Friday, 15 April 2022

கைவிடப்பட்ட மாமரி


புனித வெள்ளியன்று தன் மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்று ஆழ்ந்த துயரத்தோடும் மன வருத்தத்தோடும் இல்லம் திரும்புகின்றார் அன்னை மரியாள். துயரங்களில் பெரும் துயரம் என்று கருதப்படும் புத்திர துயரம் வாட்ட சொல்ல முடியா வேதனையில் தன் வீட்டை அடைகின்றார். இளம் வயதில் கணவனை இழந்து அன்னை  பட்ட துன்பம் மறையும் முன்  அன்பு மகனின் இழப்பு. சாதாரண பெண் என்றால் அழுது ஓலமிட்டு ஒப்பாரி வைத்து தன் துயரத்தை அன்றே ஆற்றி இருப்பாள். நம் அன்னையோ வீரத்தாய், விழுமியங்களை விதைத்து சென்ற விந்தை மகனை பெற்ற தாய். வியாகுலங்களினால் தன்னை வீரீயப்படுத்தி கொண்ட வித்தியாசமான தாய். எனவே தன் வாழ்வில் நடந்த அத்தனை இறைத் திருவுளங்களையும் மனதிற்குள் அசைபோடுகின்றாள். யூதபெண்ணான மரியா இயேசு அடக்கம் செய்யப்பட்ட அடுத்த நாள் ஓய்வு நாள் என்பதனை அறிந்து அதற்காக தன்னை தயார்படுத்துகிறார். யூத முறைப்படி வீட்டில் விளக்குகளை ஏற்றி கடவுளின் பிரசன்னத்தை உணர பாடப்படும் திருப்பாடல்களையும் செபங்களையும் பாட ஆரம்பிக்கின்றார். பாலைவனத்தில் யாவே இறைவன் கூடாரத்தில் தங்கி இஸ்ரயேல் மக்களை பாதுகாத்து பராமரித்ததை நினைவு கூர்ந்து பாடப்படும் பாடல்கள் அவை.  மேலும் யூத முறைப்படி  போர்வையினால் தன்னை மூடி இறைப்புகழ் பாடி இறைபராமரிப்பில் உணர்கின்றார். இவை அனைத்தையும் செய்யும் போது இறைவன் அவர் வாழ்வில் நிகழ்த்திய அத்தனை நிகழ்வுகளையும் கபிரியேல் தூதர் காட்சி முதல் கல்வாரி சிலுவை காட்சி வரை அனைத்தையும் நினைவு கூர்கின்றார். எசாயா இறைவாக்கினர் அறிவித்த துன்புறும் ஊழியராய் மாறி தன்னையே அர்ப்பணித்த தன் மகனின் வழியில் தானும் பயணிக்க முயற்சிக்கின்றார். பெரிய வெள்ளியன்று இயேசுவின் துன்பங்கள் அனைத்தையும் மனதில் சுமந்து, ஆண்கள் கூட்டத்தின் மத்தியில் தன் மகனை நெருங்கி சென்று உடனிருந்தவர், அவர் கீழே விழும் போதெல்லாம் தன் பார்வையால் அவருக்கு பலமூட்டி எழுந்து நடக்க ஊக்கமூட்டியவர், அவர் மேல் விழுந்த அடிகள் ஒவ்வொன்றையும் தன் உள்ளத்தில் விழுந்த அடியாக ஏற்றுக் கொண்டவர்,  தன் அன்பு  மகனின் இறுதி நேரங்களில் உடனிருந்து உணர்வால் நிறைந்திருப்பவர். பெரிய சனியன்று தன்னை அந்த நிகழ்வுகளில் மீண்டுமாய் நிறுத்தி வாழ்விற்கான பலம் தேடுகின்றார். இயேசு வின் வேதனை உடல் வேதனைகளில் வெளிப்பட்டு விட்டது. ஆனால் அன்னையின் வியாகுலங்கள், துயரங்கள் வார்த்தையில் வெளிப்படுத்த முடியாதவைகள். 

இன்று தன்னந்தளியளாய் கைவிடப்பட்டு தனித்து நிற்கும் தாய் மரி நமக்கு மிகச்சிறந்த வாழ்க்கை பாடத்தைத் தருகின்றார். அவர் போல் துணிச்சலுடன் நாம் செயல்பட நமக்கு கற்றுக் கொடுக்கின்றார். ஏழை எளியவர்கள் சின்னஜ்சிறியவர்களுக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற இயேசுவின் வார்த்தைகேற்ப, பிறருக்கு ஏற்படுத்தும் துன்பம் அநீதி, அவமானங்கள் அனைத்தும் இயேசுவுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அநியாயங்கள் என்று உணர அழைக்கின்றார். 

 இயேசுவின் சிலுவை அடியில் நின்று துன்பங்களினால் துணிவைப் பெற்றுக்  கொண்ட அன்னை மரி போல துன்புறும் அனைத்து உள்ளங்களோடும் துணை இருப்போம். வெறும் உடல் வேதனை துன்பம் அடைபவர்கள் மட்டும் இல்லாமல் உள்ளத்துயர் அனுபவிப்பவர்களோடும் அருகிருக்க முயற்சிப்போம். துன்பங்களும் துயரங்களும் தனிமையும் வாழ்வின் இரகசியத்தை நமக்கு கற்றுத்தரும் வகுப்பறைகள் என்பதை உணர்ந்து அவற்றை துணிவோடு எதிர்கொள்வோம். நம்பிக்கை அர்ப்பணத்தின் அச்சு அசல், எதையும் ஏற்கும் மனநிலை, சகிப்புத்தன்மை, சாட்சிய வாழ்வு தியாகம், முழுமையான கையளிப்பு என அனைத்து விழுமியங்களையும் முழுமையாக பெற்ற அன்னை மரியாள் போல நாமும் வாழ முயற்சிப்போம். அத்தனை துயர சூழலிலும் தன் மகன் இயேசு உயிர்ப்பார் மீண்டும் வருவார் என்று அவர் கொண்டிருந்த அதே விசுவாச மனநிலையோடு நாமும் காத்திருப்போம் அவரின் வருகைக்காக. புனித சனி நம் துன்பங்களையும் துயரங்களையும் ஆழமான நம்பிக்கை கீதங்களாக மாற்றட்டும். 

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...