Friday, 8 April 2022

புளிப்பற்ற அப்ப விழா.

எபிரேயர்களின் பாஸ்கா சேனா என்று அழைக்கப்படும் இந்த புளிப்பற்ற அப்ப விழாவே இன்று நாம் பெரிய வியாழன் அன்று கொண்டாடும் நற்கருணை விழாவாகிறது. எபிரேயர்கள் இந்த விழாவை பேசாக் என்று என்று அழைத்தனர். நிசான் மாதத்தின் 14, 15 தேதிகளில் கொண்டாடப்படும் இவ்விழா எட்டு நாட்கள் தொடர் திருவிழாவாகக் கடைபிடிக்கப்படுகிறது. இஸ்ரயேலில் 7 நாட்கள் கொண்டாடுகின்றனர். யூதர்களுக்கு இது இன்று வரை விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுகிறது. நிசான் மாதம் பார்லி என்னும் அப்பம் செய்ய பயன்படும் ஒரு வகை தானியத்தின் அறுவடைக்காலம். எனவே வசந்த கால திருவிழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. எகிப்தில் இருந்து விடுதலை பெற்று கானான் தேசத்திற்கு மக்கள் சென்றதை நினைவு கூறும் விழாவாகவும் , மேலை நாடுகளில் அப்பம் புளிக்க பயன்படும் ஈஸ்ட் தயாரிக்க உகந்த நாளாகவும் இது கருதப்படுகிறது. எபிரேயர்களின் பாஸ்கா, கடத்தல் என்ற பொருளில் கொண்டாடப்படுகிறது. விடுதலைப் பயணத்தில் கூறப்பட்டுள்ளது போல குடும்பத்திற்கு ஏற்றவாறு ஒரு செம்மறி ஆடு முழுவதும் சமைத்து உண்ணப்படுகிறது. ஆட்டின் இரத்தம் வீட்டின் மேல் தெளிக்கப்படுகிறது. இரவுக்குள் அந்த உணவு முடிக்கப்பட வேண்டும். மீதமுள்ள உணவுகள் நெருப்பில் இடப்பட்டு எரிக்கப்படும். இடையில் கச்சை கட்டி கையில் கோலுடன் காலில் செருப்புடன் விரைவாக உண்ணப்படவேண்டும். இது ஆண்டவரின் உணவு. சேடர் டி பேசக் என்னும் இந்த விழா கொண்டாடப்பட சில ஒழுங்கு முறைகள் உள்ளன. சேடர் என்றால் ஒழுங்கு முரை என்று அர்த்தம். இந்த உணவு உண்ண தொடங்கும் முன் அனைவரும் கூடி இருக்க, குடும்பத்தில் உள்ள கடைசி குழந்தை தந்தையிடம் இந்த நாள் ஏன் கொண்டாடப்படுகிறது என்று கேட்க வேண்டும். குடும்ப தலைவர் அதன் வரலாற்று முறையை விவிலிய குறிப்போடு அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலமாக சந்ததியினர் அனைவரும் இந்த நாளை கடைபிடிக்க வலியுறுத்தப்படுகிறது. உண்ணப்படும் உணவின் வகைகளும் அதன் அர்த்தங்களும்: செம்மறி ஆட்டின் கறி; வீட்டின் முன் தெளிக்கப்பட்ட ஆட்டின் இரத்தம் எகிப்தில் கடவுள் காப்பாற்றிய தலைப் பேறுகளை உணர்த்துகிறது. பாலைவனத்தில் ஆண்டவர் மன்னா காடை மூலம் அவர்களுக்கு உண்வூட்டியதையும் நினைவுபடுத்துகிறது. புளிப்பற்ற அப்பம் ; புளிக்காத அப்பம் இஸ்ரயேல் மக்கள் அப்பத்தை புளிக்க வைக்கக் கூட நேரமில்லாமல் இரவோடு இரவாக எகிப்தை விட்டு வேகமாக கிளம்பியதை நினைவு படுத்தும் விதமாக உண்ணப்படுகிறது. சால்சா காரோசெட் என்னும் இனிப்பு வகை. பாதாம் முந்திரி போன்ற பருப்புகள், காய்ந்த திராட்சை, தேன், திராட்சை இரசம் . ஆரஞ்சு பழ சாறு, கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பு . இதன் நிறமும் பதமும் எகிப்தில் அடிமைகளாக இருந்து இஸ்ரயேல் மக்கள் செங்கல் செய்யும் போது பயன்படுத்திய குழைந்த மண்ணை நினைவு படுத்துகிறது. எகிப்தில் செங்கல் சூழையில் அவர்கள் அனுபவித்த துன்பம் இன்று இன்பமாக மாறிவிட்டது என்பதை உணர்த்துகிறது. திராட்சை இரசம்: நான்கு காரணங்களுக்காக இந்த திராட்சை இரசம் பருகப்படுகிறது. பாஸ்கா விழாவின் மகிழ்வை, எகிப்தில் இஸ்ரயேல் மக்களை காப்பாற்றிய கடவுளின் இரக்கத்தை, ஆட்டின் இரத்தம் மூலம் தலைப் பேறுகளை காப்பாற்றியதை , உலகில் பல வகையான மக்கள் இருந்தும் இஸ்ரயேல் மக்களைக் கடவுள் தேர்ந்தெடுத்து மீட்டு காப்பாற்றியதற்கு நன்றியாகவும் 4 முறை குடிக்கப்படுகின்றது. அவித்த முட்டை: புதிய வாழ்விற்கு அடையாளமாக . துய்மையின் அடையாளமாகவும் உண்ணப்படுகிறது இயேசுவும் ஒரு எபிரேயர் என்ற முறையில் இந்த பாஸ்காவைக் கொண்டாடினார். அவரிடம் இருந்து இன்று நாமும் இந்த முறையை கடைபிடித்து நினைவு கூர்கின்றோம். நம்முடைய பாஸ்காவில் உண்ணப்பட வேண்டிய உணவு வகைகள். கசப்பான கீரை இயேசுவின் துன்பத்தை நினைவுபடுத்த உண்ணப்பட வேண்டும். ஆட்டின் இறைச்சி நமக்காக தன் உயிரை மாய்த்துக் கொண்ட இயேசுவின் தியாகத்தை நினைவு கூற உண்ணப்பட வேண்டும். அவித்த முட்டை ; இயேசுவின் உயிர்ப்பு மற்றும் நமது புதிய வாழ்வையும் உணர்த்த உண்ணப்பட வேண்டும். கடத்தல் என்ற பெயரில் இஸ்ரயேல் மக்களால் கொண்டாடப்பட்டு எபிரேயர்களால் கடைபிடிக்கப்பட்டு இயேசுவால் மறு உருவம் பெற்று இன்று நம்மால் கொண்டாடப்படும் இந்த பேசாக் எனப்படும் எபிரேயர்களின் பாஸ்காவை நமதாக்குவோம். நம்முடைய கடந்த கால வாழ்வில் இறைவன் நம் உடன் நடந்ததை கவலைகளை துன்பத்தை நம்மிடமிருந்து அகற்றியதை நினைவு கூர்ந்து நமது நன்றியினைக் காணிக்கையாக்குவோம்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...