Wednesday, 9 March 2022
தானம்
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்கா தெனின்.என்பார் திருவள்ளுவர். தானமு தவமும் இவ்வுலகில் நிலைத்து நிற்க மழை வேண்டும் என்பதை உணர்த்துகிறது இக்குறள். தானமும் தவமும் இல்லாவிடில் இத்தவக்காலம் சிறப்பு பெறாது என்கிறது நம் கத்தோலிக்க திருச்சபை. தானம் என்பது முன் பின் தெரியாத ஒருவருக்கு செய்யப்படும் ஒரு உதவி. இதைத்தான் தெரிந்து செய்தால் அது தர்மம் தெரியாமல் செய்தால் தானம் என்பார்கள்.
ஒவ்வொருவரும் அவரவர் பொருளாதார நிலை அடைப்படையில் பிறருக்கு தானம் செய்ய வேண்டும். சாரிட்டி என்று அழைக்கப்படும் ஆங்கில வார்த்தியயின் மூலப்பொருள் கரித்தா என்பதாகும். இதயம் அல்லது இதயத்திலிருந்து புறப்படும் ஒரு நற்செயல். முழுமையான அன்பும் அக்கறையும் கொண்டு செய்யப்படும் ஒரு செயல்.
தொடக்க திருச்சபை கிறிஸ்தவர்களின் வாழ்வே தானத்திலும் தர்மத்திலும் தான் நிலைத்திருந்தது. தங்களிடம் இருந்த அனைத்தையும் பொதுவில் போட்டு அவரவர்க்கு தேவையானதை பகிர்ந்து மகிழ்வுடன் வாழ்ந்தனர். எதிலும் குறைவு படாமல் நிறைவாக வாழ்ந்தனர். இயேசுவின் வாழ்வே தானம் தான் . தன்னுடைய வாழ்வையே நமக்கு தானமாக கொடுத்தவர் அவர். ஐந்து அப்பம் இரண்டு மீனை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்ததும் இந்த தானத்தின் அடிப்படையிலேயே. தங்களிடம் இருந்ததை அனைவரும் அனைவரோடும் பகிரும்படி பணித்தார். அவர் தொடங்கிய அன்ன தானம் ஒருவர் பின் ஒருவராக அங்கு கூடியிருந்த அனைவரையும் செய்ய வைத்தது.
மனிதன் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பது உணவு. எனவே தான் தானத்தில் சிறந்தது அன்ன தானம் என்கின்றனர். பொன் பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி அடைவதில்லை. ஆனால் ஒருவன் வேண்டும் என்று கேட்ட வாயால் போதும் என்று சொல்லி மனம் வயிறு நிறைந்து எழுவது உணவில் மட்டும்தான். அன்னதானம் இறையருளின் நிறைவு தரும். மஞ்சள் தானம் மங்களம் தரும். ஆடை தானம் பூரண மகிழ்வு தரும். நீர் தானம் நிம்மதி தரும். இப்படி நாம் செய்யும் தானங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன் தரும். வாழ்க்கையில் நாம் நடக்க வேண்டும் என்று விரும்பும் அனைத்து செயல்களையும் நடத்திக் காட்டும் சக்தி தானத்திற்கு உண்டு. பசுமையான காய்கறிகள் பழங்கள் வாங்கி ஒருவேளை உணவு கூட உண்ண முடியாமல் தவிக்கும் மக்களுக்கு தானம் செய்யும் போது வாழ்க்கையின் உயர்விற்கு நாம் முன்னேறிச்செல்கின்றோம்.
இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டதை இல்லாதவரோடு பகிர்கின்றோம். பகிரும் போது அது பாதியானாலும் பகிரப்பட்ட பின் அதன் பலன் இரண்டு மடங்காகிறது.
தானத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் செய்த தானத்தை எண்ணிக்கை வைக்ககூடாது. செய்ததை பிறரிடம் சொல்லவும் கூடாது. பணம் உணவோ உடையோ எது அதிகம் இருந்தாலும் அதை இல்லாதவரோடு பகிரும் குணத்தில் வளர்வோம். இத்தவக்காலத்தில் இருப்பதை இல்லாதவரோடு பகிர்வோம். தானங்கள் பல செய்து தரணி சிறக்க வாழ்வோம்.
அன்னதானம் புண்ணியம் சேர்க்கும். ரத்த தானம் உயிர் காக்கும். கல்வி தானம் தலைமுறை காக்கும் நிதானம் உன்னை காக்கும்.
தியானம் செய்தால் கூட கிடைக்காத மன நிம்மதி தானம் செய்யும் போது கிடைத்து விடுகிறது.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...