9. ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்”
இன்றைய நற்செய்தியில் எம்மாவு
சீடர்களுக்கு உயிர்த்த இயேசு காட்சியளித்த நிகழ்வினை நாம் காண்கின்றோம். எம்மாவு சீடர்களின்
செயலும் வார்த்தைகளும் நமக்கு எடுத்துரைக்கும் வாழ்க்கைக் கருத்துக்கள் பற்றிக் காண்போம்.
முதலாவதாக அவர்கள் தங்களோடு உடன் நடப்பவர்
இயேசு தான் என்று அறியாமல் அவரைப் பற்றியே அவரிடம் கூறுகின்றனர். மிகவும் வருத்தத்தில்
இருந்த அவர்களுக்கு வழிப்போக்கரான இயேசுவின் வார்த்தை ஆறுதல் அளிக்கின்றது. அவரை தங்களோடு
தங்க கேட்டுக் கொள்கின்றனர். அப்பம் பிட்கையில் அவரை அடையாளம் கண்டுகொள்கின்றனர். தங்களது
மதியீனத்தை கண்டு வருந்தி எம்மாவு செல்லாமல் மீண்டும் எருசலேமிற்கு செல்கின்றனர்.
அங்கு அவர்களுக்கு சீமோனுக்கும் உயிர்த்த இயேசு காட்சியளித்தார் என்ற செய்தி கிடைக்கின்றது.
இதன்வழியாக உயிர்த்த இயேசு காலங்களைக் கடந்தவர் என்று அறிந்து கொள்கின்றனர்.
இந்நற்செய்தியில் கிளயோப்பா
என்னும் ஒரு சீடரின் பெயர் கொடுக்கப்பட்டு மற்றாவரின் பெயர் கொடுக்கப்படாமல் இருப்பதற்கான
காரணம் அந்த இரண்டாமவர் நாம் தான் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவே. எம்மாவு சீடர்கள்
போல நாமும் பிரச்சனை மற்றும் துன்பத்தில் இருந்து வெளியேற அங்கிருந்து புறப்பட்டு
விட எண்ணுகின்றோம். ஆனால் இயேசு நம்மை தடுத்தாட்கொண்டு மீண்டும் நம்மை அந்தே சூழலுக்கு
செல்ல பணிக்கின்றார். அவருடைய வார்த்தையையும் பிரசன்னத்தையும் உணர்ந்த சீடர்க்ள் எங்கிருந்து
வந்தார்களோ மீண்டும் அங்கேயே செல்லும் ஆற்றல் பெறுகின்றனர். தங்களது பயணத்தின் திசையை
மாற்றுகின்றனர். உயிர்த்த இயேசுவுடனான சந்திப்பு நமது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி விடும் என்பதற்கு எம்மாவு சீடர்களின் நிகழ்வு
ஓர் உதாரணம். இந்த சந்திப்பானது உயிர்த்தெழுந்தவருக்கும், அவர் தம்மை
வெளிப்படுத்தும் நபருக்கும் இடையேயான ஒரு நேரடியான, உடனடித் தொடர்பாக
அமைகின்றது. ட்வாழ்க்கையை என்றென்றைக்குமாக மாற்றும் விவரிக்க முடியாத ஓர்
ஒற்றுமையை ஊக்குவிக்கும் திறன் கொண்டதாகவும் விளங்குகின்றது. துயரம் வேதனையையும்
மரணத்தையும் எதிர்கொள்ளும் வலிமை, சோதனைகளில் விடாமுயற்சியுடன் இருத்தல், நற்செய்தியை அறிவிக்கும்
துணிவு, மற்றும் சாட்சியமிக்க வாழ்க்கையின் செயல்திறன் ஆகியவை இந்த ஆழமான அனுபவத்திலிருந்தே
வருகின்றன. இந்தத் தனிப்பட்ட உறவுதான் வாழ்க்கைக்குச் சுவையையும் அர்த்தத்தையும்
கொடுக்கிறது என்பதை உணர்ந்து நாமும் ஒவ்வொரு நாளும் அறிக்கையிடுவோம், ஆண்டவர்
உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார் என்று. ஆமென்.
