Sunday, 20 March 2022
குறை கூறும் பழக்கம்
குறை கூறும் பழக்கம்
எதிலும் குறை காண்பவர்களுக்கு ரசிக்க தெரியாது எதையும் ரசிப்பவர்களுக்கு குறைகளே தெரியாது. பிறரைப் பற்றி உன்னிடம் குறை கூறுபவர்கள் நாளை உன்னை பற்றியும் பிறரிடம் குறை கூறுவார்கள். குறை கூறும் பழக்கம் இயந்திரம் போல சிலருடைய மனங்களில் ஓடிக்கொண்டே இருக்கும். இப்படி குறை கூறுபவர்கள் நிறைவாக இல்லை நிறைந்த மனதுடையவர்களாக இல்லை என்றே எண்ண வேண்டும். குறை கூறுதல் ஒரு தொற்று நோய் போல ஒருவர் மற்றவரிடம் இருந்து எளிதில் பரவுகிறது. சிறு வயது முதலே இதற்கு நாம் பழக்கப்பட்டு விட்டோம். கல்லில் கால் மோதிக் கொண்டால் கல் என்னை இடித்து விட்டது என்று சொல்ல தொடங்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது நமது குறை கூறும் பழக்கம். நான் கல்லில் மோதிக்கொண்டேன் என்று சொல்ல தொடங்கும் போதே நம் எண்ணங்களும் ஒரு செயலை நாம் எந்த கோணத்தில் பார்க்கிறோம் என்பதும் மாறுபடும். அடுத்தவர்களை மட்டம் தட்டும் போது நம் தரம் உயர்ந்து விடுவதாக எண்ணியே பல நேரங்களில் அதனை செய்கின்றோம். உண்மையில் அடுத்தவர் மேல் உள்ள குறையைப் பெரிதாக எண்ணுகிறோம் என்றால் நமது குறையை நாம் மறைக்க எண்ணுகிறோம் என்றே அர்த்தம். நமக்கு பிடித்தவர்களை பற்றி நாம் ஒருபோதும் குறை சொல்வது கிடையாது. பிடிக்காத நபர்களையே அதிகமாக குறை சொல்கிறோம். நமக்கு அந்த நபரை பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறோம். தன்னுடைய வளர்ச்சிக்காக, தன் உயர்ந்த நிலைமையை தக்க வைத்துக் கொள்ள, பிறரது மதிப்பைக் கெடுக்க குறை கூறுதல் செய்யப்படுகிறது. நம்முடைய அலுவலகப்பணிகளை மட்டுமல்ல குடும்ப உறவையும் சீர்குழைக்கும் சக்தி கொண்டது. நம்மைப்பற்றிய தவறான ஒரு புரிதலையும் பிறரிடம் ஏற்படுத்தும். நாம் குறை கூறும் பழக்கம் உடையவர்கள் என்று பிறர் உணர்ந்தால் அவர்கள் அடுத்த முறை எளிதில் நம்மை அணுக முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். பயத்தின் வேர்களிலிருந்து இந்த குறை சொல்தல் என்னும் பழக்கம் உருவாகிறது. எவனொருவன் தன்னை முழுமையாக நம்பாமல் செயல்படுகிறானோ அவன் பிறரைப் பற்றி குறை கூறுவான். ஈகோ தான் என்னும் முனைப்பு என்னும் ஆலமரத்தின் கிளைகள் என்று கூட சொல்லலாம். இதனை முளையிலேயே கிள்ளி களைந்து விடுதல் நம் வாழ்விற்கு நல்லது. இந்த குறை கூறும் பழக்கத்திலிருந்து விடுபட எளிமையான வாழ்வை நாம் மேற்கொள்ள வேண்டும். பொருள்களில் காட்டும் எளிமையை விட வாழ்வில் எளிமையை செயல்படுத்துதல் நன்று. நம்முடைய நடை உடை பாவனைகளில் எந்த விதமான மிடுக்கோ ஆடம்பரமோ இன்றி எளிமையாக பிறரிடம் பழகும் போது மிகவும் எளிமையான மனிதர் இவர் என்று எளிதில் பிறரால் அடையாளம் காட்டப்படுவோம். ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் பேசும் போது கூடுமானவரை நல்லதையே பேசுவோம். நம் வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகள் எதிரில் இருப்பவருக்கு மகிழ்வை, நல்லதை, ஆறுதலை மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட ஆரம்பிப்போம் நாளடைவில் இந்த குறை கூறும் பழக்கம் நம்மிடம் இருந்து அடியோடு மறைந்து விடும். தவக்காலத்தில் இருக்கும் நாம் நம்முடைய சொல்லால் செயலால் வாழ்வால் நாம் உண்மைக் கிறிஸ்தவர்கள் என்பதை எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். பிறர் குறையைக்காண்பவன் அரை மனிதன் தன் குறையை காண்பவன் முழு மனிதன். உன் ஆள்காட்டி விரலால் பிறரின் குறையை சுட்டிக்காட்டும் பொழுது மீதமுள்ள நாங்கு விரல்களும் உன்னை குறிவைக்கின்றன என்பதை மறக்கதிருப்போம்.
எனவே திருத்தந்தை சொல்வது போல குறை கூறும் பழக்கத்தை விட்டொழித்து எளிமையான வாழ்வு வாழ முற்படுவோம்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...