Sunday, 3 April 2022

பண ஆசை

பொருள் ஆசையே எல்லா தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் தான் சிலர் விசுவாசத்திலிருந்து பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளை தங்கள் மேல் வருவித்துக் கொள்கின்றார்கள் என்று 2 திமோத்தெயு 6 . 10 சொல்லப்பட்டுள்ளது. இன்று பண ஆசை பலரை மாய வலைக்குள் இழுத்து சென்று விடுகிறது. அது மாய வலை மந்திர வலை என்று தெரியாமலே பலர் இதில் விழுகின்றனர். பணமிருந்தால் மட்டும் போதும் இந்த உலகில் எல்லாவற்றையும் வாங்கி விடலாம் என்று பலர் எண்ணுகின்றனர். பண ஆசை கடவுள் மேல் கொண்ட பக்தியை மட்டுமல்ல குடும்ப உறவையும் கெடுத்துவிடும். அன்பு நம்பிக்கை, மகிழ்ச்சி போன்ற நற்குணங்களை நம்மிடம் இருந்து அகற்றி விடும். பேராசை என்னும் கொடிய நோய் நம்மை ஆட்கொள்ளும். மன நிறைவு அற்றவர்களாகவும் கஞ்சத்தனம் மிக்கவர்களாகவும் நாம் மாறும் சூழல் உருவாகும். இயேசுவை காட்டிக் கொடுத்த யுதாசு பண ஆசையினாலேயே அவரை காட்டிக் கொடுக்கிறான். முப்பது வெள்ளிக்காசுகள் அவனுக்கு இயேசுவை விட உயர்ந்ததாக தோன்றிவிட்டன. பண ஆசை பலருக்கும் இருக்கக் கூடிய கொடிய வியாதியாக மாறிவிட்டது. இந்த பண ஆசை இல்லாமல் வாழ, வழிகாட்டுவது விவிலியம் . விவிலியம் நாம் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது என்பதற்கு பல விளக்கங்களையும் வழிமுறைகளையும் எடுத்துரைக்கும் அருமையான வாழ்க்கை வழிகாட்டி நூல். இறைவாக்கினர் எலிசாவிடம் இருந்த வைராக்கியம் கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் இருக்க வேண்டும். உடல் நலம் பெற வேண்டி பொன்னோடும் பொருளோடும் வந்த நாமானை அவன் பொருளுக்கு ஆசைப்பட்டு நேராக சென்று பார்க்காமல் யோர்தான் ஆற்றில் முங்கி ஏழுமுறை குளித்து விட்டு வாரும் என்று பணியாளர் மூலம் சொல்லி அனுப்புகின்றார். பணத்திற்கும் நீ கொண்டு வரும் பொருளுக்கும் நான் அடிமை அல்ல. என்னுடைய மிகப்பெரிய சொத்து இறைவன் தான் என்பதை எடுத்துரைக்கின்றார். எப்படியாவது தன்னிடம் உள்ள பொருளை எலிசாவிற்கு கொடுத்து விட வேண்டும் என்று எண்ணிய நாமானின் எண்ணத்தை ஆசையை எலியா கடைசி வரை நிறைவேற்றவே இல்லை. பணத்தையும் பொருளையும் பற்றிய நம்முடைய எண்ணம் எலிசாவிற்கு இருந்தது போல இருக்க வேண்டும். அழிந்து போகும் பணமும் பொருளுமல்ல நம்முடைய எதிர்நோக்கு அழியாத இறைவன் தான் நம்முடைய இலக்கு என்று நிருபிக்க வேண்டும். சிலர் தங்களுடைய வருமானத்திற்கு அதிகமான செலவு செய்ய விரும்புவர். பிறர் தன்னை பெருமையாக நினைக்க வேண்டும். அவர்கள் முன் தன்னுடைய தரம் குறைந்து விடக் கூடாது என்ற எண்ணத்திலேயே இப்படி செய்கின்றார்கள். நமக்கு வரக் கூடிய சோதனைகளில் பல பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பதனாலேயே ஏற்படுகின்றது. இருப்பது போதுமென்று வாழ்வோம். பிறருக்கு கொடுத்து வாழும் போது நாம் நிறைவுள்ளவர்களாக காணப்படுவோம். கடன் வாங்கி செலவு செய்வதையும் ஆடம்பரமாக வாழ்வதையும் தவிர்க்கும் போது நம்முடைய வாழ்வு ஆனந்தமாக மாறும். பணத்தை அதிகமாக பெற எண்ணும் போதே பல விதமான சிக்கல்கள் நமக்கு ஏற்படுகின்றன. எனவே பணத்தின் மீதான அதிகப்படியான ஆசையை விடுத்து இயல்பாக வாழ முயற்சிப்போம். பணம் பணம் என்று பணத்தின் பின் சென்றால் நம் வாழ்க்கையே போய்விடும். வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்வோம். இயலாதவர்களுக்கு உதவி செய்வோம். நேர்மையானவர்களாக உண்மையுள்ளவர்களாக வாழும் போது நேர்மையின் உண்மையின் தேவன் நம்மையும் ஆசீர்வதிப்பார். பண ஆசையை விடுத்து பரலோக ஆசையை வளர்த்துக் கொள்வோம். போதுமென்ற மனதோடு வாழ்வோம் . நிறைவுள்ளவர்களாக நாம் வாழும் போது நிறைவின் தேவன் நம்மை நிறைவுள்ளவர்களாக மாற்றுவார்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...