Thursday, 3 March 2022

9. காவி உடுத்துதல் , மாலை போடுதல்.

காவி நிறம் துறவிகளின் நிறம் என்று சொன்னால் மிகையாகாது. முன்னி முடிக்கு முனி என்பது துறவிகளுக்கு கொடுக்கப்படும் ஒரு அடை மொழி அதாவது நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் திறம் படைத்தவன் துறவி. மனம் வாக்கு செயல் மூன்றும் ஒன்றிணைந்து செயல்படுபவன். காவி உடை .... மனிதர்கள் ஆடை அணியும் பழக்கம் யார் கொண்டு வந்தது என்பது பற்றி தெளிவான வரலாறு எதுவும் இல்லை. ஆனால் எப்படிபட்ட ஆடைகளை அணிந்தார்கள் என்பதற்கு பல வகையான் ஆதாரங்கள் உள்ளன. உடுக்கை துணி ஆடை உடுப்பு குப்பாயம் மெய்ப்பை பட்டுடை கலிங்கம் புடவை கச்சு தானை படாம் சங்க கால ஆடை வகைகள். தட்ப வெப்ப நிலைக்காக, பிற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தி காட்ட, அடையாளப்படுத்த, அழகு சேர்க்க, கலை உணர்வை வெளிப்படுத்த ஆடைகளை நாம் அணிகின்றோம். தவத்தையும் ஒறுத்தலையும் முதன்மையாக கருதும் இத்தவக்காலத்தில் சிலர் காவி உடை அணிந்து தவ வாழ்வை வாழ பயிற்சிக்கின்றனர். உண்ணுதல் உன் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைய வேண்டும், உடுத்துதல் பிறர் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைய வேண்டும். என்ற வரிகளை கடந்து உண்ணுதலும் உடுத்துதலும் தன்னை இறை நம்பிக்கையில் ஊன்றி நெறிப்படுத்தவே இத்தவக்காலம் என்று வாழ்கின்றனர். காவி நிறம் இம்மண்ணுக்கான நிறம் எந்த மதத்திற்கான நிறமும் இல்லை. துறவிகளின் ஆடை கோவில்களில் சுவர்கள் என்று நம் நாட்டில் அனைத்தும் காவி நிறத்தில் இருப்பதற்கு காரணம் இம்மண்ணோடு கொண்டிருக்கும் தொடர்பை வெளிப்படுத்தவே. தொடக்கத்தில் கோவில்களின் சுவர்களுக்கு வர்ணம் பூச செம்மண்ணை குழைத்து பயன்படுத்தினர். துறவிகள் எந்த நிறமும் எங்களுக்கு சொந்தமானதல்ல நாங்கள் மண் போன்றவர்கள் எங்களைப் போல எங்கள் உடையும் மண்ணை சார்ந்த்து என்பதை உணர்த்தவே காவி நிறம் உடுத்தியதாக கூறுவர். இந்த உடலே மண் தான் உடல் நிலையில் மன நிலையில் ஆரோக்கியமாக இருக்க மண்ணோடு தொடர்பில் இருக்க வேண்டும். இந்த தொடர்பை உறுதி செய்ய தான் நாம் தரையில் அமர்ந்து உண்பது உறங்குவது போன்ற காரியங்களை சாதராணமாக செய்கின்றோம். இதை ஆழப்படுத்திக் கொள்ள தான் துறவிகள் தங்கள் உடைகளை மண்ணில் தோய்த்து அணிந்ததாக கூறுவர். மண்ணோடு கொண்ட உறவு நமக்கு பூமித் தாயின் கருப்பையை நினைவு படுத்தும். அப்போது நாம் புத்துணர்ச்சியுடன் இருப்போம். ஒரு செல் உயிரியாய் இருந்த நாம் வளர்ச்சி அடைந்து இவ்வளவு பெரிய உயிராய் வளர்வதற்கு காரணமே தாயின் கருவறை தானே. காவி நிறம் நாம் பூமித்தாயின் கருவறையில் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்த்தும். இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் தவக்காலத்தை நாம் தொடங்கியதே மண் போன்ற சாம்பல் பூசி தான். மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் என்று நம் நெற்றியில் பூசப்பட்ட சாம்பல் கூட இதை நினைவு படுத்தவே. இந்த காவி உடை தவக்காலத்தில் அணியப்படும் போது அணிபவர்க்கும் அவர் குடும்பத்தார்க்கும் எல்லையற்ற இன்பம் ஏற்படுகிறது. குடி புகை போன்ற தீய பழக்க வழக்கங்களின் வாடைஏதுமின்றி, தங்களுக்கு மிகவும் பிடித்த கறி மீன் வகைகளை ஒறுத்து, சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று மாறும் மனிதர்களை யாருக்கு தான் பிடிக்காது . இதற்காகவே வருடம் முழுதும் தவக்காலத்தை எதிர்பார்க்கும் தாய்மார்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அது மட்டுமன்று காவி உடை அணிபவர்கள் இத்தவக்காலத்தில் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பது போன்று உணர்கின்றார்கள். அவர்களை சுற்றி இருப்பவர்களும் இறைப்பிரசன்னத்தை அவர்களில் உணர்கின்றார்கள். இதுவரை இருந்த சராசரி வாழ்வு மாறி தூய வாழ்வு வாழ முயற்சிக்கின்றார்கள். காவி உடை நாம் கிறிஸ்துவில் வளர்கிறோம், மண் போன்றவர்கள், தவ வாழ்வு வாழ முயற்சிப்பவர்கள் என்பதை எடுத்துரைக்கிறது. எனவே இத்தவக்காலத்தில் காவி உடை உடுத்தி களங்கமில்லா நம் தூய வாழ்வை இறைவனுக்கு காணிக்கையாக்குவோம். இறைப்பிரசன்னத்தின் அடையாளமாக தெய்வ பக்தியை பரப்பும் மனிதர்களாக காவி உடையில் கருணையின் வடிவங்களாவோம்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...