Saturday, 9 April 2022

உயிர்ப்பு ஞாயிறு காலை வழிபாடு

உயிர்ப்பு ஞாயிறு காலை வழிபாடு அருட்சகோதரி மெரினா. o. s. m அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். அவரோடு இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம். தந்தை மகன்....... அடி முடி தேடினாலும் அகராதியைப் புரட்டினாலும் முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர்ச்சித்திரம் அன்னை மரியாள். தன் மகனோடு துன்பங்கள் பட்டு அவரோடு உயிர்த்து உயிர்ப்பின் மகிழ்வையும் சுவைத்தவர். இறுதிவரை அவரோடு இருந்து மனுக்குல மீட்புக்காக தன்னையும் தன் வாழ்வையும் அர்ப்பணித்தவர். எனவே தான் இன்று வானுலக அரசியாக தன் மகன் இயேசுவோடு உயிர்ப்பின் மகிழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். துன்பத்தை துணிவோடு சந்தித்து வீர மங்கையாக வியாகுல அன்னையாக இன்று உயிர்ப்பின் ஆற்றல் பெற்ற வானக அரசியாக திகழும் நம் அன்னையை மகிழ்வோடு வாழ்த்தி பாடி நமது செப வேளையைத் துவங்குவோம். வானக அரசியே மனமகிழ்வாய்........ இயேசுவின் மரணம் கல்லறையோடு நின்றிருந்தால் இன்று திருச்சபைக்கு வழியில்லை: கிறிஸ்தவத்திற்கு வேலையில்லை. அவருடைய உயிர்ப்பில்தான் நம் விசுவாசம் நங்கூரமிடப்பட்டிருக்கிறது: திருச்சபைப் பிறந்திருக்கிறது: கிறிஸ்தவம் தழைத்திருக்கிறது. இதுவரை வரலாற்றில் நாசரேத்தூர் இயேசுவாக அறியப்பட்டவர், இன்று கிறிஸ்துவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார். கல்லறை கருவறையாகியது: அவரது சாவு நம் மறுவாழ்வின் தொடக்கமானது. அவருடைய மீட்பு நம்மை இறைவனுக்கு நெருக்கமாக்கியது. ஆகையால் தான் ஆலயமணியின் ஓசை ஆர்ப்பரிக்கிறது: விசுவாசிகளின் நாவில் ‘ அல்லேலூயா’ என்ற ஆரவாரகீதம் எழுகிறது. அவருடைய உயிர்ப்பிலேதான் உயிருக்கு பயந்து உயிரோடு மூடப்பட்ட திருத்தூதர்களின் அறைக்கதவுகள் (உயிர்க்கல்லறை) திறக்கப்படுகின்றன. அவருடைய உயிர்ப்பிலேதான் எதிரிகள் வீழ்கின்றனர். உயிர்ப்பில் உயிர்த்த சமூகம் மலர்கிறது. அவரது பாடுகளில் அவரோடு பங்கேற்று உடனிருந்த நாம் அவரது உயிர்ப்பின் மகிழ்வையும் கொண்டாட அழைக்கப்படுகின்றோம். அவரது உயிர்ப்பு உயிர்ப்பின் மகிழ்வு நமது இதயக்கதவுகளையும் திறக்கட்டும் நமது பலவீனம் என்கின்ற எதிரிகள் வீழ்த்தப்படட்டும். பாடல் ..உயிர்ப்பு பாடல் பொருத்தமான ஏதாவது .... இறைஇயேசுவில் பிரியமான சகோதரிகளே! கடவுள் மனிதர்களாகிய நமக்கு கொடுத்த மிகப் பெரிய பொக்கிஷம் எது தெரியுமா? நமக்கு தந்துள்ள “வாழ்க்கை” தான் மிகப்பெரிய பொக்கிஷம். அந்த வாழ்க்கையை ஒவ்வொருவரும் நிறைவாக வாழவேண்டும். நிறைவான வாழ்க்கையை தருபவர்தான் நம்முடைய கடவுள். காரணம்; நம்முடைய கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல. மாறாக வாழ்வோரின் கடவுள் . அதனால் தான் இன்று நாம் நமதான்டவரின் உயிர்ப்பு பெருவிழாவைச் மகிழ்ச்சியோடு சிறப்பிக்கிறோம். உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் பிறந்தார்கள், வாழ்ந்தார்கள், இறந்தார்கள் ஆனால் நம்முடைய கடவுள் மட்டும் தான் இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். “மானிட மகன் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கு