Friday, 8 April 2022

புனித வாரம்

விமானங்கள் ஓடுதளம் முடிந்து விட்டது என்று ஒருபோதும் வருந்துவது இல்லை. மாறாக அதன் பின்னே தான் தங்களது பயணம் துவங்குகிறது என்பதை உணர்ந்து பறக்கின்றன. தவக்காலம் முடிவடைய இருக்கிறது. ஆனால் நம் தவ வாழ்வு தரமான வாழ்வு தொடங்க இருக்கிறது. புனித வாரம் என்னும் புண்ணிய வாரத்தில் அடியெடுத்து வைக்கக் காத்திருக்கின்றோம். தாவீதின் மகனுக்கு ஓசான்னா என்று புகழ் கீதம் பாடி தொடங்கிய இந்த வாரம் மிக முக்கியமான வாழ்க்கை தத்துவங்களையும் மதிப்பீடுகளையும் நமக்கு தர இருக்கின்றது. குருத்து ஞாயிற்றில் இயேசு பட்ட பாடுகள் அனைத்தையும் வாசிக்க கேட்டு நம்மை நாமே முன் தயாரித்துக் கொண்டோம். புத்தம் புதிய குருத்தோலைகள் ஏந்தி புதிய மனநிலையுடன் புனித வாரத்தில் நுழைந்திருக்கிறோம். இந்த புனித வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நற்செய்தி மாந்தர்கள் வழி நம்மை நல்வாழ்வு வாழ வழிகாட்டுகிறது. புனித திங்கள்; மார்த்தாவின் நறுமணத்தைலம் பூசும் செயல் மூலம், கடவுளின் பணியாளராக நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும். யூதாஸ் போல தன்னையும் பணத்தையும் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்காமல், பொதுநலனில் அக்கறை கொண்டவர்களாக வாழவும் வலியுறுத்துகிறது. புனித செவ்வாய்; யுதாசின் காட்டிக் கொடுக்கும் குணத்தை எடுத்துரைத்து இது போல நம்முடைய வாழ்வு சீரழிந்து விடக் கூடாது. மாறாக இயேஸுவின் அன்புச் சீடர் யோவான் போல எப்போதும் அவரை விட்டு பிரியாத நல் மனம் கொண்டவர்களாய் வாழ அழைக்கிறது. மேலும் பேதுரு போல நமது பலவீனத்தால் இயேசுவை நம் வாழ்வாலும் சொல்லாலும் மறுதலிக்கும் காலம் வரும் என்பதையும் உணர்த்தி விழிப்பாக இருக்க வழி சொல்கிறது. இன்று தான் தமிழ்நாட்டில் பல மறைமாவட்டங்களில் திருவருட்சாதனங்களுக்கு பயன்படுத்தும் திரு எண்ணெய்கள் ஆயர் அவர்களால் மந்திரிக்கப்படுகின்றன. புனித புதன்: பாஸ்கா விழாக் கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளையும் ஆர்வத்தையும் நமக்கு தூண்டும் நாள். யுதாசின் சூழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் என்னோடு பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று அறிவிக்கின்றார். நாம் யார் நம்முடைய செயல்பாடுகள் இயேஸுவுக்கு உகந்தனவா இல்லை அவரை காட்டிக்கொடுப்பனவா என்று நம்மை சிந்திக்க வைக்கும் நாள். புனித வியாழன்; இறுதி இராவுணவு. பாதம் கழுவும் சடங்கு. நற்கருணையை ஏற்படுத்துதல் குருத்துவம், நற்கருணை இடமாற்றம் என்று பல முக்கியமான வரலாற்று நிகழ்வுகளையும் அனுபவங்களையும் நமக்கு தந்து, நம் வாழ்வை மெருகேற்றும் நாள். இன்றைய நாளில் வழக்கமான திருப்பலிகள் எதுவும் நடைபெறாது. ஒரே ஒரு வழிபாடு மட்டும் தான் அதுவும் இவை அனைத்தும் உள்ளடக்கிய ஒரு பெரிய திருவழிபாடாக சிறப்பிக்கப்படும். இன்று இரவே இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றார் என்பதன் அடையாளமாக முழு இரவு ஆராதனை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடைபெறும். புனித வெள்ளி: கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான நாள் இயேசு கைது செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்ட நாள். இன்றைய நாளில் கோவில்கள் வெறுமையாக்கப்பட்டும் இறந்தவர்களின் வீட்டை போல சோகம் நிறைந்ததாக காணப்படும். மாலையில் பெரிய சிலுவை பாதையும் சிலுவை ஆராதனை, தோம்பா எனப்படும் இறந்த இயேசுவின் திரு உடல் ஊர்வலம் போன்றவையும் நடை பெறும். புனித சனி: தன் ஒரே மகனை இழந்து தன்னந்தனியளாக கைவிடப்பட்ட மரியாளுக்கான நாள். அன்னையின் துயரையும் அவரது உள்ளக்குமுறலையும் , துணிச்சலையும் எடுத்துரைக்கும் நாள். பல வியாகுல மாதா ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னையின் வியாகுலத்தை குறித்தும் துயரத்தைக் குறித்தும் இடம்பெறுகின்றன. வருடங்கள் மாறினாலும் வசதிகள் மாறினாலும் மாதங்கள் மாறினாலும் மனங்கள் மாறினாலும் நம் மனம் மாறாவிட்டால் ஒன்றும் மாறப்போவதில்லை. புனித வாரம் ஒரு போதும் முடிவடைவதில்லை அது அனுதினமும் நம் வாழ்வில் நினைவு கூறப்பட வேண்டியது. புனித வாரத்தின் முக்கியத்துவம் உணர்வோம். புண்ணிய நலன்களால் நம்மை நிரப்பி புனித வாழ்வு வாழ நம்மை தயாரிப்போம்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...