Sunday, 3 April 2022
குருத்து ஞாயிறு.
திருப்பாடுகளின் தொடக்கம் குருத்து ஞாயிறு என்னும் கொண்டாட்டத்தின் மூலம் தொடங்குகிறது. இயேசுவின் பாடுகளும் மரணமும் உயிர்ப்பும் அன்றோடு முடிந்து விட்ட ஒன்று அல்ல அது மரத்தின் துளிர் குருத்தைப் போல தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு வளர்ச்சியின் செயல்பாடு என்பதை எடுத்துரைக்கிறது குருத்து ஞாயிறு. இயேசு பாடுகள் படுவதற்கு முன் எருசலேம் நகரம் சென்று அங்குள்ள மக்களால் பவனியாக அழைத்து வரப்படுகின்றார். அரசர்கள் தான் கழுதை மேல் பவனியாக வருவர். அப்போது மக்கள் தங்களது மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக மேலாடைகளை தரையில் விரித்து வழி அமைப்பர். மரக்கிளைகளை கையில் ஏந்தி, ஓசான்னா கீதம் பாடுவர் . ஓசான்னா என்பதற்கு எபிரேய மொழியில் இறைவா எங்களை மீட்டருளும் என்று பொருள். இயேசுவை தங்களின் அரசராக கருதி கழுதை மேல் ஏற்றி மேலாடைகளை விரித்து ஓசான்னா புகழ் கீதம் பாடினர். அன்றே அவருக்கு சிலுவை மரணத்தையும் உறுதி செய்தது மறைநூல் அறிஞர்கள் குழு.
இன்றைய நாளில் குருத்தோலைப் பவனியானது ஆலயத்திற்கு வெளியே அல்லது ஆலயமுற்றத்திற்கு வெளியே தொடங்குகிறது. குருவானவர் இயேசுவின் பாடுகளை குறிக்கும் சிகப்பு நிற திரு உடை அணிந்து பவனி வருகின்றார். சிகப்பு நிறம் வெறும் பாடுகளையும் துன்பத்தையும் மட்டும் குறிக்கும் நிறமன்று . மாறாக அது வளர்ச்சியின் நிறம் இரத்தம் சிகப்பு நிறம் இரத்த ஓட்டம் நம் உடலில் இருந்தால் தான் நம் உடலுக்கு வளர்ச்சி. இல்லையேல் தளர்ச்சி. எனவே வளர்ச்சியின் அடையாளமாம் சிகப்பு நிற திரு உடை அணிகின்றார் மேலும் சிகப்பு நிறம் பழைய ஏற்பாடு காலத்தில் இளமை மற்றும் இன்பத்தின் அடையாளமாகவும் கருத்தப்படுகிறது. திருமணமாக இளம்பெண்கள் ஆண்கள் இளம் சிகப்பு நிற ஆடை அணிந்து தங்களின் மகிழ்வையும் இளமையையும் பிறருக்கு எடுத்துரைப்பர். யாக்கோபு தன் இளைய மகன் யோசேப்புக்கு தன் கையால் செய்து கொடுத்த ஆடையின் நிறம் இளம் சிகப்பு. அன்னை மரியாள் கபிரியேல் தூதரின் காட்சி பெற்ற போது அணிந்திருந்த ஆடையின் நிறம் இளஞ்சிகப்பு. என்று பல்வேறு சான்றுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இயேசுவின் பாடுகள் நமக்கு துன்பத்தை அல்ல. நம் வாழ்விற்கு தேவையான வளர்ச்சியைக் கொடுக்கின்றன என்பதையும் உணர்த்தத் தான் இன்றைய வழிபாடுகளில் சிகப்பு நிற திரு உடை அணிகின்றனர்.
