Friday, 11 March 2022
14. வெறுமையான பீடம்
தனிமை ஒன்றும் வெறுமை அல்ல நாம் விரும்பியவர்களுக்காக காத்திருக்கையில்.
ஆம் இத்தவக்காலம் முழுதும் நம்முடைய ஆலய பீடங்கள் பூக்களின்றி ஆடம்பர வேலைப்பாடுகள் இன்றி வெறுமையாக காட்சியளிக்கும். வெறுமை என்பது எளிமை. முழுமையான ஒன்றுமில்லாமை. இயற்பியல் விதிப்படி வெறுமையான இடத்திலும் காற்று இருக்கிறது. நம் ஆலயங்கள் பூக்கள் இன்றி ஆடம்பரங்கள் இன்றி இருக்கின்றன. ஆனால் வெளிப்படையான உண்மை இறைவன் அங்கு இருக்கிறார் உனக்காக இருக்கிறார் என்பதாகும். பூக்கள் ஆடம்பர வேலைப்பாடுகள் மகிழ்வின் அடையாளம். ஆனந்தத்தின் அடையாளம். இந்த மகிழ்வை ஆனந்தத்தை நான் இறைவனுக்காக தியாகம் செய்கின்றேன். ஆலய வெறுமையில் ஆண்டவனை நான் அதிகமாக உணர்கின்றேன் என்பதன் அடிப்படையிலேயே இந்த வெறுமையானது கடைபிடிக்கப்படுகிறது.
வசந்த காலம்தொடங்கும் முன் மரங்கள் தனது இலைகளை உதிர்த்து, வெறுமையாக தங்களை வெளிப்படுத்துகின்றன. பார்ப்போர் இதன் ஆயுட்காலம் முடிந்து விட்டது என்று எண்ணுவதில்லை. புதிய இலைகள் தோன்ற தன்னை தயார் படுத்துகிறதே என்றே எண்ணுவர். அது போல் தான் நம்முடைய இந்த தவக்கால வாழ்வும். நாம் நம்முடைய பழைய இயல்புகளை களைந்து, கிறிஸ்துவின் புதிய இயல்புகளால் நிரப்பப்பட இருக்கின்றோம் என்பதை உணர்த்தவே இந்த வெறுமை. இந்நாட்களில் சிலர் ஆடம்பரமாக உடை உடுத்துவதையும், பெண்கள் தங்களை அழகுபடுத்தும் பூ பொட்டினை தியாகம் செய்வதையும் காண்கிறோம். இறைவனுக்காக தங்களது உள்ளத்தளவில் மட்டுமன்று உடல் அளவிலும் வெறுமையை கடைபிடித்து வாழும் தவ மனிதர்கள் இவர்கள். பொருளற்ற வெறுமையும் உப்பு சப்பற்ற விரக்தியும் நம்மை பாதிக்கவிடாது, தாங்கியிருந்த பூக்களை உதிர விட்டு புதிய பூக்களின் வருகைக்காக காத்திருக்கும் மரங்கள் போல வெறுமையின் வெற்றியை கொண்டாட காத்திருப்போம். வெறுமை ஒன்றும் துன்பமில்லை நாம் விரும்பியவர்களுக்காக காத்திருக்கையில்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...