Monday, 4 April 2022

காட்டிக் கொடுத்தல்

காட்டிகொடுக்கப்படுதல் நம் எதிரிகளிடமிருந்து வருவதில்லை. நம்மோடு உண்டு உறவாடிய உள்ளங்களாலே நாம் பலமுறை காட்டிக்கொடுக்கப்பட்டிருப்போம். காசிற்காக , கூட்டு உறவில் குழி பறிக்க, நமது மகிழ்வையும் நல் உறவையும் கெடுக்க. கொல்லும் நஞ்சை விட கொடியதாக காட்டிக்கொடுத்தல் இருக்கின்றது. தன்னைக் காட்டிக் கொடுப்பான் இந்த கேட்டின் மகன் யூதாஸ் என்று அறிந்திருந்தும் இயேசு அவனை அச்செயலை செய்ய விடுகிறார். இயேசுவோடு உடனிருந்து அவரது போதனைகளைக் கவனமுடன் கேட்டு அவர் செய்த புதுமைகளைப் பார்த்தும் அவன் திருந்தவில்லை. அவன் இறுதிவரை மனம்மாறுவான் என்று கூட இயேசு நினைத்திருக்கலாம். ஒரு சிலர் யூதாஸ் இயேசு எப்படியாவது அரசராகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கூட அப்படி செய்திருக்காலாம் என்பர். எது எப்படியோ யூதாஸ் காட்டிக் கொடுத்தது இயேசுவின் பாடுகளுக்கும் இறப்பிற்கும் உயிர்ப்பிற்கும் காரணமாக அமைந்தது. பணத்திற்காக , பதவிக்காக புகழுக்காக தற்பெருமைக்காக ஆசைப்பட்டு யூதாசைப் போல பல நேரங்களில் நாம் செய்ய கூடாத செயலை பல நேரங்களில் செய்கின்றோம். அலுவலகத்தில் அண்டை அயலாரிடத்தில் அருகாமை வீடுகளிடத்தில் நாம் பிறரை காட்டிக் கொடுக்கின்றோம். நம்மிடத்தில் அவர்கள் வைக்கும் நம்பிக்கையை இதன் மூலம் நாம் இழக்கின்றோம். வஞ்சகம் துரோகம் நன்றி கெட்டவன் என்ற அவப்பெயர்களை பெறும் சூழலும் இதனால் ஏற்படுகின்றது. இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் அந்த செயலுக்கு பின் நிம்மதியாக வாழ முடியவில்லை. தனது செயல் இயேசுவை இத்தனை கொடூரமான நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்று எண்ணி வருந்தியவன் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கின்றது. எந்த ஒரு செயல் நம்மையும் பிறரையும் வாழ வாய்க்கின்றதோ அதுவே நற்செயல். அதுவே நம்மை இன்னும் பல நற்செயல்கள் செய்யத்தூண்டும். காட்டிக் கொடுப்பவர்கள் நாம் யாரென்று பிறருக்கு காட்டுவதாக நினைத்துக் கொண்டு தாங்கள் யாரென்பதை பிறருக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். காட்டிக்கொடுப்பவர்களைக் குறித்து கவலை பட வேண்டாம் அவர்கள் செயல்கள் வழி தாங்கள் எப்படி யார் என்பதை இந்த உலகத்திற்கு எடுத்துரைத்து கொண்டிருக்கிறார்கள். தவக்காலத்தின் இறுதி வாரத்தில் இருக்கும் நாம் யூதாஸ் செய்த தவறை செய்யாமல் விழிப்புணர்வுடன் வாழ்வோம். தவற்றை செய்த பின் இந்த காரணத்திற்காக தான் நான் செய்தேன் என்று நாம் கூறும் விளக்கத்தை யாரும் ஏற்கப் போவதுமில்லை காது கொடுத்து கேட்பதுமில்லை. நமக்கு அவசியமில்லாத அர்த்தமில்லாத செயலையும் சொல்லையும் செய்யாதிருப்போம். நம் ஆண்டவர் இயேசு கூறுவது போல நம்முடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகள் ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் இருக்க முயற்சிப்போம். பிறருடை சொல்லையும் செயலையும் விமர்சித்து நம்முடைய ஆதாயம் கருதி காட்டிக் கொடுக்கும் செயலைத் தவிர்ப்போம். இயேசுவை கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் போல நாட்டின் பலர் நம்முடன் இருந்தாலும் நம்மைக் காப்பது இறையருளாகும் என்ற நம்பிக்கையில் துணிவுடன் வாழ்வோம்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...