Tuesday, 5 April 2022
மறுதலிப்பு;
மறுதலிப்பும் நிராகரிப்பும் தான் நம்மை வாழ்வின் அடுத்த நிலைக்கு இட்டுச்செல்லும். மறுதலிப்பின் வலியும் வேதனையும் என்னவென்று நாம் பிறரால் மறுதலிக்கப்படும்போது மட்டுமே நன்கு உணர்ந்து கொள்ள முடியும். உண்மையில் நம்மை மறுதலிப்பவர் நிராகரிப்பவர் நம்முடைய எதிரியாக இருப்பதில்லை நம்முடன் நன்றாக பழகி உண்டு உறவாடி உடன் இருந்த நண்பராக தான் இருப்பார். இப்படி நம்முடன் இருந்த உறவுகள் நம்மை மறுதலித்தால் அதனால் வரும் துன்பம் நம்மை மிகவும் பாதிக்கும். தவக்காலத்தின் இறுதி வாரத்தில் இயேசுவின் பாடுகளை சிறப்பாக எடுத்துரைக்கும் புனித வாரத்தில் அடியெடுத்து வைக்க காத்திருக்கிறோம். இந்நாளில் தன்னுடைய நெருங்கிய நண்பர்களால் மறுதலிக்கப்பட்ட இயேசுவின் உள்ள உணர்வை புரிந்து கொள்வோம்.
இயேசுவோடு உண்டு உறவாடி நெருங்கி உடனிருந்தவர் பேதுரு. முதன்மை சீடராகவும் மூத்தவருமான இவரில் இயேசு அளப்பரிய நம்பிக்கையை வத்திருந்தார். தன்னை மெசியா என்று எல்லோர் முன் எடுத்துரைத்தவர். தான் யாரென்று இவ்வுலகிற்கு மெசியா என்ற வார்த்தை மூலம் எடுத்துரைத்தவர். தன்னுடன் இறுதி வரை உடனிருப்பார் என்ற நம்பிக்கையில் இருந்த இயேசுவுக்கு பெருத்த இடியாய் இருந்திருக்கும் பேதுருவின் இச்செயல்.
இயேசுவைக் காவலர்கள் முன் கைவிட்டார், வேலைக்காரப் பெண் முன்னிலையில் இவர் யாரென்று தெரியாது என்று நிராகரித்தார், நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு புரியவில்லை எனக்கு அவரோடு எந்த தொடர்பும் இல்லை என்று கண்டனம் செய்கின்றார். பேதுரு தன்னுடைய பலவீனத்தையும் பயத்தையும் அதிகமாக வெளிப்படுத்தி அதுவரை தான் கொண்டிருந்த விசுவாசத்தை அழிக்கின்றார். இயேசு போல தானும் மாற வேண்டும் புதுமைகளும் அருள் அடையாளங்களும் செய்ய வேண்டும் என்று எண்ணியவர் இன்று எங்கே நாமும் சிறைபிடிக்கப்படுவோமோ என்று அஞ்சுகிறார். பல நேரங்களில் நாமும் பேதுரு போல இயேசுவின் மதிப்பீடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைப்போம் ஆனால் நம்முடைய சுயநலத்தினாலும், துன்பம் வருமோ என்று எண்ணுவதாலும் நிலையற்ற இன்பத்தில் மூழ்கி விடுகின்றோம்.
நீயும் அவரகளில் ஒருவன் தானே? அவரது சிடன் தானே என்ற கேள்விக்கு பதிலாக நான் இயேசுவின் சீடன் இல்லை என்று பேதுரு சொன்னது சரியே . ஆம் இயேசுவின் மேல் கொண்டிருந்த உண்மையான பாசம் அப்போது இல்லை. அவர் மெசியா நம்மை கட்டாயம் மீட்பார் என்ற நம்பிக்கை இல்லை . அவர் சொன்ன அறிவுரைகள் எதையும் அவர் அப்போது நினைவுபடுத்தவுமில்லை. ஆக பாசம் நம்பிக்கை அறிவுரைகள் இவை மூன்றும் இல்லாத ஒருவன் கட்டாயம் இயேசுவின் சீடராக இருக்க முடியாது . அதனால் தான் அவர் நான் இயேசுவின் சீடர் இல்லை என்று அறிவிக்கின்றார். நாமும் இந்த மூன்று பண்புகள் இல்லாவிட்டால் இயேசுவின் சீடர்களாக இருக்க முடியாது. எனவே அவர் மிது உண்மையான பாசம் வைப்போம். நம்பிக்கை கொள்வோம். அறிவுரைகளை நினைவு கூர்வோம்.
பேதுரு மறுதலித்தாலும் இயேசுவின் பார்வையையும் மன்னிப்பையும் பெறுகின்றார். அதனால் அவருடைய வாழ்வு புதிய மாற்றம் காண்கின்றது. தான் கோழை பலவீனன் என்று எண்ணியவர் பாவ மன்னிப்புக்கு பின் முழு மனிதனாக திருச்சபையை வழிநடத்தும் தலைவராக மாறுகின்றார். பிறரால் மறுதலிக்கப்பட்டாலும் நிராகரிக்கப்படாலும் கவலைப்படாதிருப்போம். அதனால் இழப்பு நமக்கு இல்லை அவர்களுக்கு தான் என்பதை கூடிய விரைவில் அவர்கள் புரிந்து கொள்ளும் சூழல் உருவாக உழைப்போம். யாரோ ஒருவரின் நிராகரிப்பு தான் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும். நம்மை நிராகரித்த அதே இடத்தில் நம்மை நிராகரிக்க முடியாதவாறு நாம் நிற்பதே நம்முடைய வெற்றி. மாபெரும் சாதனைகளை செய்தவர்கள் அனைவரும் என்றோ ஒரு நாள் யாரோலோ நிராகரிக்கப்பட்டவர்கள் தான் என்பதை உணர்ந்து வாழ்வோம். நாமும் நம்முடைய செயல்களும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று நினைப்பதை விடுத்து துணிந்து நம்முடைய காரியங்களை செய்வோம். மறுதலிக்கப்பட்டாலும் பிறரை மறுதலிக்காதிருப்போம்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...