வந்தார்”. ஓர் இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது நாம் வாழ்வுபெரும் பொருட்டு அதும் நிலைவாழ்வு பெரும் பொருட்டு கடவுள் நமக்காக இறந்தாரென்று நற்செய்தியில் பல இடங்களில் வாசிக்கக் கேட்கிறோம் . அந்த இயேசு இன்று உயிர்த்து நம்மோடு பயணிக்க வருகிறார். எனவே ஆண்டவரின் உயிர்ப்பின் மகிழ்ச்சியை ஒருவர் மற்றவரோடு வாழ்க உயிர்ப்பின் மகிழ்வில் வளர்க எனச் சொல்லி கரங்களை குலுக்கி வாழ்த்துவோம் வாழ்க உயிர்ப்பின் மகிழ்வில் வளர்க....... பூ அல்லது இறைவார்த்தை பகிர்ந்து கொள்ளலாம். அது ஒரு அழகான கிராமம். எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண மலர்கள், வாணோக்கி வளர்ந்த தென்னை மரங்கள், பச்சை பசேல் என காட்சியளிக்கும் பூந்தோட்டங்கள் குழந்தைகளின் விளையாட்டுகள், ஆரவாரச் சிரிப்புகள் என அந்த ஊர் முழுவதும் சந்தோசமும், மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தது. இதற்கெல்லாம் அந்த ஊரில் வசித்து வந்த செல்வம் தான் காரணம். தான் படித்த படிப்பை வைத்து அந்த கிராம மக்களுக்கும், குழந்தைகளுக்கும் வேண்டிய அனைத்து வசதிகளையும் அன்றாடம் செய்து வந்தான். உண்மையிலேயே அந்த ஊர் மக்கள்; அனைவரும் திரு. செல்வத்தை அந்த ஊரின் செல்வமாக கருதி வந்தனர். ஒருநாள் இந்த செல்வம் கடைக்குச் சென்று திரும்பும் வழியில் எதிர்பாராத விதமாக ஓர் விபத்து. தலையில் பலத்த காயத்தோடு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். அங்கு இருந்த மக்கள் இவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். இரத்தம் அதிகமாக வெளியேறிய காரணத்தால் இவரை ஐ சி யூ வுக்குள் எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். இந்த செய்தி ஊர்மக்களுக்கு தெரிந்து அனைவரும் மருத்துவமனையையில் ஐ சி யூ வுக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தனர். அங்கேயே மண்டியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தனர். அப்போது ஒரு 5 வயது உள்ள குழந்தை அங்கு இருந்தவர்களைப் பார்த்து ‘எங்க செல்வம் அங்கிளுக்கு என்ன ஆச்சு? அவர் இப்ப எங்க இருக்காரு?’ என்று கேட்டது. அங்கிருந்த ஒருவர் செல்வம் அங்கில் இந்த ஐ சி யூ வில் இருக்கார் என்றார். அந்த குழந்தை ஐ சி யூ என்றால் என்ன? அங்கு யார் இருக்குரா? என்று கேட்டது. அதற்கு அவர் ஐ சி யூ என்றால் ‘நான் உன்னை பார்க்கிறேன் என்று அர்த்தம்’. ஐ சி யூ வில் கடவுள் இருக்கிறார். அவரைப் பார்க்க செல்வம் அங்கிள் சென்றிருக்கிறார் என்றார். அங்கிருந்தவர்களின் எண்ணங்கள் அனைத்தும் ஆண்டவரை செல்வத்தை எப்படியாவது காப்பாற்றி விடு என்று கடவுளை நோக்கியதாக இருந்தது. ஐ சி யூ வுக்கு உள்ளே மருந்து கொடுப்பது மட்டும் தான் மருத்துவர்கள் வேலை ஆனால் உடல் நலம் கொடுப்பவர் கடவுள் என்று அறிந்தவர்களாக அந்த மருத்துவர்கள்களும் கடவுளை நோக்கி ஜெபித்தவர்களாக இருக்கின்றனர். மேலும் அங்கு அடிபட்டு ஐ சி யூ வில் இருக்கும் செல்வமும் இறைவா எப்படியாவது என்னை காப்பாற்று என்று கடவுளை நோக்கி ஜெபித்துக் கொண்டிருக்கிறான். இரண்டு மணிநேரம் களித்து மருத்துவர்கள் வெளியே வந்து செல்வம் பிழைத்துக் கொண்டார், புது வாழ்வுக்கு வந்து