Friday, 11 March 2022
15. தவக்கால உண்டியல்;
உண்டி என்பதற்கு உணவு என்று பெயர். உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் உண்டி சுருக்குதல் பெண்டீர்க்கழகு என்பன தமிழில் இடம்பெறும் கூற்றுக்கள். உணவு மனிதனுக்கு மிக அத்தியாவசியமான அடிப்படையான ஒன்று. இந்த உணவானது எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் கிடைக்க வேண்டும் என்பது சராசரி மனிதனின் எதிர்பார்ப்பு. தன்னுடைய தேவைக்கு அதிகமாக இருப்பவற்றை அருகில் வசிக்கும் இல்லாதவருக்கு கொடுக்கும் வழக்கம் வந்தது. அதன் பின் உணவாக கொடுக்காமல் உணவிற்காக நாம் செலவழிக்கும் தொகையில் சிறு பகுதியை சேமித்து அதனை அவர்களுக்கு கொடுப்பது புழக்கத்தில் வந்தது. மேலும் பொதுவான காரியங்களுக்காகவும் பணம் சேமிக்கப்பட்டது.அவரவர் வீடுகளில் சேமிப்பதைக் காட்டிலும் மக்கள் அனைவருக்கும் பொதுவான இடமான ஆலயங்களில் காணிக்கையாக அளிக்கும் பழக்கமும் உருவானது.
இந்த உண்டியல் முறை கிரேக்க ரோமானிய நாகரிகத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை அங்கு நடந்த அகழ்வாராயிச்சிகளில் கண்டெடுத்த காசு சேர்க்க பயன்படுத்தப்பட்ட உண்டியல்கள் தெளிவுபடுத்துகின்றன. களிமண் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட உண்டியல்கள் தான் தொடக்கத்திலிருந்தன. மத்திய காலத்தில் உண்டியல் செய்ய ஆரஞ்சு வண்ணக்களிமண் பயன்படுத்தப்பட்டது. அதன் பெயர் பிக் அது காலப்போக்கில் மருவி பிக்கி பங்க் என்றானது. அதன் அடிப்படையிலேயே உண்டியல்கள் பெரும்பாலும் பன்றி வடிவத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் வீண் செலவுகளை தவிர்க்கும் பழக்கத்தை உருவாக்கவும் கொண்டுவரப்பட்டது இந்த உண்டியல் முறை.
தவக்காலத்தில் நம்மில் காணப்படும் ஒறுத்தல் முயற்சிகளில் உண்டியல் முறை சிறப்பானது. நம்முடைய தேவையற்ற வீண் செலவுகளை குறைப்பதற்கும், இல்லாதவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்வதற்கும் இம்முறை வழிவகுக்கிறது. பங்கு மக்களால் ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நம்முடைய தவக்கால உண்டியல் பணம் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. கொடுங்கள் கொடுக்கப்படுவீர்கள். அமுக்கி குளுக்கி சரிந்து விழும்படி தாராளமாக நாம் பிறருக்கு செய்யும் பொழுது இறைவனும் நமக்கு தாராளமாக செய்வார். நிறைவுள்ள வானக தந்தையின் பிள்ளைகள் நாம் என்பதை நம்முடைய நிறைவான செயல்களால் வெளிப்படுத்துவோம். நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம். உயர்ந்த மனிதர்களாய் மாறுவோம்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...