Wednesday, 30 March 2022
நன்றி உணர்வு
நன்றி உணர்வு
நன்மை செய்தல் நல்லவர் பண்பு. நல்லவர்களால் மட்டுமே இந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. நன்மை செய்பவர்கள் மிகக் குறைவானவர்கள். எனவே பெற்ற நன்மைக்கு நன்றி கூறும் பழக்கத்தை வளர்க்கும் போது நாமும் மகிழ்வடைகின்றோம். அதனை செய்தவரும் இன்னும் அதிக நன்மையினை பிறருக்கு செய்ய வேண்டும் என்ற தூண்டுதலினைப் பெறுகின்றார். இதனால் அவரை சுற்றி உள்ள மக்கள் ஊர் மாநிலம் நகரம் என சிறிதளவில் தொடங்கிய நற்செயல் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். அனைவரும் நன்மை செய்ய தூண்டும். உலகம் முழுதும் நன்றியினாலும் நன்மையினாலும் நிரப்பப்படும்.
நன்றி உணர்வு கொண்டவர்களாக நாம் இருப்பது மிகவும் நல்லது. நன்றி உணர்வு நம்மை வாழ்வின் உச்சத்திற்கு இட்டுச்செல்லும். தன் வாழ்வில் நடக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்பவர் அதிகப்படியான நன்மைகளை அடைகின்றார்கள் என்கிறது பிரபஞ்ச இரகசியம். நன்றியையும் பாராட்டையும் உடனடியாக தெரிவித்து விட வேண்டும். அவரவர்களுக்கு சொல்ல வேண்டிய நன்றியை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லும் போது அதற்கான மதிப்பும் தன்மையும் கூடுகிறது. நாம் சொல்லும் நன்றி தக்க சமயத்தில் நமக்கு இரட்டிப்பான நன்மையை திருப்பி தரக் கூடும். தவக்காலத்தின் இந்நாட்களில் நாம் நன்றியுள்ளவர்களாக வாழ இறைவன் அழைக்கின்றார். பத்து தொழுநோயாளர்களில் ஒருவர் திரும்பி வந்து நன்றி கூற மீதமுள்ளவர்கள் நலம் பெறவில்லையா அவர்கள் எங்கே என்று கேட்டவர் இன்று நாம் பெற்ற நன்மைகளுக்கு நன்றி கூற மறக்கும் போது நம்மையும் பார்த்து கேட்கிறார் என்னிடம் இருந்து நன்மைகள் எதுவும் பெறவில்லையா என்று. பெற்ற நன்மைக்கு நன்றி கூற முயற்சிப்போம். பெற இருக்கும் நன்மைகளையும் பெற்று விட்டதாக எண்ணி நன்றி கூறும் போது அதனை பெற எளிமையான சூழல் ஏற்படுவதாக அனுபவம் வாய்ந்த அறிஞர்கள் கூறுகின்றனர். அதனால் நன்றி சொல்லும் பண்பை நம்மில் வளர்த்துக் கொள்ள முயல்வோம்.
நன்றியை உண்மையாக சொல்வோம். பொய்யான நன்றிகள் நம் மதிப்பைக் குறைத்து விடக் கூடும்.
முணுமுணுக்காமல் வார்த்தைகளை விழுங்காமல் தெளிவாக திருத்தமாக இருக்க வேண்டும் நாம் கூறும் நன்றி.
நாம் நன்றி கூறுவதால் அடையும் மகிழ்ச்சியை நம்முடைய செயலில் வெளிப்படுத்த வேண்டும் அதற்கு மலர்ந்த முகத்தில் நம்முடைய நன்றி சொல்லப்பட வேண்டும்.
நன்றி சொல்பவரை நேருக்கு நேர் பார்த்து கண்களைப் பார்த்து சொல்ல வேண்டும். நாம் சொல்லும் நன்றி அவர் கண்கள் வழியே இதயத்திற்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். தனிப்பட்ட நபருக்கு நன்றி சொல்லும் போது அவரது பெயரை உச்சரித்து சொல்லுதல் மிகுந்த பலனளிக்கும். சரியான நேரத்தை தெரிவு செய்து நன்றி சொல்தல் வேண்டும். சரியான இடத்தில் முறையாக சொல்லும் நன்றி நமக்கு வாழ்நாள் முழுவதற்குமான ஒரு சொத்தாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் பிறந்தது முதல் இந்நாள் வரை நம்மை நன்மைகளால் நிரப்பிய இறைவனுக்கு உளமார நன்றி கூறுவோம். இன்னும் ஏராளமான நன்மைகளால் நாம் நிரப்பப்படுவோம். நன்றி என்னும் அருளினை நாமும் பெறுவோம் பிறரும் பெற வழிவகை செய்வோம்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...