Monday, 7 March 2022
10. மாலை அணிதல்
தவக்காலத்தில் காவி உடை அணியும் பழக்கம் எவ்வளவு சிறப்போ அது போல மாலை அணிவதும் மிக சிறப்பாக நமது ஊர்களில் பழக்கத்தில் இருக்கின்றன. செபமாலை உத்தரியம் நேர்ச்சைக்கயிறு போன்றவற்றை தவக்காலத்தில் ஒரு ஒறுத்தல் முயற்சியாக மேற்கொண்டு அணியத் தொடங்குகின்றனர். வேளாங்கண்ணிக்கு மாலை, திரு இருதய ஆண்டவர்க்கு மாலை, அந்தோணியார்க்கு மாலை என்று பலரும் பல வேளைகளில் இந்த பக்தி முயற்சியை செய்கின்றனர். தொடக்க காலத்தில் கழுத்தில் அணியும் பழக்கத்தோடு கூட கையில் பிடித்து செபிப்பதும் பழக்கமாக இருந்தது. இயேசு நாம செபம், மங்கள வார்த்தை செப/ம், திருப்பாடல்களை செபித்தல் போன்றவற்றை எண்ணி செபிக்க இந்த மாலைகள் மணிகள் பயன்பட்டன. கையில் செபமாலை மணி வைத்து விரல்களால் உருட்டிசெபிக்கும் பொழுது விரல்களின் அழுத்தம் உடலில் உள்ள ஏராளமான நோய்களுக்கு அக்கு பஞ்சர் முறையில் மருந்தாகவும் இருக்கிறது.
ஏன் இந்த செபமாலைகளை அணிய வேண்டும்?
செபமாலை விண்ணகத்தின் திறவுகோல். மந்திரக்கோல் என்று கூட சொல்லலாம். இயேசு இராயப்பருக்கு விண்ணகத்தின் திறவுகோலை அன்று கொடுத்தார். இன்று அன்னைமரி மூலமாக செபமாலை வழி அனுதினமும் நமக்கு கொடுக்கின்றார்.
அன்னை மரி அழகிய மலர் . அந்த அழகிய மலரால் தொடுக்கப்பட்ட மாலை செப மாலை. இதனை செபிக்கும் பொழுதும் அணியும் பொழுதும் அந்த அன்னைக்கு புகழ் சேர்க்கின்றோம். சாத்தானை ஓட ஓட விரட்டும் ஆயுதம் இது. உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகைமை உண்டாக்குவோம் என்ற இறைவசனங்களுக்கு ஏற்றாற்போல சாத்தானின் சூழ்ச்சிகளான தீய செயல்கள் அனைத்தையும் நம்மிடம் நெருங்க விடாது நம்மை பாதுகாக்கும். அன்னை மரியின் உதவியோடு அனைத்து புனிதர்களின் உதவியையும் நமக்கு கொண்டு வந்து சேர்க்கும். இயேசுவின் பிரசன்னத்தில் நம்மை நிலை நிறுத்தும். நலம் தரும் அமைதியை நல்கும். குடும்பசெபம் கட்டாயமாக செபிக்க வழி வகுக்கும். கூடி செபிக்கும் குடும்பம் கோடி நன்மை பெறும்.
எப்படி பள்ளி கல்லூரி அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு அடையாள அட்டை அவர்களை அறிமுகப்படுத்துகிறதோ அது போல செபமாலை அணிந்திருப்பவர்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட குழந்தைகள் என்பதை அடையாளப்படுத்துகிறது. ஜெர்மானியர்கள் செபமாலையை இரக்கத்தின் ஆடை என்கின்றார்கள். செபமாலைக்கு அடுத்ததாக பலராலும் எல்லா காலத்திலும் அணியப்படுவது உத்தரியம்
உத்தரிய பக்தி என்பது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாப்பரசர் 12ம் பத்திநாதர் உத்தரியத்தின் மகிமை பலன் பற்றி பல இடங்களில் பேசி இருக்கின்றார். புனித அல்போன்ஸ் லிகோரியார், புனித இரண்டாம் அருள் சின்னப்பர், புனித 10 கிரகோரியார், புனித தொன் போஸ் கோ போன்றோர் உத்தரியத்தின் மீது கொண்ட பக்திக்கும் பற்றுதலுக்கும் சான்றுகள் பல உள்ளன. அவர்கள் இறந்த பின் அவர்களோடு புதைக்கப்பட்ட உத்தரியம் இன்றும் அழியாமல் பாதுகாக்கப்படுவது அவர்களின் உத்தரிய பக்திக்கு மிக சிறந்த உதாரணம்.
தவக்காலங்கள்ல மட்டும் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக இந்த செபமாலை உத்தரியம் அணிஞ்சாலும் அதோட பலன் அதிகம் தான். செபமாலையை அணிந்தால் மட்டும் போதாது வாழவும் வேண்டும். ஒறுத்தல் மாலைகள் அணிந்து ஒப்பில்லா மகிழ்வைப் பெறுவொம். செப மாலை அணிந்து ஜெயம் பெறுவோம்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...