விட்டார் என்றனர். அப்போது அந்த குழந்தை சொன்னது நாமும் புது வாழ்வு பெறவேண்டுமென்றால் ஐ சி யூ வுக்கு செல்ல வேண்டும் என்றதாம். ஆம் அன்புக்குரியவர்களே மரங்களும், செடி கொடிகளும் புது வாழ்வை பெறவேண்டுமென்றால் வானத்தையும், மழையையும் உற்று நோக்கி இருக்கின்றன். தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு புதிய உலகத்தை காண்பிப்பதற்காக ஒவ்வொரு தாயும் அவர்களின் பிரசவ நேரத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். அதைப் போலத்தான் இஸ்ராயேல் மக்களும் பாம்பு கடித்து இறந்து கொண்டிருந்த போது மோயீசன் செய்த அந்த வெண்கலப் பாம்பை யாரெல்லாம் உற்று நோக்கினார்களோ அனைவருமே புது வாழ்வை பெற்றுக் கொண்டனர். புதிய ஏற்பாட்டிலே யாரெல்லாம் சிலுவையை உற்று நோக்கினார்களோ அவர்கள் அனைவருக்கும் கடவுள் புது வாழ்வை கொடுக்கிறார். இப்படியாக புது வாழ்வை பெறவேண்டுமென்றால் நாமும் புது மனிதர்களாக மாறவேண்டும். இறப்பில் இருந்து உயிர்ப்புக்கு பயணிக்க வேண்டும், பாவத்தில் இருந்து புண்ணியத்திற்றகு செல்ல வேண்டும், இருளில் இருந்து வெளிச்சத்திற்கு செல்ல வேண்டும். இவ்வாறக நமதாண்டவர் இறப்பில் இருந்து புது வாழ்வுக்கு சென்று விட்டார். எனவே அவரை நம்பியிருக்கும் நம் அனைவருக்கும் தனது உயிர்ப்பின் மூலம் புதிய வாழ்வை கொடுக்கிறார். புதிய வாழ்வை இறைத்துணையுடன் வாழ அருள் வேண்டியவர்களாய் வாசகத்திற்கு செவிமடுப்போம். (பொருத்தமான வாசகம்) காணிக்கை (ஒளி ஒளியாம் இறைவா இன்றைய வழிபாட்டிலே நாங்கள் ஒளி வழிபாட்டை கொண்டாடினோம். இதிலே புது தீயை மந்தரித்து அதில் இருந்து பாஸ்கா திரியை ஒளி ஏற்றினோம். பாஸ்கா திரி தரும் புதிய ஒளியில் இருந்து புதுத்திரிகளை பற்றவைத்தோம். ஓளியை கரங்களில் ஏந்திக்கொண்டு பாஸ்கா புகளுரை வழியாக பழைய வாழ்க்கையில் இருந்து புதிய வாழ்வுக்கு அடியெடுத்து வைத்தோம். ஒளி இருளை அகற்றுகிறது. பாஸ்கா ஒளி எம்மிடத்தில் உள்ள இருளை அழித்து புது வாழ்வைத் தர, நான் எனது என்ற தன்னல நிலையிலிருந்து யாம் விடபட அருள் வேண்டி ஒளியை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். இறைவார்த்தைவிண்ணும் மண்ணும் ஒழிந்து போகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே ஒழியாது என கூறிய இறைவா. இன்றைய வார்த்தை வழிபாடு வழியாக எமக்கு புதிய நம்பிக்கையையும், புதிய உத்வேகத்தையும் கொடுத்தீரே. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களுக்கு புதிய வாழ்வைக் கொடுத்தீர். படைப்பை புதியதாக படைத்தீர். செங்கடலில் நடந்து வந்த மக்களுக்கு புதிய வாழ்வைக் கொடுத்தீர். இறைவாக்கினர்கள் வழியாக இஸ்ராயேல் மக்கள் தங்களது பாவ வாழ்வில் இருந்து மாற்றி புதிய வாழ்வை அளித்தீர்.அது போல எங்களுக்கும் நம்பிக்கை என்னும் புது வாழ்வை அளித்தருள வேண்டி இத்திருவிவிலியத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்) இந்த உயிர்ப்பு பெருவிழா வழியாக கடவுள் நமக்கு நம் ஒவ்வொருவரையும் பார்த்து கூறுகிறார். உங்களுக்கு கிடைத்த பொக்கிஷத்தை நிறைவாக வாழுங்கள் என்று. வாழ்க்கை என்ற வார்த்தையை நாம் பிரித்து பார்த்தோமானால் அதிலே பல உண்மைகள் நமக்கு வெளிப்படும். “வாழ்க்கை” இதன் முதல் எழுத்து