Saturday, 19 March 2022
வருத்தம்
மனித இனம் வீழ்வது வருத்தம் என்னும் கொடிய நோயினாலே. வருத்தம் இல்லா மனிதன் இல்லை. எப்போதாவது வருந்துபவர்கள் ஒரு சிலர் எப்போதுமே வருத்தத்தில் இருப்பவர்கள் ஒரு சிலர். மனதுக்கு பிடிக்காத நிகழ்வுகள், உறவைனர்களின் இழப்புக்கள், ஒருவர் மற்றவர் மேல் ஏற்படும் மனத்தாங்கல், ஆதங்கத்தால் நாம் எளிதில் வருத்தம் அடைகின்றோம். வருத்தம் அதிகமாக ஆகும் போது, கோப உணர்வு மேலோங்கி காணப்படும். திருத்தந்தை கூறும் தவக்கால வாழ்வியல் செயல்முறைகளில் மற்றொன்று வருத்தத்திற்கு பதிலாக நன்றி உணர்வுடன் இருப்பது. கோப உணர்விற்கு பதிலாக பொறுமையினைக் கையாள்வது. பொதுவாக நாம் அதிகமாக வருத்தம் அடைவது எதிர்காலம் குறித்ததாகவும், செய்த தவறை நினைத்து குற்ற உணர்விலும், பிறர் நமக்கு செய்த தீய செயல்கள், நம்முடன் இருந்தவர்களின் பிரிவு போன்றவற்றாலும் ஏற்படுகிறது. இந்த வருத்தங்கள் நியாயமானதாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக வருந்தும் போது நமது உடல் நிலையும் இதனால் பாதிக்கப்படுகிறது. கவலை படுவதினால் எவன் ஒருவனும் தலை முடியின் நீளத்தை கூட ஒரு முழம் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்பதை நன்கு உணர்வோம். கவலை கொள்வதாலோ வருத்தம் அடைவதாலோ நம்மை சூழ்ந்துள்ள நிலைமை மாறப்போவதில்லை. அதற்கு பதிலாக அந்த நேரத்தில் அந்த உணர்வை நம்மிடம் இருந்து அகற்ற நன்றி உணர்வையும் கடவுள் மீது அதிகமான பக்தியையும் வளர்த்துக் கொள்வோம். எப்போதும் நன்றி உணர்வுடன் இருக்கும் போது, நம்மில் வருத்தம் என்பது மறைந்து விடுகிறது. கடவுள் மீது அதிக நம்பிக்கை வைக்கும்போது, கவலை என்ற உணர்வு கரைந்துவிடுகிறது. கவலை நம் மகிழ்வை கரைக்கும் கரையான் போன்றது. கரையான் புற்று நம் வீட்டை அழித்து விடும். கவலை நம் மகிழ்வை அழித்து விடும். எனவே திருத்தந்தை சொல்வது போல வருத்தம் கவலை என்னும் நோயால் வருந்துவதை விடுத்து நன்றி உணர்வாலும் கடவுள் மேல் கொண்ட நம்பிக்கையாலும் நம் வாழ்வை வளப்படுத்துவோம். நன்றியுணர்வு உடையவர்களாக நாம் மாற நம்மை சுற்றிலும் நமக்கு பயன்படும் ஒவ்வொரு பொருளிலும் உணவிலும் நம் கவனத்தை செலுத்த வேண்டும். இந்த பொருள் அல்லது உணவு எனக்கு கிடைக்க யார் யாருடைய உழைப்பு தேவைப்பட்டது என்று நினைத்து நன்றி சொல்ல ஆரம்பித்தாலே போதும் . நாளடைவில் நன்றியுணர்வின் ஒட்டு மொத்த வடிவமாகவே நாம் மாறிவிடுவோம். நன்றி என்ற வார்த்தையின் மகத்துவம் அதனை நாம் உபயோகப்படுத்தும் போதும் நமக்கு பிறர் நன்றி சொல்லி நாம் பயன் பெறும் போதும் அறிந்து கொள்ளலாம். நம்மை வாட்டி வதைக்கும் வருத்தத்தை விட்டொழித்து நல்ல உணர்வையும் உத்வேகத்தையும் தரும் நன்றி உணர்வில் வளர்வோம். நாம் நன்றி சொல்ல பழக ஆரம்பித்தாலே போதும் வருத்தம் கவலை என்னும் மாய உணர்வு நம்மை விட்டு நீங்கி விடும். எனவே அன்பு உள்ளங்களே இந்த தவக்காலத்தில் இறைவன் நமக்கு செய்த எல்லா நன்மைகளையும் நினைத்து பார்த்து நன்றி உணர்வு கொண்டவர்களாக வாழ முற்படுவோம்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...