Thursday, 3 March 2022
8. திரு யாத்திரை.
யாத்திரை என்பது பயணம் . ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒரு காரணத்தின் நிமித்தம் செய்யப்படும் ஒரு பயணம். ஒவ்வொருவரின் பயணமும் ஒவ்வொரு விதமான செய்திகளை நமக்கு விட்டுச்செல்கிறது. பொழுதுபோக்காக, உறவுகளைப் புதுப்பிக்க, உரிமைக்காக , என்று பல வகைகளில் நமது பயணம் இருக்கிறது.
விவிலியத்தில் விடுதலை பயண நூல் முழுமையும் இஸ்ரயேல் மக்களின் பயணமும் அவர்களை வழி நடத்திய மோசே ஆரோன் போன்றோர்களின் வாழ்க்கையும் தான் அடங்கி இருக்கிறது. நமது கடவுள் பயணிக்கும் கடவுள், பயணத்தையும் பயணம் செய்பவர்களையும் அதிகம் விரும்பும் கடவுள். இஸ்ரயேல் மக்கள் ஒரே இடத்தில் இருக்கும் போது புரிந்த அருட்செயல்களை விட அவர்கள் பயணிக்கும் போதே இறைவன் அம்மக்களை கருத்தாய் பாதுகாத்தார் எனலாம்.
வீட்டில் இருக்கும் போது தாய் குழந்தை மேல் காட்டும் பாசத்தை விட வெளியில் போகும் போது அக்குழந்தை மேலான பாசமும் கவனமும் இரட்டிப்பானதாக இருக்கும். அதிலும் அக்குழந்தை தாய்க்காக வெளியே செல்கிறது என்றால் கவனத்தோடு கூடிய இரட்டிப்பான மகிழ்ச்சியும் இருக்கும்.
நாம் தவக்காலத்தில் மேற்கொள்ளும் திருயாத்திரைகள் கூட இப்படி தான். இது வரை பொழுதுபோக்குக்காக உறவுகளை புதுப்பிக்க என்று நாம் செய்த பயணங்களை விட இப்போது நாம் இறைவனுக்காக என்று மேற்கொள்ளும் பயணம் மிகவும் சிறப்பானது. ஒரு நாளில் பல திருத்தலங்கள், சிலுவை பாதை நிலைகள், நடந்து ஒரு குறிப்பிட்ட ஆலயங்களுக்கு பாத யாத்திரை செல்வது என்று பல முறைகளில் தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். ஒரு சிலர் இதனை வேற்று மதத்தாரிடம் இருந்து நாம் பின்பற்றுவதாக நினைக்கின்றனர். விவிலியத்தில் நமது முன்னோர்கள் பெற்ற அத்தனை ஆசீர்வாதங்களும் அவர்கள் இறைவனுக்காக பயணம் செய்யும் போது கிடைத்ததே.
மோயீசனின் விடுதலை பயணம், எசாயா எசேக்கியல் போன்ற இறைவாக்கினர்களின் பயணம்... இப்படி பழைய ஏற்பாட்டில் நடை பயணம் செய்தவர்கள் ஏராளம். புதிய ஏற்பாட்டில் இயேசு எருசலேம் கோவிலுக்கு போனதும் திரு யாத்திரை தான். அப்போது அவர்கள் திருவிழாவைக் கொண்டாட குடும்பம் குடும்பமாக பயணித்தனர். இப்போது நாம் குடும்பத்தில் ஒருவராக பயணம் மேற்கொள்கின்றோம்.
அப்போஸ்தலர்கள் தங்கள் பணியை காலார நடந்தே செய்து முடித்தனர். அவர்களது பயணம் கிறிஸ்தவத்தை அகில உலக மெங்கும் பரப்பியது. அப்படி பார்த்தால் தோமையார் வழியாக இம்மண்ணில் கிறிஸ்தவம் பரவியதே பாத யாத்திரை மூலமாகத்தான். நமது பக்தி முயற்சிகள் இன்றோ நேற்றோ பிறரைப் பார்த்து பரவியது அல்ல. அது காலா காலமாய் தொடங்கி நடந்து கொண்டிருப்பது. இப்போது அதன் மகிமை உணர்ந்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.
நடப்பது உடலுக்கு நல்லது. அதிலும் வெறும் காலில் நடப்பதும் மிகவும் சிறந்தது. ஒரு நோக்கத்திற்காக அதனை செய்யும் போது, அதற்கான பலன் எளிதில் கிடைத்துவிடும். அதன் அடிப்படையிலேயே நமது கிறிஸ்தவ மக்கள் புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். தங்களது விருப்பு வெறுப்புக்களைக் களைந்து கடவுளுக்காக என்று நாம் மேற்கொள்ளும் பயணம் வெற்றி பயணமாகத்தான் அமையும். எனவே இக்காலத்தில் திருயாத்திரைகள் பல செய்து நம் இறைவனை மகிமைப்படுத்துவோம். பயணங்கள் நம் வாழ்வில் நல்ல பாதையைக் காட்டட்டும்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...