Sunday, 20 March 2022

நாவடக்கம்

நாவு நம் உடலின் சிறிய உறுப்பு தான் என்றாலும் வீம்புகளை பேசும் நாவு நெருப்பைப் போன்றது. யாக்கோபு 3; 5 சின்ன செயல்கள் சின்ன வார்த்தைகள் சின்ன பாவங்கள் மனித வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆதாம் ஏவாளின் சின்ன கீழ்ப்படிதலின்மை உலக மக்கள் அனைவருக்கும் பாவத்தைக் கொண்டு வந்தது, தாவீது அரசரின் சிறிய பாவம் அவருக்கு மன வேதனையையும் வருத்தத்தையும் ஆசீர்வாத இழப்பையும் தந்தது. சிரியா தேசத்து பெண்ணின் சிறிய வார்த்தை நாமானுக்கு பெரிய விடுதலையை தந்தது. சிறுவனின் சிறிதளவு அப்பமும் மீனும் ஐயாயிரம் பேருக்கு உணவளிக்க வழிவகுத்தது. இப்படி விவிலியத்தில் சின்ன சின்ன செயல்கள் பெரிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. நன்மை செய்தவர் நன்மையையும் தீமை செய்தவர் தீமையையும் அனுபவிக்கின்றனர். பெரிய குதிரைக்கு சின்ன கடிவாளம், பெரிய கப்பலுக்கு சின்ன சுக்கான் போல நமது உடலுக்கு நம் நாவு. நம் உணர்வுகளையும், நினைவுகளையும் வார்த்தை மூலம் வெளிப்படுத்த உணவை ருசிக்க இறைவன் படைத்த அற்புதமான உறுப்பு. வாழ்வும் சாவும் நம் நாவிலே என்கின்றனர் அனுபவப்பட்ட அறிஞர்கள். நமது இதயத்தின் நிறைவையே வாய் பேசும். நமது இதயம் அன்பாலும் நல் எண்ணங்களாலும் நிரப்பப்பட்டிருந்தால் நல்லவை மட்டுமே நம் நாவிலிருந்து வெளிவரும். நாவின் பாவங்கள் என்று விவிலியத்தில் 18 விதமான செயல்கள் கூறப்படுகின்றன. அவைகள் பொல்லாங்கு, சண்டை சச்சரவு, வஞ்சகம்,அவதூறு பேசுபவர்கள், கடவுளை இழித்துரைத்தல், செருக்கு, வீம்பு பாராட்டுதல், பெற்றோருக்கு கீழ்ப்படியாமை எதிர்த்து பேசுதல். சொல் தவறுதல், மதி கெட்டு உரையாடுதல் பாசமற்ற சொல், இரக்கம் இல்லாத சொல், பழி தூற்றுதல், கொள்ளையடிப்பவர். வெட்கக்கெட்ட பேச்சு, மடத்தனமான பேச்சு, பகடி பண்ணுதல் பழிப்புரை வெட்கங்கெட்ட பேச்சு, வீண்விவாதம், புறங்கூறுதல், இவை அனைத்தும் நாவின் பாவங்களாக கருதப்படுகின்றன. வீண் வார்த்தைகளால் நம் வாழ்வை அழிக்காமல் நல்ல வார்த்தைகளை உபயோகப்படுத்துவோம். நம்முடைய நாவிலிருந்து வரும் வார்த்தைகள் நமக்கும் பிறருக்கும் பயனுள்ள வார்த்தைகளாக வாழ்வளிக்கும் வார்த்தைகளாக இருக்க முயற்சிப்போம். இயேசுவின் வார்த்தையினால் வாழ்வடைந்தவர்கள் பலர். அவரது வார்த்தை வல்லமை உடையதாய், அதிகாரமுடையதாய், மனிதனுடைய தேவையை சந்தித்து நிவர்த்தி செய்வதாய் கடவுளை மகிமைப்படுத்துவதாய் இருந்தது. நயீன் ஊர் கைம்பெண் மகன் அவரது ஒரு வார்த்தையினால் உயிர் பெற்றான். நூற்றுவர் தலைவன் மகள் உயிர் பெற்றது, பணியாளர் சுகம் பெற்றது, லாசர் உயிர் பிழைத்தது, இவை எல்லாம் அவருடைய வார்த்தையின் வலிமையினால் நிகழ்ந்தது. பரிசேயர் சதுசேயர் வாயை தம் வார்த்தை திறமையால் அடைத்தார். அவரது வார்த்தை நம்பிக்கையை புதுவாழ்வை, கொடுத்தது. நமது நாவும் அவரது நாவைப் போல செயல்பட முயல்வோம். நாவின் பாவங்களை விடுத்து நாவினால் பிறருக்கு பயனுள்ள பல செயல்கள் செய்திடுவோம். நாவடக்கம் கொண்டு நல் வாழ்வு வாழ்ந்திடுவோம்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...