லை . தேடல் இல்லைனா வாழ்க்கையே இல்லை அப்படிப்பட்ட தேடல் ஆரம்பிக்கிற இடமே இந்த புத்தகங்கள்ல இருந்து தான். வளர்ற குழந்தைகளுக்கு இப்ப இருந்தே புத்தக வாசிப்பை நாம பழக்கப்படுத்தணும். அவங்களுக்கு பிடிச்ச கார்டூன் கதை மாந்தர்களோட கதையை படிக்க சொல்லி ஊக்கப்படுத்த ஆரம்பிச்சாலே போதும் நாளடைவில அவங்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கமாகிடும். இதனால தன்னம்பிக்கையும் முயற்சியும் அவங்க கூட தானா வளர ஆரம்பிக்கும்.
புத்தகம் வாசிச்சு எழுதி அதனால வாழ்க்கையில் உயர்ந்தவங்க பல பேரு. புரட்சியாளர் பகத்சிங் சாகுறதுக்கு முன்னாடி வரை புத்தகம் படிச்சதா சொல்வாங்க. எதுவும் தெரியாத முட்டாளா சாகுறதை விட புத்தகம் படிச்சு எதையாவது கற்றுக்கொண்டேங்கிற திருப்தியில் சாக விரும்புறேன்னு சொன்னாராம்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தான் தேடிய புத்தகம் வெகு தொலைவில் இருக்குன்னு தெரிஞ்சி அதை தேடி போய் வாங்கி படித்தார்.
கார்ல் மார்க்ஸ் புத்தக அறைக்குள்ளயே இருந்து அதிக நேரம படிச்சதால தான் இந்த உலகத்துக்கு மூலதனமான பல நிறைய கருத்துக்கள் கிடைச்சது.
நம் நாட்டின் எளிமையான ஜனாதிபதி ஏபி ஜே அப்துல் கலாம் ஒரு மிகச்சிறந்த புத்தக வாசிப்பாளர்.
ஒரு நூலகம் திறக்கப்பட்ட ஒரு சிறைச்சாலை மூடப்படும் நு சொன்னவர் அறிஞர் அண்ணா. இப்படி புத்தகங்களை வாசிச்சு நேசிச்ச இவங்க எல்லாரும் புத்தகங்களுக்குள்ள தங்களை மறைச்சுக்கிட்டாலும் அந்த புத்தகங்கள் இவங்களை எல்லாம் உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.
உலக புத்தக தினம் கொண்டாடி மகிழ்ற இந்த நாள்ல, வாரத்துக்கு ஒரு புத்தகம் முடியலையா மாசத்துக்கு ஒரு புத்தகம்னு வாசிக்க பழகுவோம். குழந்தைகளுக்கும் நண்பர்களுக்கும் பரிசளிக்கிறப்ப புத்தகத்தை பரிசளிக்கிறத பயிற்சிப்போம். புத்தகங்கள் சமூக மாற்றத்திற்கு மட்டுமில்ல தனிமனித மாற்றத்திற்கு மான   திறவுகோல்னு புரிஞ்சிகிட்டு புத்தக வாசிப்பை நமதாக்குவோம். சரிந்து கிடக்கும் புத்தகங்கள் எல்லாம் நம் வாழ்வை நிமிர்த்தி விடும் நெம்புகோல்கள்.  வாசிப்பாளர்கள் வாசிக்க முயற்சிப்பவர்கள்  வாசிப்பை நேசிக்கும் அனைவருக்கும் இனிய உலக புத்தக தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெசல் வழியா உங்களை மீண்டும் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.   

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...