Thursday, 3 March 2022

7. சுத்த போசனம்

விலங்கினங்களின் இறைச்சியை தவிர்ப்பது சுத்த போசனம் எனப்படும். இது விபூதி புதன் மற்றும் தவக்காலத்தின் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் கட்டாயம் கடைபிடிக்கப்படுகிறது. 14 வயதுக்கு மேற்பட்ட எல்லா கிறிஸ்தவர்களும் இதனை கடைபிடிக்க திருச்சபை வலியுறுத்துகிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், உடல் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள், அதீத உடல் உழைப்பு செய்பவர்கள், இதற்கு விதி விலக்கு. விலங்கினங்களின் இறைச்சிக்கு பதில் மீன்வகைகள் உணவாக உட்கொள்ளலாம். சுத்த போசனம் என்பது நமக்கு எளிதில் கிடைக்கக் கூடிய, நமக்கு மிகவும் விருப்பமான ஒன்றை இறைவனுக்காக தியாகம் செய்வது. அவ்வகையில் முதன் முதலில் சுத்த போசனம் இருந்தவர்கள். இருக்க பணிக்கப்பட்டவர்கள் ஆதாம் ஏவாள். ஏதேன் தோட்டத்தில் ஏராளமான பழங்கள் இருப்பினும் ஒரு மரத்தின் கனியை மட்டும் உண்ணக் கூடாது என்று இறைவனால் வலியுறுத்தப்பட்டார்கள். அத்தகைய சுத்த போசனத்தை கடை பிடிக்க முடியாமல் இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள். உடல் அளவில் மட்டுமல்லாமல் உள்ளத்தளவிலும் தங்களை தூய்மைப்படுத்துவதற்காகவே இந்த வகை ஒறுத்தல் தவக்காலத்தில் செய்யப்படுகிறது. நமது ஆசையின் அளவை வரையறுக்க, நம்மால் எதை துறக்க முடியும்? நமது பலம் பலவீனம் இவற்றை அறிந்து கொள்ளவும் இது உதவுகிறது. அது மட்டுமல்லாமல், நமது உணவு பழக்க வழக்கப்படி கறி வகைகள் சமைக்கும் பொழுது அதன் இரத்த வாடை தெரியாமல் இருக்க பயன்படுத்தும் அதிக காரமான மசாலா பொருட்கள் உடலில் சூட்டை ஏற்படுத்தும். உடல் சூடு ஏற்படும் போது தேவையற்ற சிந்தனைகளும் உணர்வுகளும் தோன்றும். கோபம் அழுகை வெறுப்பு போன்ற உணர்வுகள் நமது இயல்பு நிலையிலிருந்து நம்மை மாற்றி விடும். அதனால் தான் துறவு மேற்கொள்பவர்கள் உணவில் இத்தகைய பொருட்களை அதிக அளவில் சேர்க்காமல் கூடுமானவரை காய்கறிகளையே உண்பர். சாந்தமான மனநிலையில் இருக்கும் போது நம்முடைய சொல்லும் செயலும் சாந்தமானதாகவே அமையும். சுத்த போசனம் ஆன்மீக ரீதியில், விவிலிய ரீதியில், உடல் ரீதியில் என மூன்று அடைப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. ஸ்பிரிடுஅல், பிபிலிகல், அண்டு ஹெல்தி 1. நமக்கு மிகவும் பிடித்தமானதை கடவுளுக்காக தியாகம் செய்வோம். 2. நம்மை உடல் அளவிலும் மனதளவிலும் தூய்மையாக வைத்திருப்போம். சுத்த போசனத்தை முறையாக கடைபிடித்து தவக்காலத்தை சிறப்பித்து மகிழ்வோம். விலங்கினங்களின் உடலை உணவாக உண்பதை தவிர்த்து இறை இயேசுவின் திரு உடலை அனுதினமும் உண்ண தினத்திருப்பலியில் பங்கேற்போம். திரு உடலால் திவ்விய பரிபூரண பலன் பெறுவோம்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...