Wednesday, 16 March 2022

மனமாற்றம்

மனமாற்றம் நம் வாழ்வை மாற்றிப் போடுகிற ஒரு அனுபவம். தவறுகள் கொடுத்த பாடங்களை வைத்து நம் வாழ்வை திருத்தி அமைக்க இறைவனால் கொடுக்கப்படும் ஒரு வாய்ப்பு. தவக்காலத்தின் இந்நாட்களில் நம் வாழ்வு நல்ல முறையில் மாற்றம் அடைய மன மாற்றம் பெற வேண்டும் என்பதையே நாம் எதிர்பார்க்கிறோம். மனதின் மாற்றங்களை சொற்களால் அல்ல செயல்களால் நிருபிக்க நம்மை அழைக்கின்றது இத்தவக்காலம். சாதாரண ஒரு மரக்கன்றை நடுபவர் அதன் வளர்ச்சியை ஒரு குறிப்பிட்ட நாட்களில் எதிர்பார்க்கிறார். அது வளர தன்னால் ஆன எல்லா விதமான நற்காரியங்களையும் செய்கின்றார். தண்ணீர் உரம் வெயில் என அதற்கு தேவையான அனைத்தும் அவரால் கொடுக்கப்படுவது தக்க சமயத்தில் அது பலன் கொடுப்பதற்கே. அது பலன் தர காலம் தாமதித்தால் அதனை வெட்டி களைய முற்படுவார். பலன் கொடுக்கும் வேறு ஒரு மரக்கன்றை அதன் இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். சாதாரண மனிதனுக்கே இவ்வளவு எதிர்பார்ப்புக்கள் இருக்கும் போது நம்மைப் படைத்த இறைவன் நம் ஒவ்வொருவரையும் படைத்தது பலனுள்ள வாழ்க்கை வாழவே. நற்செய்தி வாசகத்தில் இயேசு பலன் தராத அத்தி மரம் வெட்டி எறியப்பட்டு நெருப்பிலிடப்படும் என்கின்றார். ஆக மனமாற்றம் மனிதர்களாகிய நமக்கு கட்டாயம் தேவை. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிறப்பின் நோக்கம் கட்டாயம் இருக்கும். நம்மால் செய்யப்பட வேண்டிய பணி ஒன்று எல்லோருக்கும் இருக்கிறது. நம் இடத்தை நம்மை தவிர வேறு ஒருவராலும் நிரப்ப முடியாது. நாம் செய்யாவிட்டால் அது விடுபட்ட இடமாக பணியாகத்தான் இருக்குமே தவிர, வேறு ஒருவரால் அதனை செய்ய முடியாது. வாழும் வாழ்க்கையை நல்ல விதமாக மாற்றி மகிழ்வாக வாழ முற்படுவோம். மனம் ஒன்று நினைக்க மதி ஒன்று நினைக்க மனிதன் மருகுவது மனமாற்றத்தை மட்டும் தான். மனமதில் மாற்றம் ஏற்பட்டால் மகிழ்வான ஏற்றம் வாழ்வில் நிலைக்கும். மனமாற்றம் ஏற்பட அமைதியாக அமர்ந்து மனதில் எழும் எண்ணங்களை கவனிக்க வேண்டும். அதன் ஆழத்தை உணர்ந்து அங்கேயே அதனை திருத்தும் போது வாழ்க்கைக்கான மாற்றம் நிகழும். பல நேரங்களில் நாம் செய்யும் செயல்கள் சரியா என்று சிந்தித்து பார்க்காததாலே பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நிலைமை மாறி ஏமாற்றத்தினால், மனமாற்றம் அடையும் நிலை வராமல் பார்த்துக்கொள்வோம். மாற்றமுள்ள மனிதனே முழு மனிதன். நாம் படைக்கப்பட்டது மனமாற்றமடைந்து பலன் தரும் வாழ்வு வாழவே. மனம் மாறாத வாழ்வு வாழ்ந்தோமெனில் கனி தராத அத்தி மரம் போல நமது வாழ்வும் வெட்டி தீக்கிரையாக்கப்படும். வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் நம் தலைமுறை என்பதற்கேற்ப மனமாற்றமடைவோம். காட்சிப்பொருளாக இல்லாமல் கனி தரும் வாழ்வாக நம் வாழ்வு அமைய மனமாற்றம் அடைவோம். மகத்தான வாழ்க்கை வாழ்வோம்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...