ஆலய முற்றம் அல்லது வெளிப்புறத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த பவனியில் அனைவரின் கைகளிலும் குருத்தோலைகள் காணப்படும். அவரவர் இடங்கள் ஊர்களுக்கு ஏற்ப குருத்தோலைகளின் வகைகள் மாறுகின்றன. ஐரோப்பா யோர்தான் போன்ற இடங்களில் ஒலிவக் கிளைகள் பயன்படுத்தப்படுகின்றன. லாத்வியா வில் வில்லோ எனும் ஒருவகை மரக்கிளைகளும், இந்தியாவில் தென்னங்குருத்தும், மால்டா வில் பனை மரக் குருத்தும், ஹாலாந்து நாட்டில் அப்ப வடிவில் சேவல் வடிவில் ஓலைகள் செய்யப்பட்டும் பவனியாக வருகின்றனர். போலந்து நாட்டில் செயற்கை முறையில் மிக நீளமான குருத்தோலைகள் செய்யப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ருமேனியா பல்கேரியா நாடுகளில் இந்த நாளானது மலர் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நாடகமாக இந்த குருத்து ஞாயிறு பவனியும் அதன் பின் புனித வார நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.
தொடக்க காலத்தில் குருத்தோலைகள் ஒரு நாட்டின் வெற்றியை வெளிப்படுத்துவதற்கும் பயன்பட்டன. பண்டைய கிரேக்க வீரர்கள் தங்களது வெற்றியையும் வீரத்தையும் வெளிப்படுத்துவதற்கு தலையில் ஒலிவக் கிளைகளால் ஆன கிரீடத்தை அணிந்தனர். இன்று வரை ஐரோப்பிய நாடுகளில் மேற்படிப்பு படித்து முடித்தவர்கள் தங்களின் மகிழ்வையும் உயர்வையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக தலையில் ஒலிவ கிளைகளால் ஆன கிரீடத்தி சூடி மகிழ்கின்றனர். நாணயங்களில் கூட ஒலிவக்ளைகள் இடம் பெற்று இருப்பது அதன் பெருமையை நமக்கு இன்னும் அதிகமாக வெளிப்படுத்துகின்றது. திருத்தூதர் யோவான் தன்னுடைய திருவெளிப்பாடு நூல் 7; 9 ல் மீட்பின் அடையாளமாக ஒலிவக் கிளைகள் விளங்குவதாக கூறுகின்றார்.
எருசலேம் வீதியில் இயேசு பயணித்த பாதையில் பயணிக்க எல்லோராலும் இயலாது. எனவே நம்முடைய ஆலயம் நோக்கி செல்லும் இந்த பயணத்தில் அவருடைய பாதையையும் வாழ்வையும் தியானிக்கின்றோம். அன்று எருசலேம் மக்கள் பாடிய ஓசான்னா கீதத்தை நாமும் பாடி நாம் யாரைப் பின்பற்றுபவர்கள் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கின்றோம். அவருடைய பாடுகள் வெறும் நிகழ்வுகள் அல்ல எம் வாழ்க்கைக்கான விதைகள் என்பதை அப்பட்டமாக எடுத்துரைக்கின்றோம். இந்த வாரம் கிறிஸ்தவர்களாகிய எமக்கு மிகவும் முக்கியமான வாரம் என்பதை நம்முடன் வாழும் பிற மதத்தினற்கு நம்முடைய வார்த்தையால் சொல்வதை விடுத்து வாழ்வால் சொல்ல முயற்சிப்போம்.
இன்று நம் கைகளில் ஏந்திய குருத்தோலை நம் மீட்பின் அடையாளம். என்பதை உணர்ந்து பவனி வருவோம். எவ்வாறு அன்று இஸ்ரயேல் மக்கள் வீடுகளில் தெளிக்கப்பட்ட இரத்தத்தை அடையாளம் கண்டு வானதூதர்கள் தலைச்சன் பிள்ளைகளை தாக்காதவாறு சென்றார்களோ அது போல் இன்றைய நாளில் நம் வீடுகளில் சிலுவை அடையாளாத்தோடு அழகு சேர்க்க இருக்கும் இவ்வோலைகள் சாத்தானின் தீய பிடியிலிருந்து நம்மையும் உம்நம் குடும்பத்தையும் காக்கும் என்ற உணர்வோடு பயணிப்போம். பாடுகளின் ஞாயிறை நல்ல முறையில் தொடங்கி இருக்கும் நம்முடைய வாழ்வு அவரின் பாதையில் தொடர்ந்து பயணிக்க அருள் வேண்டுவோம்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...