Thursday, 10 March 2022

12. செபம்.

நாம் இறைவனுடனும் இறைவன் நம்முடனும் பேசும் ஒரு வழிமுறை. ஒரு வழிச்சாலை அல்ல அது இருவழிச்சாலை. நாம் பேச அவர் பேச இருவரும் உரையாடி மகிழும் ஒரு இனிமையான நேரம். செபம் நமது வாழ்வின் அங்கம் ஆனால் , ஆசீர்வாதம் வாழ்வில் நிரந்தரமாகிவிடும். ஏதேனுக்கு வெளியே நெற்றி வியர்வை சிந்த ஆதாம் உழைத்தபோது கிடைத்த அனுபவமல்ல ஏதேனுக்கு உள்ளே குளிர்ச்சியான வேளையில் கடவுளோடு மகிழ்ந்த அனுபவம். தொடக்க நூல் முதல் திருவெளிப்பாடு வரை அனைத்தும் செபத்தின் வலிமையாலே நிகழ்ந்துள்ளன. உழைக்கும் அனுபவமல்ல அது உறவாடும் அனுபவம். வேண்டுதல் கேட்டு கதறுவதல்ல , கவலைகளை களைந்து உதறுவது. இறைவனை உலுக்குவதல்ல அவரை உயத்துவது. வருந்தி அழுவல்ல நன்றியால் நிறைப்பது. செபத்தை பற்றியும் செபிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பற்றியும் விவிலியத்தில் பல குறிப்புக்கள் உள்ளன. இடைவிடாமல் செபியுங்கள் என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள். கவலைகளை கடவுளிடம் கொட்டி தீருங்கள் நிம்மதி அடையுங்கள். கடவுள் மேல் பாரத்தை வைத்து விடுவோம். அவர் பார்த்துக் கொள்வார் என்பன போன்ற பல இறைவார்த்தைகள் நமக்கு செபத்தின் மேன்மையை எடுத்துரைக்கின்றன. செபம் செய்வதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். மன நிம்மதி, பிரச்சனைகளிலிருந்து விடுதலை, அதனை சமாளிக்க திடன், சரியான முடிவெடுக்கும் தன்மை, ஆறுதல், புத்திமதி, நல்லவை மட்டுமே செய்ய வேண்டும் என்ற உணர்வு, மன்னிப்பு, உதவும் குணம், மகிழ்ச்சி இறைவனோடு கொள்ளும் தனிப்பட்ட உறவு இவை அனைத்தும் செபிக்கின்ற உள்ளங்களுக்கு இறைவன் தரும் பரிசு. எப்படி செபிக்க வேண்டும்? திருப்பாடல் 65 . 2 நம் செபத்தைக் கேட்கின்ற கடவுள் எங்கின்றது. எனவே அவரை நம்பி அவர் நம் வானகத்தந்தை என்று வாஞ்சையோடும் உரிமையோடும் அழைத்து செபிக்க வேண்டும். வெறும் வேண்டுதல்களால் நிறைத்து விடாமல் நன்றியோடும் நிறைந்ததாய் இருக்க வேண்டும். இதயத்தின் உள் ஆழத்திலிருந்து செபிக்க வேண்டும். நாம் என்ன கேட்க போகிறோம் என்பதை அறிந்தவரிடத்தில் நாம் பேசுகிறோம். எனவே கேட்பது அனைத்தும் கிடைக்கப்பெற்று விட்டோம் என்ற நம்பிக்கையில் செபிக்க வேண்டும். நமக்காக மட்டும் இல்லாமல் பிறருக்காகவும் செபிக்க வேண்டும். இயேசுவின் பெயரால் நாம் கேட்கும் அனைத்தையும் எளிதில் பெற்றுக் கொள்கிறோம் என்பதை உணர்ந்து செபிக்க வேண்டும். செபம் செய்ய நமக்கு கற்றுக் கொடுத்தவர் இயேசு. தன்னை இவ்வுலகிற்கு அனுப்பிய இறைத்தந்தையோடு எல்லா நேரமும் செபத்தில் உறவாடினார். காலையில் மாலையில் கருக்கலில் இரவில் என்று செபத்தில் நிலைத்திருந்தார். எப்போதும் மக்கள் மத்தியில் அருஞ்செயல்கள் பல புரிந்தாலும் இறைவனோடு தனித்திருக்க அவர் மறந்ததில்லை. எப்படி செபிக்க வேண்டும் செபிக்க கற்றுதாரும் என்று கேட்டவர்களுக்கு அப்பா தந்தாய் என்று உரிமையோடு அழைத்து செபிக்க கற்றுக் கொடுத்தவர். எனவே தவக்காலத்தின் நாட்கள் இறைவனோடு நெருங்கி உறவாட நமக்கு கொடுக்கப்பட்ட நாட்கள் என்பதை உணர்ந்து செபத்தில் நிலைத்திருப்போம். செபத்தால் வாழ்வின் சோதனைகளை முறியடித்து சாதனை படைப்போம்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...