வா : கடவுள் இவ்வுலகில் உள்ள அனைவரையும் ‘வா’ என அழைக்கிறார். காரணம் இன்று நம்மில் பலபேர் வாழ்க்கையை உற்சாகமாகத்தான் தொடங்குகிறோம். நன்கு படித்து முன்னேற வேண்டும், நல்ல பதவியில் அமர்ந்து பணி செய்ய வேண்டும், சமுதாயத்தில் பிறர் போற்ற வாழ வேண்டும் என நன்றாக தொடங்குகிறோம். ஆனால் வாழ்க்கை தரும் பிரட்சனைகளை, சோதனைகளை சமாளிக்க முடியாமல் துன்பத்தையும், துயரத்தையும் அனுபவித்து வருகிறோம். இப்படிப்பட்ட நேரங்களில் வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக அது வெறுத்து விடுகிறது. இப்படிப்பட்ட சோதனை நேரங்களில் வாழும் கடவுள் நம் அனைவரையும் ‘வா’ எனச் சொல்லி அன்போடு அழைக்கிறார். உதாரணமாக இயேசு தனது சீடர்களை “வா” என்று அழைக்கிறார். காட்டு அத்திமரத்தில் இருந்த சக்கேயுவை “வா” என்று அழைக்கிறார். இறந்த லாசரை “வா” என்று அழைக்கிறார். எனவே, “வா” என்று அழைக்கப்பட்ட சீடர்கள், சக்கேயு, லாசர் இவர்கள் அனைவருக்கும் கடவுள் புதிய வாழ்வை கொடுக்கிறார். எனவே நம்மையும் ஆண்டவர் “வா” என்று அழைத்திருக்கிறார். நாம்தான் இன்னும் வாழத் தொடங்கவில்லை வாழத்தயாரா? முதல் இரண்டு எழுத்து வாழ் : கடவுள் நம்மை எதற்காக வா என்று அழைக்கிறார், காரணம் நாம் அனைவரும் வாழ்வதற்காக கடவுள் அழைக்கிறார். ஏனென்றால் நாம் பின்பற்றும் கடவுள் வாழ்கின்ற கடவுள். உதாரணமாக மத்தேயு 11:28-ல் “இயேசு பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்” என்கிறார். எனவே துன்பங்களை கண்டு துவண்டு விடாமல் ஆண்டவரிடத்தில் வருவோம் புதிய வாழ்வை பெற்றுக்கொள்வோம். முதல் மூன்று எழுத்து : வாழ்க்(க) கடவுள் நம்மை வா என அழைத்து, அவரிடம் வந்தவர்களையெல்லாம் வாழ் என கூறி வாழ்வதற்கான வழிகளை கொடுத்து, அவர்கள் அனைவரையும் வாழ்க எனச் சொல்லி வாழ்த்துகிறார். லூக் 1:28-ல் “வானதூதர் மரியாவுக்கு தோன்றி அருள்மிகப் பெற்றவரே வாழ்க ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார்” என்றார். யாரெல்லாம் கடவுளின் குரலுக்கு செவிமடுத்து அவர் கொடுத்த வாழ்க்கையை நன்கு வாழ்கின்றனரோ அவர்கள் அனைவரையும் கடவுள் வாழ்க என வாழ்த்துகிறார். நான்கு எழுத்துகளும் சேர்ந்து வாழ்க்கை, மனிதர்களின் இந்த வாழ்க்கை பாதையை தீர்மானிப்பது யார்? நீதிமொழி 20:24-ல் மனிதர்களின் வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கிறார். எனவே தான் கடவுள் நம் அனைவரையும் வா என அழைத்து வாழ்வதற்கான பாதையை காட்டி நம் அனைவரையும் வாழ்க என நமது வாழ்க்கையை நலமுடன் வாழ வாழ்த்துகிறார். வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க தயாரா? எப்போது நம்மைப்போல பிறரையும் பார்க்கிறோமோ அப்போதே நமக்கும் நமது குழுவிற்கும் சமுதாயத்திற்கும் புதிய வாழ்வு பிறக்கிறது. கல்லறைக்குச் சென்ற சீடர்கள் புது வாழ்வையும், புதிய நம்பிக்கையையும் பெற்றுக்கொண்டது போல ஆலயம் வந்துள்ள நாம் அனைவரும் புதிய மனிதர்களாக புது வாழ்வை தொடங்குவோம். உயிர்த்த இயேசு நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆண்டவர் உயிர்த்து விட்டார். புது வாழ்வு பிறந்து விட்டது அல்லேலூயா… அல்லேலூயா…

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...