Wednesday, 2 March 2022
6. ஒரு சந்தி
ஒரு சந்தி சந்தி சந்திப்பு காலையும் மாலையும் இணையும் நேரத்தை சந்தியா பொழுது என்பார்கள். சந்தி இலக்கணம் இல்லாமல் தமிழ் மொழிக்கு அழகில்லை. இன்று நாம் அறிய இருப்பது ஒரு சந்தி. தொடக்க காலத்தில் ஒரு வேளை உணவு மட்டும் உண்பது தான் ஒரு சந்தி எனப்பட்டது. இப்போது ஒரு வேளை உணவையாவது தியாகம் செய்வது என்று மாறிவிட்டது. தவ நாட்களில் நம்முடைய ஆசைகளை ஒறுத்து இருக்கும் உணவில் ஒரு பகுதியை இல்லாதவர்க்கு கொடுக்க எண்ணி ஆரம்பிக்கப்பட்டது. முக்கியமான திருச்சபை திருநாட்களுக்கு முன்பும் தவக்காலங்களிலும் இது அதிகமாக கடை பிடிக்கப்படுகிறது. ஒரு சந்தி நோன்பு உண்ணாவிரதம் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இதன் நோக்கம் ஒன்று தான். உலக செயல்பாடுகளில் இருந்து நம்மை விடுவித்து இறைவனோடு ஒன்றிணைவது.
விவிலியத்தில் 70 முறை நோன்பு என்ற சொல்லாடலும் செயலும் பயன்படுத்தப்படுகிறது. மோசே சீனாய் மலை ஏறி பத்து கட்டளைகளை பெறும் முன் 40 நாள் பகலும் இரவும் நோன்பிருந்தார் .
தோரா நூல்கள் முழுதும் நோன்பு கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
நீதி தலைவர்களும் அரசர்களும் தங்களுடைய தூய வாழ்விற்கு நோன்பு மூலம் வலிமை சேர்த்தார்கள்.
எஸ்தர் தன் நாட்டை காப்பாற்ற மூன்று நாள் தன் தோழியர்களுடன் நோன்பிருக்கிறார்.
எசாயா 58 ல் நோன்பு என்பது வலிமைமிக்க ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.
தானியேல் மூன்று வாரங்கள் நோன்பிருந்து கனவுக்கு விளக்கம் பெற்றார்.
இயேசு நோன்பிருந்து செபித்து தன்னுடைய பணி வாழ்விற்கான திடன் பெற்றார். அப்போஸ்தலர்களும் அவரைப் பின்பற்றி கிறிஸ்தவத்தை தழுவியவர்களும் நோன்பிருந்து தங்களையே புதுப்பித்துக் கொண்டனர்.
இப்படியாக திரு விவிலியம் முழுக்க நோன்பிருந்து இறை வேண்டல் செய்து தங்களை மேன்மைப்படுத்திக் கொண்டவர்கள் பலர்.
5ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிப்போகிரெட்டீஸ் என்பவர் தன்னுடைய உடல் நலனுக்காக முதன் முதலில் நோன்பிருக்க ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. அவரைத் தொடர்ந்து முக்கிய வழிபாடுகளுக்கு முன்னும் பின்னும் நோன்பிருந்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வது திருச்சபையில் வழக்கமானது. தொடக்கத்தில் நோன்பு, வெற்றி பெற, அற்புதங்கள் நிகழ, வேண்டுதல் மன்றாட்டுக்கள் கேட்கப்பட என மூன்று முக்கிய காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டன. இன்றைய காலகட்டத்தில் கடவுள் மீது அதிக கவனம் செலுத்த, நமது விருப்பத்தை விட இறை விருப்பம் அறிய, நமக்கு மிகவும் பிடித்தமானதை தியாகம் செய்ய உதவுகிறது. அதிலும் சிலர் உடல் நலன் பேனுவதற்காக இந்த நோன்பு நாட்களை அனுசரிக்க முயல்கின்றனர். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். இத்தகைய ஒரு சந்தி நோன்புகளை நாம் மேற்கொள்ளும் போது தன்னடக்கம் நாவடக்கம் கோபத்தைக் கட்டுப்படுத்துதல், உணவு கட்டுப்பாடு சமூக நலன் பேனுதல் போன்ற பண்புகள் நம்மில் வளர்கின்றன.
இயேசு நாற்பது நாள் பாலைவனத்திலே நோன்பிருந்தது, உடலை வருத்திக்கொள்ளமட்டுமல்ல. கடவுளோடு நெருங்கிய உறவு கொண்டாட, ஆன்மீக விடுதலை பெற, வழிகாட்ட. இயேசு போல நாமும் இந்த தவ நாட்களில் நோன்பிருந்து ஒரு சந்தி மேற்கொண்டு இறையோடு இணைவோம். முகவாட்டமின்றி புத்துணர்ச்சியோடு நம்முடைய நோன்பு நாட்களை அனுசரிப்போம். ஒரு சந்தி இருக்க முயல்வோம் உணவில் மட்டுமல்ல, சமூக வலை தளத்தில், தேவையற்ற பேச்சில், விவிலிய வாசிப்பில், மாற்று வேலைகளில். மறைமுகமாக செய்வோம். மறைவாய் உள்ளதைக் காணும் நம் வானக தந்தை அருள் வரங்களால் நம்மை மகிமைப்படுத்துவார்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...